சுட்டாலும் போமோ சுதந்திர தாகம்!
இளவேனில்
மன்னராட்சியை வீழ்த்துவது, மக்களாட்சியை நிறுவுவது என்கிற இலட்சியத்துடன் உறுதியான இறுதிப் போரைத் தொடங்கியிருக்கிறது நேப்பாளம். அரசன் ஞானேந்திரா, அவன் குடும்பப் பரிவாரம், அவர்தம் கூலிப்படை தவிர நேப்பாளத்தில் மன்னராட்சியை உயிருள்ள மனிதரில் யாருமே மதிக்கத் தயாராயில்லை. பதவி வெறியில் தனது தாய் தந்தை சகோதரன் என்று குடும்பத்தையே கொலை செய்த ஞானேந்திரா மக்களை நசுக்கவா தயங்குவான்?
ஜனநாயக உரிமைகள் முற்றிலும் பறிக்கப்பட்டன. ஆயிரக் கணக்கான அரசியல் தலைவர்கள் - தொண்டர்கள் சிறைகளில் அடைக்கப் பட்டிருக்கிறார்கள். பத்திரிகை சுதந்திரம் மறுக்கப்பட்டிருக்கிறது. மாணவர்கள் தாக்கப்படுகிறார்கள். ஜனநாயகம், சட்டத்தின் ஆட்சி என்று வாய் கிழியும், எந்த நாடும் இந்த அரசு பயங்கரவாதம் குறித்துக் கண்டனம் தெரிவிக்க மறுக்கிறது. வங்க தேசம் விடுதலைக்காகப் போராடியபோது, இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி போராடும் ஜனநாயக சக்திகளுக்கு ஆதரவாக ராணுவத்தையே அனுப்பி உதவினார்.
அண்டை நாட்டில் போராட்டங்களும் அடக்குமுறைகளும் பதற்றமும் நீடிப்பது இந்தியாவுக்கே நல்லதல்ல என்கிற உணர்வுடன் இந்திரா எடுத்த முடிவு அனைவராலும் வரவேற்கப்பட்டது. இன்று அந்தப் பார்வை இல்லையே ஏன்? ஆனாலும் புரட்சி என்பதும் விடுதலை என்பதும் இறக்குமதிச் சரக்கல்ல என்கிற புரிதலுடன் நேப்பாள அரசியல் கட்சிகளும் மக்களும் தங்கள் இலட்சியத்தை வென்றடைவதற்காக வீரம் செறிந்த போராட்டங்களைத் தொடர்கிறார்கள். ஆயுத பலத்தாலும் அடக்குமுறைகளாலும் மக்கள் மத்தியில் அச்சத்தை எழுப்ப நினைத்த மன்னரும் ராணுவமும் மக்களின் ஆவேசத்தை எழுப்பிவிட்டனர்.
தனது இறுதி நாட்களை எண்ணிக் கொண்டிருக்கின்றான் ஞானேந்திரா. நாளும் ஆர்ப்பாட்டங்கள்; போராட்டங்கள்; துப்பாக்கிச் சூடுகள் என்று எல்லைப்புறத்திலே இடிமுழக்கங்கள் கேட்கும் போதும் இந்தியா மௌனம் காப்பது ஏன்? மன்னர் ஞானேந்திரா `கிரிமினல் குற்றவாளி’யான சங்கராச்சாரியின் பக்தன். உலகில் இந்து நாடு என்று அறிவித்திருக்கும் ஒரே நாடு நேப்பாளம். இந்த அம்சங்களால் இந்திய அதிகார பீடத்திலுள்ள பார்ப்பனியக் கும்பல் நேப்பாளத்தில் மன்னராட்சி நீடிக்கவே விரும்புகின்றன.
கொடுங்கோலன் ஞானேந்திராவுக்கு எதிராகப் போராடியவர் என்பதற்காகவே நேப்பாள புரட்சியாளர் சந்திரப் பிரகாஷை அநாகரிகமான முறையில் இந்திய அரசு கைது செய்து வைத்திருக்கிறது என்று நேப்பாள மாணவர்கள் ஆவேசத்துடன் கூறுவதில் நியாயம் இல்லை என்று ஒதுக்கிவிட முடியாது. இந்திய சீன நட்புறவில் காயம் ஏற்படக் காரணமாயிருந்த தலாய்லாமா இங்கே தனி அரசாங்கமே நடத்திக் கொண்டிருக்கிறான். காரணம்? அவன் ஒரு அமெரிக்க கைக்கூலி. கம்யூனிசத்தை எதிர்ப்பவன். மதபீடம் நாட்டின் அதிகார பீடத்திலும் இருக்க வேண்டும் என்று விரும்புகிற ஜனநாயக விரோதி. அவன் இங்கே பாதுகாக்கப்படுகிறான். ஆனால் மன்னராட்சிக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழும் ஜனநாயகப் புரட்சிக்கு இந்தியா கைகொடுக்க மறுக்கிறது.
இந்திய நிலைப்பாடுதான் என்ன? முன்பு வங்க நாட்டின் விடுதலைக்கு உதவியதுகூட கெட்ட நோக்கத்தில்தானா? ஒரு இஸ்லாமிய நாடு (பாகிஸ்தான்) பிளவுபடுவதை இந்தியா ஆதரித்தது இந்துத்துவ நோக்கில்தான் என்று விமர்சித்தால் அது தவறாகுமா? இந்தியா ஒரு ஜனநாயக நாடு, ஜனநாயகத்துக்கான போராட்டங்களை ஆதரிப்பது அதன் இயல்பு என்று நேரு உருவாக்கிய அரசியல் நெறிமுறை உலக நாடுகளிடையே இந்தியாவுக்கு ஒரு உயர்ந்த இடத்தை ஏற்படுத்தியிருந்தது.
இன்று இந்தியாவின் நிலை என்ன? அமெரிக்க - பார்ப்பனிய சூக்குமக் கயிற்றில் ஆடும் பொம்மை அரசுதானா?
தனது முந்திய பெருமைகளை இந்தியா பூண வேண்டுமென்றால் உடனடியாக நேப்பாள புரட்சியாளர் சந்திரப் பிரகாஷை விடுதலை செய்ய வேண்டும். போராடும் ஜனநாயக சக்திகளுக்கு ஆதரவான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். ஞானேந்திரா தனிமைப் படுத்தப்பட வேண்டும். முடியரசு அகற்றப்பட உறுதுணையாக இருக்க வேண்டும். ஜனநாயக சக்திகளை ஆதரிக்காத நாடு பயங்கரவாதத்துக்கே பதில் சொல்ல நேரும்.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|