உமர்கையாம் என்றொரு நாத்திகன்
ஆனாரூனா
உமர் கையாம் ஒரு கவிஞன், ஒரு சிந்தனையாளன், ஒரு விஞ்ஞானி, ஒரு நாத்திகன். கிரேக்கத் தத்துவ ஞானத்தில் மூழ்கினான். விஞ்ஞான ஆராய்ச்சிகளை மேற்கொண்டான். மதம் அவனைத் தாக்கியது. இவனோ, மதத்தை அதன் வார்த்தைகளாலேயே திருப்பியடித்தான்.
செல்வந்தர்களுக்கு வரைமுறையற்ற இன்பங்களும் எளியோருக்கு மதவொழுக்கங்களும் பகிர்ந்தளிக்கப்பட்டபோது மதத்தின் வேஷத்தைக் கலைத்தான். அதன் போலியான ஒழுக்க விதிகளை உடைத்தெறியத் தனது கவிதைகளால் தூண்டினான்.
உமர்கையாம் என்றால் மது, மங்கைதான் நினைவுக்கு வரும் அளவுக்கு மதவாதிகள் அவனை இழிவுபடுத்தினார்கள். உண்மையில் கையாம் அப்படிப்பட்டவனல்ல. தீவிர ஆராய்ச்சியாளன். பாரசீகத்தின் வானியல் ஆய்வுக்கூடம் உமரால் நிறுவப்பட்டதுதான்.
மரணத்துக்குப் பின்
எங்கு செல்வீர் என்றா
கேட்கிறீர்?
முதலில் மது கொண்டு வா! (பிறகு)
எங்கு விருப்பமோ அங்கு போ!
பக்திமானாகவே மரணிப்பவன்
இறுதி நாளில்
அவ்விதமே எழுவான் என்கிறார்கள்.
அதற்காகவே நான்
காதலோடும் மதுவோடும்
திளைக்க விரும்புகிறேன்.
அதன் மூலம் (இறுதி நாளில்)
எழும்போது
அதுபோலவே எழலாமல்லவா?
****
சொல்கிறார்கள்;
சொர்க்கலோக மங்கையர்
இனியர் என்று.
ஆனால், இன்று கிடைக்கும் திராட்சைரசம்
அதனினும் இனிது.
****
வா,
இந்த ரொக்கத்தை எடுத்துக் கொள்
வரப்போகிற லாபம் போகட்டுமே!
****
இந்த மதுக்கிண்ணம்
என்னைப்போல் ஒரு காதலனாயிருந்தது.
இதன் வளைந்த கைப்பிடி
ஒரு காலத்தில்
ஓர் அழகியின் சிற்றிடையைச்
சுற்றி வளைத்திருந்த கையாகும்.
****
இன்று இன்பம் பெறு
உன் சாவுக்குறி கண்டபின்னோ
எல்லையற்ற துயரில் அமிழ்வாய்.
(அதன்பின்)
உன் களிமண்ணால்
செங்கற்கள் செய்வார்கள்;
வீடோ சத்திரமோ கட்டிவிடுவார்கள்.
****
கடப்பாட்டோடு நான்
மசூதி சென்றேன்.
ஆனால், இறைவன் பெயரால்
தொழுகைக்காக அல்ல,
ஒருநாள் அங்கிருந்த
தொழுகைப் பாயைத் திருடினேன்.
இப்போது அங்கு போய் வருகிறேன்
இன்னும் ஒரு பாய்
அகப்படாதா என்று.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|