சீனப்பயணி கவிஞர் பல்லவன்
சீனநாட்டுக்
கொலுமண்டபம்
சிங்காதனத்தில்
வீற்றிருக்கிறார்
மன்னர்!
அரசர்முன்
தலைவணங்கி
நிற்கிறார்
சீனிப்பயணி
யுவான்சுவாங்!
அகிலத்தின்
அறிவையெலாம் திரட்டிவர
அதிசயக் காட்சிகளைப்
பார்த்து வர
ஆன்றோர்தம் அவையேறி,
அறிவமுதம் பருகிவர
ஆற்றங்கரை
நாகரிகங்களை
ஆர்வமுடன் கற்றுவர
கலைகலாச்சாரங்களைக்
கண்ணாரக் கண்டுவர
உலகப் பயணம்
மேற்கொள்ள
இருக்கிறேன்.
என்னை
வாழ்த்தி
வழியனுப்ப வேண்டும்
மன்னர் பிரான்!
சிரம்தாழ்த்தி
வேண்டினார்
சீனஞானி!
செய்வது அறியாது
சிந்தனையில்
ஆழ்ந்ததார் மன்னர்!
சிறிதுநேரம்
செலவழிந்தது.
சீனத்துச் செம்மலே!
நீங்கள் நாடுசுற்றப்
புறப்படுவதை நான்
தடுத்திடமாட்டேன்!
நீங்கள் -
இதயம் ஏந்திவரப்
போகும்
வாழ்வநுபவங்கள்
வரலாற்றுப்
பெருமிதங்கள்
நம் நாட்டை
மேலும் உயர்த்த
நாளும் பயன்படும்
நான் அறிவேன்!
ஏனோ என்மனம்
தயங்குகிறது
தங்களை வழியனுப்ப!
அயல்நாடுகளின்
இயற்கை வளங்கள்
அறிவார்ந்த பெருமக்களின்
நட்புறவுகள்
அன்பார்ந்த அம்மக்களின்
பாசம் கலந்த
உபசரிப்புகள்
பழக்க வழக்கங்கள்
நாகரிக நற்பண்புகள்
எங்கே தங்களை
அடிமைப்படுத்திச்
சீனநாடு திரும்பாமல்
செய்து விடுமோ
என்றே அஞ்சுகிறேன்.
மன்னர் பெருமான்
பெருமூச்செறிந்தார்!
அப்போது அரசரிடம்
தங்கக் கிண்ணம்
ஒன்று தரப்பட்டது!
பயணப்பறவை
யுவான் சுவாங்கை
நெருங்கினார் அரசர்.
ஞானியின் வாயருகே
தங்கக் கிண்ணத்தைக்
கொண்டு சென்றார்.
தாயன்போடு
புகட்டினார்
அதிலிருந்த திரவத்தை!
மறுபடியும் பேசினார்
மன்னர்.
அறிவார்ந்த பெருமகனே!
அகிலத்தின் சிறப்பிடங்களைக்
கண்டு மயங்கி
மனத்தைப் பறிகொடுத்து
அங்கேயே நீங்கள்
தங்கிவிடக் கூடாது.
எங்கே சென்றாலும்
தாய்நாட்டு நினைப்பு
தங்கள் தொண்டைக்
குழிக்குள் இருந்துகொண்டே
இருந்திட வேண்டும்
இந்தத்
தங்கக் கிண்ணத்தில்
நம் தாய் மண்ணைக்
கரைத்துத்
தங்களுக்குப்
புகட்டி இருக்கிறேன்!
தாயை மறந்தாலும்
தாய்நாட்டை
மறக்காமல் தாங்கள்
சீனம் திரும்பவேண்டும்!
மனம் நெகிழ்ந்து
விடைகொடுத்தார்
மன்னர் சீனஞானிக்கு!
உலகம் சுற்றி
யுவான் சுவாங்
தமிழகம் வருகிறார்.
பட்டிதொட்டி
பட்டினக் கரைகளில்
பறந்து திரிகிறார்.
பார்த்தவை, கேட்டவை
பட்டறிந்தவை
பழகி உணர்ந்தவற்றைக்
குறிப்புகளாகப்
பதிந்து கொள்கிறார்!
தமிழகத்தின்
அறிவுக் கருவூலங்களை,
பனையோலைக்
கட்டுகளை ஓடிஓடிச்
சேகரிக்கிறார்!
ஓலைச்சுவடிகளைச்
சுமக்க முடியாமல்
சுமந்தபடி
கனக்கிறது
அந்தப் படகு!
சுவாங் படகில்
ஏறிக் கொள்கிறார்.
நதியில் விளையாடி
அலையில் குளித்தாடி
நகர்கிறது படகு!
எதிர்ப்பட்ட
நீர்ச்சுழற்சியில்
சிக்கித் தடுமாறுகிறது
அப்படகு!
பதறிக் கூச்சலிடுகிறான்
படகோட்டி!
ஐயா!
நதிப் பெருக்கால்
படகு மூழ்கும்
அபாயம்
ஏற்பட்டுவிட்டது!
இந்த
ஓலைச்சுவடிகளில்
கொஞ்சம் அள்ளித்
தண்ணீரில் வீசுங்கள்!
அப்போதுதான்
பளுகுறைந்து
படகு அமைதி
அடையும்!
மின்னல் வேகத்தில்
ஒரு முடிவுக்கு
வந்தார் சுவாங்!
நீர்ப்பெருக்கில்
குதித்து நீந்திக்
தங்கும் இடத்துக்கு
வந்து விடுகிறேன்
நான்.
ஓலைச்சுவடிகளைப்
பத்திரமாக நீ
கரைசேர்த்து விடு!
வெள்ளத்தின்
வேகத்துக்கு
ஈடுகொடுத்து
நீந்தி
உயிர்பிழைத்து
விட்டார் சுவாங்!
உயிர் பெரிதில்லை!
உயிரினும் மேலானவை
ஓலைச்சுவடிகள்!
கனலுக்கும் புனலுக்கும்
கரையான்களுக்கும்
தமிழ்நூல்களை
வாரிக்கொடுத்த
தமிழர்களுக்கு
இன்னும் புத்தி
சொல்லிக் கொண்டு
இருக்கிறது
சீனப்பயணியின்
செயல்பாடு!
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|