நபிவழி நடந்த நரை மூதாட்டி கவிஞர் பல்லவன்
இருட்டில்
வீழ்ந்து கிடப்பதே
இன்பம் என்று
இறுமாந்து கிடந்தனர்
அரபிகள்!
அவர்களை
வெளிச்ச பூமிக்கு
அழைத்து வருவதற்குப்
போராடினார்
நபி பெருமான்!
அவர்கள்
வெளிச்சத்தை
அறவே வெறுத்தார்கள்
வெளவால்களாய்
கூகைகளாய்!
புரட்சி விதைகளை
அப்பாலை மண்ணில
தூவிப்
புதுயுகம் படைக்க
வியர்வை சிந்திய
நாயகத்தை
இழித்தனர் பழித்தனர்
கல்லெறிந்து
காயப்படுத்தினர்
பழமைவாதிகள்!
ஆயிரம் தெய்வங்களை
ஆராதித்தும்
ஆயிரங்காலத்து
அடிமைத்தனத்தில்
மூழ்கடிக்கப்பட்டும்
காட்டுமிராண்டிகளாய்த்
திரிந்த
அரபு மக்களுக்குச்
சீர்திருத்தங்கள்
செரிமானம்
ஆகவில்லை!
தீர்த்துக் கட்டவும்
தீர்மானித்தனர்
நபிகள் நாயகத்தை!
நஞ்சூட்டிக்
கொல்வதும்
சிலுவையில்
அறைவதும்
கல்லால் அடித்து
ரத்தம் கசிய
வைப்பதும்
உயிருடன் எரித்து
உடலைச் சாய்ப்பதும்
உலகைத் திருத்த
வந்த
உத்தமர்களுக்கு
கொடூரர்கள்
வழங்கிய
பரிசுகள் அல்லவா?
பொறுமையின்
சிகரத்தைக்
கொச்சைப் படுத்திய
கொடுமைக்காரர்களை
உலகில் உயர்த்தி வைக்கவே
ஓயாது உழைத்தார்
நாயகத் திருமகன்!
அவள் யூதப்பெண்மணி
பிற சமயத்தாரைக்
கசந்து வெறுப்பவள்!
கண்மூடி எதிர்ப்பவள்!
அவளது வீட்டின்
பக்கம் போகும்
போதெல்லாம்
அந்தப் பொல்லாதவள்
நாற்றமடிக்கும்
குப்பைகளை
நாயகத் திருமேனி
மீது கொட்டிக்
குதூகலிப்பாள்!
குறுநகையோடு
குப்பை கூளங்களைத்
தட்டிவிட்டு
எதுவுமே
நடக்காததுபோல்
அவ்விடத்தைக்
கடப்பார்
அப்பெருந்தகை!
அவர்மீது
ஏனோ அன்று
குப்பை வீசப்படவில்லை!
ஆச்சரியமாகவும்
ஏமாற்றமுமாக
இருந்தது பெருமானுக்கு!
காரணம் அறிய
அவாவியது
அவர்மனம்
ஆரோக்கியம்
இல்லையாம்
அந்த
யூத கிழவிக்கு!
மனம் நைந்தது
நபிக்கு.
மாடியேறி
அம்மூதாட்டியைப்
பார்த்து
மனம் கலங்கினார்
அவர்.
அவள் நலங்கேட்டு
அன்பைப் பொழிந்தார்
நாயகம்!
ஒரு பூங்கொத்தை
அவள் கைகளில்
கொடுத்தார்!
நாறுகின்ற
குப்பைக் கூடையை
ஏந்திய கைகளில்
நறுமணப் பூங்கொத்து!
நாயகமே!
அசிங்கத்தை வீசி
அவமானப்படுத்திய
என்னையா
நேசிக்கிறீர்கள்?
மனிதப் புனிதர்
நீங்கள்!
இந்தச்
சகோதரியை
மன்னியும்
நெகிழ்ந்து
நெக்குருகி
நெடுமூச்செறிந்து
மனம் கலங்கினாள்
கிழவி.
இப்பொழுது
இருட்டிலிருந்து
வெளிச்சத்துக்கு
வந்துவிட்டாள்
அப்பெருமாட்டி!
அன்றே
நபிவழி நடந்தன
கிழவியன் கால்கள்!
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|