Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
Keetru Anangu
Anangu Logo
செப்டம்பர் - நவம்பர் 2006


சுகிர்தராணி கவிதைகள்

பெரும்பான்மையான இரவுகள் விடிவதில்லை

உங்களில் சிலர்
என்னுடன்
இராத் தங்கியிருக்கலாம்

ஸ்தூலமான அவ்விரவு ஒரு
மெழுகுவர்த்தியின் உருகுதலைப் போல்
மிக எளிமையானதாகவும்

மண்சரிந்த ஒரு சுரங்கத்தைப் போல்
மிக துன்பமானதாகவும்
அங்குல அங்குலமாய் நகர்கிறது

யாருக்கான இரவென்ற
தடித்த சந்தேகம்
வழமையான சுவர்களில் பட்டுச்
சரிந்து மடிகிறது

இரவின் சுழலில் சிக்கித்
திசைகளைத் துறந்த ஒரு
உள்நீச்சல்காரி போலாகின்றேன்

காலம்
பருவத்தின் குப்பிகளில்
பகலிரவினை ஊற்றி அனுப்ப

கண்களில் சேகரமாகிறது
தழுவிக் கொள்ளாத நீரும் எண்ணெயுமாய்
ஆயினும்

சாத்தானால் ஆசிர்வதிக்கப்பட்ட
பெரும்பான்மையான இரவுகள் விடிவதில்லை.

கடலளவு

இருள் குடித்த புறநகர் ஒன்றின்
கடைசி இரயில் நிறுத்தத்தில்
காத்துக்கொண்டிருக்கிறேன்

அதிவிரைவான வண்டிகள்
என்னைக்
கடந்த வண்ணமிருக்கின்றன

அவற்றிலிருந்து கிழிந்த வெளிச்சமும்
கெட்டித்துப் போன இருட்டும்
புலியின் வரிகளாய்
என்மீது படிந்து நகர்கின்றன

முந்தைய நிறுத்தத்திலிருந்து
கடத்தி வரப்பட்ட காற்று
என் மேலாடையை
அலைக்கழித்தபடி செல்கிறது

நான் நிற்பதன் பிரக்ஞையற்று
எதிரும் புதிருமாய்
இயங்குகின்றன பல வண்டிகள்

போதையில் சிக்கிய கண்ணாடி வண்டென
அகப்படாமல்
பறந்து செல்கிறது பச்சையயாளி

இரயிலை நிறத்தும் வழியறியாது
கல்லிருக்கையில் அமர்ந்து கண்மூடுகிறேன்
காலடியில் உறைந்து கிடைக்கிறது
கடலளவு இரத்தம்.

என் கடவுள்

என் வயதொத்த அவளுக்கு
சொற்ப மொழிகளே தெரியும்
நினைத்த மாத்திரத்தில்
கால தேசங்களைக் கடப்பவளில்லை.
இயற்கையின் வேர்முளைத்த
அவள் உடலில்
சதுப்பு நிலத்தின் பசுமை மின்னும்.
ஒப்பனைகள், புனைவுகள்
எவையுமின்றி
அதிகாலைப் பனிப்பொழிவாள்
என்மீது படுத்துக் கிடப்பாள்.
அருள்பாலிக்கும் அருமந்திரங்கள்
ஏதுமற்ற அவள் கைகளில்
எழுதுகோல் பூத்திருக்கும்.
மூன்றாம் ஜாமத்தினிறுதியில்
கம்பீரத்துடன் உள் நுழையும்
அவள் தேகத்திலிருந்து
புணர்வின் வாசனை வடியும்.
நாற்புறமும் கண்ணாடிகள் பதித்த
எனதறைக்குள் அவள்
உறங்கும்போது பார்க்கிறேன்
ஆடை களைந்து என் சொரூபமாகிறாள்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.

Unable to connect to database! Please try again later.