எல்லாமே அதுதான்!
ஆனாரூனா
நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்க லஞ்சம் வாங்கிய உறுப்பினர்களைப் பதவி நீக்கம் செய்தார் மக்களவைத் தலைவர் சோம்நாத் சட்டர்ஜி. பதவி இழந்த உறுப்பினர்கள் உச்சநீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்கள். வழக்கை ஏற்றுக் கொண்ட உச்ச நீதிமன்றம் சோம்நாத் சட்டர்ஜிக்கு அறிக்கை அனுப்பியது.
சட்டர்ஜி அதை ஏற்க மறுத் தார். பதில் தரப்போவதுமில்லை என்று அறிவித்தார்.
லஞ்சம் பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பாக பிரச்னையை மேலாட்டமாகப் பார்த்தால் இவ்வாறு சுருக்கிவிடலாம். ஆனால் இது சோம் நாத் சட்டர்ஜியின் நடவடிக்கையைக் கொச்சைப் படுத்துவதாகும்.
சோம் நாத் சட்டர்ஜி தனக்கு உள்ள அதிகாரத்துக்கு வானமே எல்லை என்று சர்வாதிகார மனப் போக்கில் பேசுகிறவரோ, நடந்து கொள்கிறவரோ அல்ல. நாடாளுமன்றக் கட்சித் தலைவர்களுடன் கலந்துபேசி அவர்களின் இசைவுடன் எடுத்த முடிவின்படிதான், லஞ்சம் பெற்ற எம்பிக்கள் பதவி நீக்கச் செய்யப்பட்டார்கள்.
சோம்நாத் சட்டர்ஜி’யின் நடவடிக்கை குறித்து தினமணி போன்ற பத்திரிகைகள் அவரது பாத்திரத்தைச் சிதைக்கும் விதத்தில் எழுதுகின்றன. மக்களவைத் தலைவரின் ஜனநாயக ரீதியான முடிவை எதிர்த்து லஞ்சம் பெற்ற எம்பிக்கள் வழக்குத் தொடர்ந்தபோதே இது மக்களவையின் உரிமையில் தலையிடுவதற்கும் என்று உச்ச நீதிமன்றம் அதை நிராகரித்திருந்தால் உச்சநீதிமன்றத்துக்கும் நாடாளுமன்றத்துக்கும் மோதல் என்று சித்திரிக்கும் நிலையே வந்திருக்காது.
``எம்.பிக்களை நாடாளுமன்ற அவைத்தலைவர் பதவி நீக்கம் செய்துள்ள நடவடிக்கை அரசியல் சட்டத்திற்கு உட்பட்டு அமைந்திருக்கிறதா அல்லது மீறி இருக்கிறதா? இந்த நாசூக்கான பிரச்னையில் சட்ட நுட்ப அடிப்படையில் அரசியல் சட்டப் பார்வையோடு தீர்ப்பளிக்க வேண்டிய பொறுப்பு உச்ச நீதி மன்றத்துக்கே உண்டு என்பதை எப்படி ஒதுக்கித் தள்ளி விடமுடி யும்? எனவே நாடாளுமன்ற உரிமையில் நீதிமன்றம் தலையிடு வதாகப் புகார் கூறுவதற்கு முகாந்திரம் இருப்பதாகத் தோன்ற வில்லை. அப்படியிருக்க இப் பிரச்னையில் நாடாளுமன்றமும் உச்ச நீதிமன்றமும் எதிரும் புதிருமாக நிற்கும் நிலைமை தவிர்க்கப்பட வேண்டும்’’ என்கிறது தினமணி.
தமிழ் நாட்டில் பி.எச்.பாண் டியன் என்றொரு பேரவைத் தலைவர் இருந்தார். அவர் பத்திரிகை சுதந்திரத்தில் தலையிட்டு பத்திரிகை ஆசிரியர்களைப் பேரவைக்கே அழைத்து, தனியாகக் கூண்டு செய்து அதில் நிறுத்தி, அவமானப்படுத்தி தண்டனை தந்தார். பத்திரிகை ஆசிரியர்களுக்கு ஒரு மாநில சட்டப் பேரவைத் தலைவர் தண்டனை வழங்க முடியுமா? பேரவைத் தலைவர் நீதிமன்றத்துக்கே அந்தப் பிரச்னையை அனுப்பியிருக்கவேண்டும் என்று அப்போது யாரும் சொல்லவில்லை.
கேரளத்தில் முதல் முதலாக பதவி ஏற்ற கம்யூனிஸ்ட் அமைச்சரவை கவிழ்க்கப்பட்டது. அது சரியா, தவறா? என்று எந்த நீதிபதி சிந்தித்துச் சிந்தித்து நெற்றி பொசுங்கிப் போனார்? என்று எந்தப் பத்திரிகையும் கேட்கவில்லை.
`நெருக்கடி நிலை’ பிரகடனம் செய்யப்பட்டது. அது அரசியல் சாசன, ஜனநாயக விதிகளுக்குப் புறம்பானதுதான். எந்த நீதிபதி `மிசா’வைத் தவறு என்று அறிவித்து மிசாக் கைதிகளை விடுதலை செய்தார்? என்று எந்தப் பத்திரிகையும் கேட்கவில்லை.
`பொடா’ சட்டம் வந்தது. அரசியல் பழிதீர்க்கும் வாய்ப்பாகப் பலர் கைது செய்யப்பட்டார்கள். மறுபடியும் புதிய நாடாளுமன்றம் கூடி அதை ரத்து செய்ததே தவிர எந்த நீதிபதி `பொடா’ தவறு. அதை கண்டித்து வழக்கை தள்ளுபடித் தள்ளுபடி செய்தார்? என்று எந்தப் பத்திரிகையும் கேட்கவில்லை.
கலைஞர் தலைமையிலான அரசு இருமுறை கலைக்கப் பட்டது. `சட்ட நுட்ப அடிப்படை யில்’ எந்த நீதிபதி குரல் எழுப் பினார்? என்று எந்தப் பத்திரிகை யும் கேட்கவில்லை.
நீதிமன்றங்களுக்குச் சில உரிமைகள்; நாடாளுமன்றத்துக்கும் சில உரிமைகள். ஒன்றில் மற்றொன்று தலையிட முடியாது என்பது பொதுவான கருத்து. ஆனால் நடைமுறையிலுள்ள சமூக அமைப்பில் `ஆதிக்க சக்தி’ என்றொன்று உண்டு. அதுவே இந்த நாட்டின் சட்டம், நீதி, நாடாளுமன்றம் அனைத்தையும் தீர்மானிக்கிறது.
உண்மையில் நீதித்துறையும் அதுதான்; நாடாளுமன்றமும் அதுதான்.ஆதிக்க சக்திகளுக்கு அதிருப்தி வரும்போது சில நேரங் களில் நீதித்துறை கண்டிக்கப்படும். சில நேரங்களில் மக்களவை கண்டிக்கப்படும்.
சோம் நாத் சட்டர்ஜி நடை முறையிலுள்ள சமூக அமைப்பு மாற்றப்படவேண்டும். என்கிற கருத்துடையவர். பொது உடைமைக்கு ஆதரவளர். அதனால் சனாதனிகளும், ஆதிக்க சக்தி களுக்கும் அவர்மீது எப்போதுமே எரிச்சலுண்டு. அந்த எரிச்சலைத் தீர்த்துக் கொள்ளும் அரிப்பில்தான், இப்போது நீதித்துறையை ஆதரிப்பதுபோல் பாசாங்கு செய்கிறார்கள்.
ஒரு கற்பனை. அத்வானி மக்களவைத் தலைவராக இருந்து, இதே லஞ்சப் பிரச்னை, பதவிபறிப்பு, வழக்கு, நீதிமன்றத் தலையீடு என்று வந்திருந்தால், அப்போது இதே ஏடுகள் நாடாளுமன்றத்தின் பக்கம் நின்று நீதித்துறையின் எல்லைதாண்டிய அத்துமீறலைக் கண்டித்திருக்கும்.
சட்டம் சரியாக இருக்கலாம். ஆனால் நீதிபதிகள் எல்லோருமே சரியானவர்களா? நீதிபதியே லஞ்சம் வாங்கிக் கொண்டு குடியரசுத் தலைவர் அப்துல் கலாமைக் கைது செய்ய `வாரண்ட்’ பிறப்பிக்கவில்லையா? நீதிபதிகள் நீதிமான்களாக இருப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியாது என்று இந்த ஏடுகள் எழுதாவோ?
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|