அழகாய் இருப்பது எப்படி?
Adoration என்கிற சொல்லுக்கு ஆங்கிலத்தில் ஆழ்ந்த பக்தி என்று பொருள். இந்தச் சொல் லத்தீன் மொழியிலிருந்து வந்ததாகும். லத்தீனில் அதற்குப் பொருள் காலத்தை விரயமாக்குதல்.
காலத்தை விரயமாக்கும் பக்திமான்களிடம் கவிஞர் ஷெல்லி மிகவும் எரிச்சலடைந்திருந்தார். ஷெல்லியிடம் துயர முகபாவங்களுடன் சிலர் வந்தார்கள்.
“உண்மையான பக்திமானும் மோசேயைப் போலத் தீர்க்க தரிசனம் வாய்ந்தவருமான பெரியவர் ஒருவர் இறந்து விட்டார். அவரை அடக்கம் செய்ய வேண்டும். 20 பவுன் தர முடியுமா?” என்று கேட்டார்கள்.
இருபது பவுன் கேட்ட அவர்களுக்கு அறுபது பவுன் கொடுத்தார் ஷெல்லி. நிதி கேட்டு வந்தவர்கள் ஆச்சரியம் கலந்த மரியாதையுடன் “கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பார்!” என்றார்கள்.
மிகுந்த பணிவுடன் ஷெல்லி சொன்னார். “இருபது பவுன் கேட்ட உங்களுக்கு நான் அறுபது பவுன் கொடுத்தது, கர்த்தரின் ஆசிர்வாதத்துக்காக அல்ல. ஒரு பக்திமானைப் புதைப்பதற்கு இருபது பவுன் செலவாகும் என்றால், இன்னும் இரண்டு பக்தர்களையும் சேர்த்து ஏன் புதைக்கக் கூடாது? அதற்காகத்தான் கூடுதலாக நாற்பது பவுன்!”
“பிரார்த்தனையால் முடியாதது எதுவுமே இல்லை!” என்றார் ஷெல்லியின் நண்பர். அதற்குச் சான்றாக “வண்ணத்துப் பூச்சிகளின் பிரார்த்தனை ஏற்கப்பட்டதால் தான் பூமியெங்கும் மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன” என்றார்.
“நல்ல வேளை! நாய்களின் பிரார்த்தனை ஏற்கப்பட்டிருந்தால் வானத்திலிருந்து எலும்பு மழை பெய்து கொண்டே இருக்கும்!” என்றார் ஷெல்லி.
கடவுளால் முடியாதது எதுவுமே இல்லை என்று நம்புகிறவர்களுக்கு மத்தியில் அதை நையாண்டி செய்கிற விதத்தில்-
“ஆம்; கடவுள் விரும்பினால் எல்லாப் பெண்களும் காது வழியே பிள்ளை பெறுவார்கள் என்று எழுதினார் ஃபிரான் சுவா ராபிலேஸ்.
தாமஸ் அக்வினாஸ் என்பவர் கடவுளை நையாண்டி செய்கிறவர் அல்ல. கத்தோலிக்கத் திருச்சபையின் புகழ்பெற்ற இறையியலாளர். அவர் கூட கடவுளால் முடியாத சில செயல்களும் உண்டென்று சொன்னார்:
“எல்லாம் வல்ல இறைவனால்கூட இறந்த காலத்தை அழித்து விட முடியாது. மூன்று முக்கோணங்களும் சேர்ந்து இரண்டு நாற்கோணங்களுக்குச் சமம் என்கிற உண்மையை மாற்றவோ, பொய்யை மெய்யாக்கவோ அவரால் முடியாது!”
பாதிரியார் ஒருவர் வீட்டு முகப்பில் “நான் அனைவருக்குமாகப் பிரார்த்திக்கிறேன்!” என்று எழுதப்பட்டிருந்தது. அதன்கீழே வழக்கறிஞர் ஒருவர் இப்படி எழுதினார்: “நான் அனைவருக்குமாக வாதாடுகிறேன்!”
டாக்டர் வந்தார். அவரும் எழுதினார்: “நான் அனைவருக்குமாக மருத்துவம் பார்க்கிறேன்.”
மூன்றையும் படித்த ஒரு சராசரி மனிதன் எழுதினான்:
“நான் அனைவருக்குமாக என் பணத்தை அழுது தொலைக்கிறேன்!”
அழகாய் இருப்பது எப்படி? என்று தீவிரமாய்ச் சிந்தித்தார் ஆஸ்கார் ஒயில்டு என்கிற எழுத்தாளர். இந்தச் சிந்தனையால் அவருக்கு இருந்த அழகும் குறைந்து வருவதை அறிந்தார். பிறகு ஒரு முடிவுக்கு வந்தார்: அழகாய் இருப்பது எப்படி என்கிற கேள்விக்கு விடையும் கண்டார்.
“அழகாய் இருப்பது எப்படி?”
“அழகாய் இருக்க வேண்டும் என்றால் சிந்தனையே இல்லாமல் இருக்க வேண்டும். நமது குருமார்களைப் பாருங்கள்! அவர்களுடைய முகம் எத்தனை அழகாய் ஒளிர்கிறது! காரணம் இதுதான். ஒரு மதகுரு தனது பதினெட்டாவது வயதில் சொன்னதையே எண்பத்தொன்றாம் வயதிலும் சொல்லிக் கொண்டிருப்பான்!”
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|