பறக்கும் ஓவியம்
கவிஞர் பல்லவன்
எண்ணற்ற ஓவியங்களை
எழுதி வைத்திருக்கும்
இயற்கை
நம்மை இமைமூட
வைப்பதில்லை
புவியில்!
பூமியை அழகு
படுத்திக் கொண்டே
இருக்கிறது
அதன் தூரிகை!
இதோ தன்னை
அலங்கரித்துக்
கொண்டு
உலாவருகிறது ஒரு
பட்டாம்பூச்சி ஓவியம்
சித்திரக்காரர்களின்
புருவங்களை
உயர்த்த!
அது அழகுக்கு
அழகு சேர்க்கிறது
பூமேல்
அமரும்போதெல்லாம்!
அதனை நாம்
புழுப்பருவத்தில்
கண்டிருந்தால்
முகம் சுளித்திருப்போம்
அசூசையோடு!
எல்லாமே அழகுதான் இளமையில்.
இந்தக்
கூட்டுப்புழுவைத்
தவிர...
அழகுமயிலைக்
கண்டால்
ஆனந்தப் படுவதும்
அண்டங்காக்கையைக்
கண்டால்
அருவருப்பு அடைவதும்
மனப்பழக்கமே!
சாக்கடையில் கூட
நிலவின் நிழலை
இரசிக்கலாம்
யமுனையில்
தாஜ்மகாலை
இரசிப்பதைப்
போல!
ஆண்டவனையே
அலங்காரப் பிரியன்
என்கிறது
நாமாவளி!
ஒப்பனை இல்லாமல்
உள்ளே நுழைந்தால்
நடிகைவீட்டு
நாய்கூடக் குரைக்கும்!
அலங்கரித்த பின்பே
பிணங்களைக்கூடச்
சுமந்து செல்கின்றன
நமது தோள்கள்!
அழகுப்படுத்திக்
கொண்டு
வரும்போதுதான்
விழிகளை
அகலவிரித்துப்
பார்க்கிறது
இவ்வுலகம்!
தன்னிடம்
அழகான வானவில்
இருக்கிறது என்கிற
மிதப்பில் இருந்த
அந்த
விரிவானத்தையும்
குனிந்து பார்க்க
வைத்துவிடுகிறது
ஒரு
பட்டாம்பூச்சியின்
அழகு!
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|