ஒரு பாரம்பரியம் தொடர்கிறது...
ஆனாரூனா
தமிழர்களுக்குரிய பண்டிகை என்பதாக ஒன்றைக் காண்பது மிக அரிதாக உள்ளது.
இதன் காரணம் என்னவென்றால் தமிழனை ஆதிக்கம் கொண்டவர்கள் தங்களது கலாச்சாரங் களைத் தமிழனிடம் புகுத்துகிற வகையில் முதல் பணியாக - தமிழ் நாட்டில் தமிழனின் கலாச்சாரங்களை, பழக்க வழக்கங்களை அடியோடு அழித்து மறைத்து விட்டார்கள்.
இதனால் தமிழனுக்குரிய கலாச்சாரம் எது என்று அறிவதுகூட மிகமிகக் கடினமான காரியமாக ஆகிவிட்டது.
தமிழனின் கலாச்சாரப் பண்டிகைகள் அழித்து ஒழித்து மறைக்கப்பட்டு விட்டன என்பது மாத்திரமல்லாது தமிழனுக்கு வரலாறு என்பதுகூட இல்லாமல் அழிக்கப்பட்டு விட்டது.
எனவே இன்று தமிழன் கலாச்சாரம், பண்பு, வரலாறு அற்ற ஓர் அடிமை ஜீவனாக விளங்குகிறான். இன்று தமிழன் கொண்டாடும், நடத்தும் கலாச்சாரம், பண்பு, வரலாறு என்பவை எல்லாம் தமிழனுக்கு இழிவும், அடிமைத்தனத்தையும் தந்து அவற்றை நிலை நிறுத்துபவையாகவே இருந்து வருகின்றன.
தமிழனுக்குள்ள கலைகள் என்பனவெல்லாம் தமிழனை அடிமையாக்குவனவாகவே இருந்து வருகின்றன...
இப்படிப்பட்ட நிலையில் தமிழர் விழா (பண்டிகை) என்பதாக நான் எதைச் சொல்ல முடியும்? ஏதாவது ஒன்று வேண்டுமே! அதை நாம் கற்பிப்பது என்பதும் எளிதில் ஆகக்கூடியது அல்லவே என்று கருதிப் பொங்கல் பண்டிகை என்பதைத் தமிழன் விழாவாகக் கொண்டாடலாம் என்று நான் முப்பது ஆண்டுகளுக்கு முன் (அதாவது 1929 ஆம் ஆண்டில்) கூறினேன். மற்றும் யாராவது கூறியும் இருக்கலாம்.
இந்தப் பண்டிகையும் அறுவடைத் திருவிழா (Harvest Festivel) என்ற கருத்தில்தானேயொழிய சங்கராந்திப் பண்டிகை, போகிப் பண்டிகை, இந்திர விழா என்று சொல்லப்படும் கருத்தில் அல்ல.
- என்று தந்தை பெரியார் எழுதினார் (விடுதலை 30-1-1959)
உரத்த சிந்தனைக்குரிய கருத்து இது.
தமிழனின் விழா என்று எதையும் குறிப்பிட்டுச் சொல்ல முடியவில்லைதான்.
ஏனென்றால், எல்லா விழாக்களுமே மதவகைப்பட்ட விழாக்களே. அதுவும் ஆதிக்க சக்திகளின் வயப்பட்டவையே.
இதிலிருந்து பெறப்படும் உண்மை என்ன? தமிழன் மதமற்றவனாக - இறை நம்பிக்கையற்றவனாக - அறிவின் வெளிச்சத்தில் நடந்திருக்கிறான் என்பதே!
ரிக்வேதப் பாடலொன்று, “இந்திரனே, கடவுள் நம்பிக்கையற்ற கருப்பு மனிதர்கள் வர்ண பகவானைக் கைது செய்து வைத்திருக்கிறார்கள். அவனை விடுதலை செய்” என்று சொல்கிறது. தமிழர்கள் மழை நீரை அணைகளில் தேக்கி வைத்திருப்பதையே “வர்ணபகவானைக் கைது செய்து வைத்திருப்பதாக” ஆரிய வேதம் குறிப்பிடுகிறது.
“ஞாயிறு போற்றுதும், திங்களைப் போற்றுதும், மாமழை போற்றுதும்” என்று இயற்கையுடன், தோழமை கொண்டு வாழ்ந்த தமிழன், காலப்போக்கில் தன் வரலாற்றை மறந்து, ‘அகம், ‘புறம்’ பாடிய முன்னோரின் சிறப்பினை மறந்து ஆரிய மாயையில் வீழ்ந்து இழிந்தான்.
இன்றோ உலகமயமாக்கல் என்கிற பெயரில் எல்லாம் அமெரிக்க மயமாகின்றன. கொள்ளையர் உலகம் ஒன்று திறம்பட உருவாக்கப்படுகிறது. புதிய உலகின் எஜமானர்கள் தீர்மானித்திருக்கிறார்கள். இனி வரும் உலகில் இரு பிரிவினருக்கு மட்டுமே இடமுண்டு - வாழப் பிறந்தவர்கள் - சாகப் பிறந்தவர்கள்.
சாகப் பிறந்த இனமா தமிழினம்?
சுயமரியாதை, பகுத்தறிவு, தேசியப் பெருமிதம் எல்லாவற்றையும் உதிர்த்து விட்டு அறியாமையாலும் அற்பத்தனங்களாலும், தான் யார் என்பதையே அறிய முடியாத அளவுக்கு அயர்ச்சியில் ஆழ்ந்து விட்டான் தமிழன்.
இந்த இழிவைத் துடைத்து, மானமும், அறிவும் உள்ள இனமாகத் தமிழினத்தை மாற்றும் தாய்மை உணர்வில்தான் திராவிட இயக்கம் இங்கே ஒரு பண்பாட்டுப் புரட்சியைத் தொடங்கியது. அதன் தொடர்ச்சியாகவே பொங்கலைத் தமிழரின் தேசியத் திருவிழாவாகக் கொண்டாடுமாறு அறிவித்தது.
விழா - பண்டிகை - என்றால், உண்பதும், உடுத்துவதும், உல்லாசிப்பதும் அல்ல; வரலாற்றைத் திரும்பிப் பார்ப்பது; எப்படி வாழ்ந்தோம், எப்படி வாழப் போகிறோம் என்பதைத் தீர்மானிப்பதற்கான சிந்தனைகளை ஒளியுறுத்தும் இனிய பருவகாலமாக மாற்ற விழைந்தது திராவிட இயக்கம்.
தந்தை பெரியாரின் ‘குடியரசு’, ‘விடுதலை’, ‘உண்மை’ போன்ற ஏடுகளும், அறிஞர் அண்ணாவின் ‘திராவிட நாடும்’, முத்தமிழறிஞர் கலைஞரின் ‘முரசொலி’யும், இந்தப் பண்பாட்டுப் புரட்சிக்கு வழங்கிய கொடைகள் கொஞ்சமல்ல.
இந்தச் சமூக - சமதர்மச் சிந்தனையாளர்களின் எழுத்துக்களால், சொற்பொழிவுகளால் உத்வேகம் பெற்றவன் என்கிற முறையில் நானும் ஏதாவது செய்ய வேண்டாமா?
தந்தை பெரியார் தமிழிசை மன்றம், தமிழ்ச் சான்றோர் பேரவை, ‘நந்தன்’ ஏடு என்று என் ஆசைகளின் தொடர்ச்சியாய் இதோ இந்தப் பொங்கல் மலர்...
உங்கள் கருத்துக்களை எழுதுங்கள்...
தோழமையுடன்
ஆனாரூனா
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|