வேத கணிதம் என்பது தமிழ்க் கணிதமே
ஆய்வாளர் இரா. மதிவாணன்
அண்மைக் காலத்தில் பிராமணர் என்னும் ஆரிய இந்தியர் வேத கணிதம் (Vedic Mathematics) என ஒன்று இருப்பதாக உலக நாடுகள் அனைத்தையும் ஏமாற்றி வருகின்றனர்.
இருக்கு வேதத்தை ஆங்கிலத்தில் முழுமையாக மொழிபெயர்த்த கிரிபீத் போன்ற மேனாட்டறிஞர்களும் இருக்கு வேதத்திற்கு சமற்கிருதத்தில் உரையெழுதிய சாயனர் போன்ற ஆரியப் புலவர்களும் கூட வேதங்களில் கணிதம் இருப்பதாகக் குறிப்பிடவில்லை.
கி.மு.800 முதல் கி.மு. 500 வரைப்பட்ட காலத்தில் ஆரண்யகங்களும் பிரமாணங்களும் தொகுக்கப்பட்டன. இறுதியில் தொகுக்கப்பட்ட சதபத பிரமாணத்தில் “வேதத்திரையி” அதாவது வேதங்கள் மூன்றே எனக் கூறப்பட்டுள்ளன. இருக்கு வேதத்திலிருந்து பிரிந்த யசுர் சாமவேதங்களிலும் கணிதத்தைப் பற்றிய குறிப்புகள் இல்லை.
வேத கணிதம் என்னும் புளுகு மூட்டை
சதபத பிரமாணம் தொகுக்கப்பட்ட கி.மு. 500க்கும் பாரதம் தொகுக்கப்பட்ட கி.மு. 200க்கும் இடைப்பட்ட காலத்தில்தான் புதிதாகத் தொகுக்கப்பட்ட மந்திர மாயங்கள் அடங்கிய அதர்வண வேதம் தலை காட்டியது. ஆரிய இந்தியராகிய பிராமணர் தென்னாட்டில் குடியேறிய பின்னரே அதர்வண வேதம் தோன்றியிருப்பது எதைக் காட்டுகிறது?
தென்னாட்டு நாட்டுப்புற மாய மந்திரங்கள் வடமொழியில் மொழிபெயர்க்கப்பட்டதையே காட்டுகிறது. தென்னாட்டு மாய மந்திரங்கள் தொல்காப்பியர் திருவள்ளுவர் போன்ற சான்றோர்களால் ஏற்கப்படவில்லை. கல்லாத மக்களின் மூடநம்பிக்கைகளுக்கு வடமொழி வடிவம் தந்து வேள்வி மந்திரங்களாக்கி மக்களின் அறியாமையை அறுவடை செய்து பணம் திரட்டுவதற்கு இது வழி வகுத்தது.
கி.பி. மூன்றாம் நூற்றாண்டு அளவில் அதர்வண வேதத்தில் இடைச் செருகலாக 16 கணக்கு நூற்பாக்கள் சேர்க்கப்பட்டன. இது குப்தர் காலத்துத் திருவிளையாடல் எனலாம். மீண்டும் பல்லவர் காலத்தில் 13 துணை நூற்பாக்கள் சேர்க்கப்பட்டன.
இவையனைத்தும் தமிழிலிருந்து களவாடப்பட்டவை. இவை தமிழ்த் திண்ணைப் பள்ளிக் கூடங்களில் மனக் கணக்குகளாகச் சொல்லித் தரப்பட்டவையே. தென்னாட்டில் பிராமணக் குடியேற்றம் நன்கு பரவிய பிறகு அதர்வண வேதம் தொகுக்கப்பட்டதால் தமிழ்த் திண்ணைப் பள்ளிக்கூட மனக்கணக்குகளை அவற்றின் அருமை நோக்கி ஒரு தொடர்பும் இல்லாமல் பின்னிணைப்பாகச் சேர்த்துள்ளனர்.
கி.பி.1911 - 1918 கால வரம்பில் பாரதி கிருட்டிண தீர்த்தர் என்பவர் இவற்றை வேத கணிதம் என்னும் பெயரில் பரப்பத் தொடங்கினார். இவரையடுத்து பூரி சங்கராச்சாரியார் 1965-இல் அதர்வண வேதத்தில் கணிதக்கலை இருப்பதைத் தான் கண்டுபிடித்து விட்டதாகக் கதையளந்தார்.
சொல்லவா வேண்டும்! இந்தியா முழுவதும் பார்ப்பன வட்டாரங்கள் வரிந்து கட்டிக் கொண்டு அனைத்துச் செய்தி ஊடகங்கள் அவர்கள் கையில் இருப்பதாலும் அரசியல், கல்வி, சமயச் சாய்கால்கள் துணை நிற்பதாலும் உலகெலாம் வேத கணிதம் பற்றிய புளுகு மூட்டையைப் பூதவடிவாக்கி மாபெரும் பொய்யை, மாபெரும் உண்மையாக்க முயன்று வருகின்றனர்.
அதர்வண வேதத்தில் எந்தக் காலத்தில் எங்கிருந்து யாரால் நுழைக்கப்பட்டது என்னும் உண்மைகளை முற்றிலும் மறைத்து வருகிறார்கள். இதுவும் போதாதென்று இரண்டாண்டுகளுக்கு முன்பு வேங்கிபுரம் வே.சீனிவாசன் என்பவர் வெளியிட்ட சூடாமணி சூத்திரம் என்னும் ஆங்கில நூலையும் வேதக்கணிதப் பட்டியலில் சேர்த்துக் கொண்டார்கள்.
இனி இராமானுசனின் கணக்கையும் வேதக் கணக்கு என்று நிலைநாட்டி வருவார்கள். உலக அறிஞர்களை அத்துணை எளிதில் ஏமாற்ற முடியுமா என்று ஒரு கணமும் இவர்கள் எண்ணிப் பார்க்கவில்லை.
வடமொழியாளர்களின் வாயடி கையடி
தமிழிலிருந்து சமற்கிருதத்தில் மொழி பெயர்த்த பின் தமிழ் நூலின் பெயரையும் மூல நூலாசிரியரின் பெயரையும் குறிப்பிடுவதில்லை. அவற்றைத் தமதே என வாயடி கையடி செய்யும் வரலாற்றுப் புரட்டை பார்ப்பனர்கள் தொடர்ந்து செய்து வருவதை சூரிய நாராயண சாத்திரி என்னும் பரிதிமாற் கலைஞர் வன்மையாகக் கண்டித்தார்.
பார்ப்பனரிலும் உண்மையானவர்களும் நேர்மையானவர்களும் இருக்கிறார்கள் என்பதைப் பரிதிமாற் கலைஞர்கள் நிறுவிக் காட்டியுள்ளார். பாரத காலத்துக் கரிய நிறக் கண்ணன் இப்பொழுது இருந்திருந்தால் புதிய கீதையில் பிராமணர்களில் நான் பரிதிமாற் கலைஞராக இருக்கிறேன் என்று பாடியிருப்பார். “ஆரியரின் சித்தாந்தம். சமய நாகரிகம், நுண் கலைகள், அறிவுக் கலைகள் எனத் தெரியாத்தனமாகக் கூறப்படுவன அனைத்தும் அடிப்படையில் தமிழரிடமிருந்து பெறப்பட்டனவே” எனப் பேராசிரியர் சுந்தரம்பிள்ளை எடுத்துக் காட்டினார்.
ஆரிய பட்டனின் அண்டப்புளுகு
ஆரிய பட்டன் பாடலிபுரத்தில் கி.பி. 476 இல் பிறந்தவன். பிரம்ம சித்தாந்தம் படித்து அதன் வழி நூலாக ஆரிய பட்டீயம், ஆரிய பட்டீய சித்தாந்தம் என்னும் இரு கணித நூல்களை இயற்றினான்.
நாளந்தா பல்கலைக் கழகத்தின் தலைவராக இருந்தபோது பற்பல நூற்களிலிருந்து இவன் திருடி திரட்டியவை இவன் பெயரில் நூல்களாக வெளிவந்தன. பூமி தன்னைத்தானே சுற்றிக் கொள்கிறது என்பதை முதன் முதல் இவன் கண்டுபிடித்ததாகப் பொய் சொல்லியிருக்கிறான்.
மாணவன் கேட்கும் வினாக்களுக்கு ஆசிரியர் செப்பலோசையில் அமைந்த வெண்பா வடிவில் விடை அளிப்பது பல்லாயிரம் ஆண்டுகளாகப் பின் பற்றப்பட்டு வரும் தமிழ் மரபு.
இந்த மரபைத் தழு வியே இவன் தன் நூலை வினா-விடை அமைப்பில் தந்திருக்கிறான்.
ஆரிய பட்டீயம் என்னும் கணித நூல் வெறும் 121 நூற்பாக்களைக் கொண்டது. இதிலிருந்தே இது மொழிபெயர்ப்பு எனத் தெளிவாகத் தெரிகிறது. தமிழில் எழுத்துகளே எண்களாக இருப்பதை அறிந்து சமற்கிருதத்தில் முதன் முதலாகச் சமற்கிருத எழுத்துகளையே எண்களாக ஆளும் முறையைப் புகுத்தினான். இதிலிருந்தும் அவன் நாளந்தா நூலகத்தில் மொழி பெயர்த்த கணக்கு நூல் உறுதியாகத் தமிழ் கணக்கு நூலாக இருக்க வேண்டும் என்பது உறுதிப்படுகிறது.
சமற்கிருதத்தில் வருக்க எழுத்துகளாக (க.... ம வரை) உள்ள 25 எழுத்துகளையும் சமற்கிருத ஏறுவரிசை எண்களாக மாற்றிக் கொண்டான். ய - 30, ர - 40, ஹ - 100 எனப் பதின் மதிப்புகளை உருவாக்கிக் கொண்டான். இவனுக்குக் கணக்கு சரியாகத் தெரியாது. அது மட்டு மன்று. சரியாக மொழி பெயர்க்கவும் தெரியவில்லை என்பதற்கு இரு சான்றுகளைக் காட்டலாம்.
வட்டத்தின் சுற்றளவுக்கும் விட்டத்துக்கும் உள்ள இயைபு 22/7. இதனைத் தமிழரிடமிருந்தே கிரேக்கரும் ஏனைய நாட்டாரும் கற்றனர். இதன் உண்மையான மதிப்பு 3.142857. இந்தச் சிறிய உண்மையைக்கூட ஆரியபட்டன் விளங்கிக் கொள்ளவில்லை. இதன் மதிப்பை ஆரிய பட்டன் 3.146 எனத் தவறாகக் குறித்திருக்கிறான்.
நூலின் இறுதியில் “தன் கணக்கில் யாரும் தவறு காணக் கூடாது. குறை கூறினால் தாம் செய்த புண்ணியம் அனைத்தும் இழந்து விடுவார்கள். வாழ்நாள் குறைந்து போய்விடும்” எனச் சாபம் தந்து அச்சுறுத்தியுள்ளான். இதுவா அறிவாளியின் அடையாளம்!
வராகமிகிரனின் வானநூலும் பழந்தமிழர் வான நூற்கலையின் மொழிபெயர்ப்பு என்பதற்கான சான்றுகள் உள்ளன.
பழந்தமிழரின் மருத்துவம், வானநூல், கணிதம், கட்டடக்கலை போன்ற பல்வேறு புலத்துறைகளில், கடைக்கழகக் காலத்திலும் களப்பிரர், குப்தர், பல்லவர் காலங்களிலும் சமற்கிருதத்திற்கு மொழிபெயர்ப்பு வாயிலாகச் சென்றவை எண்ணிறந்தன.
அம்மொழிபெயர்ப்பிலுள்ள குளறுபடிகளே அவை தமிழிலிருந்து மொழி பெயர்க்கப்பட்டவை எனக் காட்டிக் கொடுத்து விடுகின்றன.
இதனை மேனாட்டுச் சமற்கிருத ஆராய்ச்சி மாணவர்கள் தனி ஆய்வாக மேற்கொள்ள வேண்டும். சான்றாக ஒன்று காட்டலாம். தமிழ் மருத்துவ நூல்களைச் சமற்கிருதத்தில் மொழி பெயர்க்கும்போது நெய்தல் பூவைச் சமற்கிருதத்தில் எப்படி மொழிபெயர்த்துச் சொல்ல வேண்டும் எனத் தெரியவில்லை. நெய் என்பதை மட்டும் சமற்கிருதத்தில் கிருதம் (நெய்) என மொழி பெயர்த்து கிருத புஷ்பம் எனப் புதிய சொல்லாக்கிக் கொண்டார்கள். நெய்க்கும் நெய்தல் பூவுக்கும் ஏதேனும் தொடர்பு இருக்கிறதா என்று அவர்களைப் படைத்த நான்முகனுக்கே தெரியாது.
தமிழ் கணிதத்தின் தொன்மை
தமிழ் கணிதம் 10,000 ஆண்டுத் தொன்மையுடையது. உலகிற்கு 1, 2, 3... எனும் எண் வடிவங்களை வழங்கியது தமிழ்மொழி. சுழியத்தை (சைபர்) உலகிற்கு வழங்கியது தமிழ். ஏழு நாள் வாரம் 365 நாள் ஆண்டு, 27 நாண்மீன் வட்டம் வட்டத்தின் பரப்பு, சுற்றளவு நூற்பாக்கள் என எண்ணிறந்த கணிதம் மற்றும் வானநூற்கலைகளின் அரிய அடிப்படை உண்மைகளை உலக நாகரிகத்திற்கு வழங்கியது தமிழ் என்னும் மாபெரும் உண்மைகளை உலக வரலாற்றிலிருந்து மறைக்க முடியாது என்பதை வரலாற்றுப் புரட்டர்கள் உணர வேண்டும்.
முந்திரி வாய்பாடு தமிழர்க்கே உரியது. மனக்கணக்குகளும் திண்ணைப் பள்ளிக்கூடத்தின் சிறப்பான பாடத்திட்டம். “கட்டுக்கலங் காணும் கதிர் உழக்கு நெல்காணும்” என்பதும் மனக் கணக்கைச் சார்ந்தது. தமிழ் மனக்கணக்கு முறையே சப்பான் நாடு வரை ABACUS என்னும் புதிய பெயரில் புத்த மதத்தைத் தமிழ் புத்தத் துறவிகள் வாயிலாகப் பரவியுள்ளது.
ஒரு வேலி நிலத்தில் நெல் எவ்வளவு விளையும் எள் எவ்வளவு விளையும் இதில் ஆறில் ஒரு பங்காக அரசனுக்கு வரியாகச் செலுத்தத்தக்கது எவ்வளவு என முன்கூட்டியே திட்டமிடப்பட்டது.
தமிழரின் நில அளவை முறைகளையும் சிந்துவெளித் தமிழரின் கணக்கீட்டு முறைகளையும் ஆய்ந்த மேனாட்டு அறிஞர்கள் பெரிதும் வியப்பில் ஆழ்ந்தனர். தமிழர் நாகரிகம் கணிதத் துறையில் பெற்ற வெற்றிகள் பல்லாயிரம் ஆண்டு தொன்மைக்குச் சான்று பகர்கின்றன.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|