Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Anangu
Anangu Logo
செப்டம்பர் - நவம்பர் 2006


21ம் நூற்றாண்டும்
‘அவளது விதிப்படி ஆகட்டும்' (Ainsi soit-elle)
கட்டுரைத் தொகுப்பும்...

பெனுவாத் க்ரூல்த்
தமிழில் - நாகரத்தினம் கிருஷ்ணா

பெண்ணியம் அதன் உச்சத்திலிருந்த காலக்கட்டத்தில், 1975ம் ஆண்டு முதற்பதிப்பாக ‘அவளது விதிப்படி ஆகட்டும்' வெளிவந்தது. அதன் பின்னர் மறுபடியும் எனக்கு, அப்புத்தகத்தினை வாசிப்பதற்கான சந்தர்ப்பம் அமையவில்லை. மே 1968(1) போராட்டத்தின் விளைவாக, ஒவ்வொரு பெண்ணும் ‘இனி, அன்றாட வாழ்க்கையில் தான் ஆணுக்கு நிகரென' நினைத்தாள்; ஆண்களும் தங்கள் முதலிட ஸ்தானத்திற்கு மூடிவு நெருங்கி விட்டதென்று நினைத்த நேரம். இதில் மிகப்பெரியக் கொடுமை என்னவெனில், 89ல்(2) நமது புரட்சியாளர்கள் முன்னெச்சரிக்கையுடன் கவனமாக ‘மனித உரிமை கோட்பாடுகளை வகுத்து பிரகடனப்படுத்தியிருந்த போதும், அது ஆண் வர்க்கத்திற்கு மாத்திரமல்ல, பெண்களுக்கும் உரியதென்று சொல்லக்கூடிய ஆபத்துங்கூட 68க்கு பிறகே நேர்ந்தது.

எனினும் 1968ம் ஆண்டுவரை சுமார் முப்பதாண்டுகளுக்கு மேலாக ஆழ்ந்த உறக்கத்திற்கிடந்த பெண்ணியம், ஒருநாள் இப்படி விழித்துக் கொள்ளுமென்று எவரும் நினைத்திருக்க மாட்டார்கள். பெண்ணியத்தின் பொற்காலத்திற்குப் பிறகு, மாதர் தம் சுதந்திரம் ஏறக்குறைய ஐரோப்பா முழுக்க பதிவு செய்யப்பட்டதும், ஏற்றமிகுந்த இந்தக் காலகட்டத்தில்தான். எல்லா யுத்தங்களையும் போலவே, நடந்து முடிந்த யுத்தம் (இரண்டாம் உலக யுத்தம்) ஆண் பெண் பேதங்களை ஒழுங்கு படுத்திற்று. மகளிர் எப்பணிகளையும் ஆற்ற வல்லவர்கள் என்பதனை நான்காண்டு கால யுத்தம் நிரூபித்தது. யுத்தத்தின் செயல்பாடும், வெற்றியும் பெண்களைச் சார்ந்திருந்தது. விவசாயத்தில், அலுவலகங்களில், தொழிற்சாலைகளில் ஆண்களுக்கு மாற்றாக பெண்கள் பணி ஆற்றினார்கள். ஆனால் யுத்தம் முடிந்து அமைதி திரும்பியவுடன், செய்துவந்த பணிகளை மாத்திரமல்ல அவர்களது சுதந்திரத்தையும் சுய உரிமைகளையுங்கூட இழந்து வீட்டிற்குத் திரும்பினர். ஓட்டுரிமைக்காக இருபத்தைந்து ஆண்டுகாலம் அவர்கள் காத்திருக்க வேண்டியதாயிற்று, பிறகு அதற்கெதிராகவும், ஓர் யுத்தமென்றாகிவிட்டது.

அடுத்துவந்த ஆண்டுகள் பெண்களுக்குச் சோதனை மிகுந்த காலங்கள். ஆணினம், பெண்ணினம் உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற பாகுபாடு மீண்டும் தலைகாட்டியது. பிரான்செங்கும் உத்தியோகங்களில் பெண்மையை ஆண்மைப் படுத்துவதென்கிற பித்தம் தலைக்கேறி இருந்ததன் விளைவாக, தொழிலாளர்கள் மற்றும் தொழிற் சங்கங்களிடையே அவநம்பிக்கை, பெண்விடுதலைக் குறித்து பிறர் கொண்டிருந்த எதிர்மறையான அபிப்பிராயங்கள் (உ.ம். பெண்விடுதலை பேசும் பெண்கள் தங்களை ஆண்மைப்படுத்திக் கொள்கிறவர்களென்கிற விமர்சனத்திற்கு ஆதரவாக எழுதப்பட்ட ‘La Garconne’ மாதிரியான நூல்கள்) என பலதரப்பட்ட அச்சத்திற்கும் உள்ளான சமூகம், தமது அடையாளங்களை மீளப் பெறவேண்டு மென்று சொல்லி உரிமைக் குரல்வளையை நெறித்தது.

பண்டைப் பெண்நெறி போற்றப்பட்டது. பெண்கள், தாயாகவும், விசுவாசமுள்ள மனைவியாகவும் இருந்து ஆற்றவேண்டிய பணிகளைக் குறிப்பிட்டு, இயற்கைக்கு மாறாக அவர்கள் நடக்கக் கூடாதென்று அறிவுறுத்தப் பட்டார்கள். அதனை நடைமுறைபடுத்துவதற்கு ‘மகப்பேறு கொள்கை' அடிப்படையில் ஒரு சட்டம், அச்சட்டம் சொல்ல வந்ததென்ன : ஒரு பெண்ணானவள் தனது உயிரியல் அடிப்படையிலான கடமைகளை கட்டாயம் நிறைவேற்றியாக வேண்டும், அதிலிருந்து தப்பிவிடலாமென்கிற கனவுகள் கூடாது, தனது வாழ்வைத் தானே தீர்மானிக்கலாம் என்கிற முனைப் பெல்லாம் கூடாது. 1920ம் ஆண்டு இயற்றப்பட்ட இச்சட்டத்தின்படி, பெண்களுக்கு கரு கலைப்பு செய்துகொள்கின்ற உரிமை மறுக்கப்பட்டதோடு, அவர்களுக்குக் கருத்தடைக்கான தகவலறிவும் கிடைக்காமல் பார்த்துக் கொள்ளப்பட்டது.

இச்சட்டத்தின் ஐம்பதாண்டுகால அமலாக்கத்தில் பல்லாயிரக்கணக்கில் பெண்கள் இரகசியமாகக் கரு கலைப்பு செய்துகொண்டதும் உண்மை, அவர்களில் பலர் அதே எண்ணிக்கையில் மாண்டதும் உண்மை. இச்சட்டத்தின் பேரால் ‘பெத்தேன்' (Petain)(3) நிருவாகத்தில் துணி வெளுக்கும் பெண் ஒருத்தி, பெண்கள் பலருக்குக் கருக்கலைக்க உதவியதாகக் குற்றம் சாட்டப்பட்டு 1943ம் ஆண்டு கில்லெட்டினால் சிரச்சேதம் செய்யப்பட்டதை இங்கே நாம் நினைவு கூறவேண்டும். இந்த வகையில் தண்டிக்கப்பட்டவர்களில் அவள்தான் கடைசி என்றாலும், ஓர் உண்மை புரிகின்றது. அந்த நாட்களில் குழந்தை வேண்டாமென்று கருக்கலைப்பு செய்து கொள்வதைக் காட்டிலும், சம்பந்தப்பட்ட ஆணைக் கொன்றிருந்தால் ஒருவேளை சட்டம் குறைவாக தண்டித்திருக்குமோ என்னவோ.

1939ம் ஆண்டு இரண்டாம் உலகப்போர், தோல்வி, விஷி(Vichy)யில் அமைந்த நிர்வாகம்(3) பிரெஞ்சு குடியரசுக்கு மாத்திரமல்ல பெண்களுக்கும் பாதகத்தை இழைத்தது, இது பெண்ணியத்திற்கு நேர்ந்த இரண்டாவது மரணம். ஜெர்மானியர்களின் ஆக்ரமிப்பின்போது, பிரெஞ்சு விடுதலை இயக்கத்தில் கணிசமான அளவிற்குப் பங்கெடுத்த பெண்கள் அரிய சாதனைகளுக்குக் காரணமாக இருந்தும், ஜெனரல் தெ கோல் (De Gaulle)(4) 1944ம் ஆண்டு பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமையை வழங்கவென சட்டம் கொண்டு வந்திருந்தும், பிரெஞ்சுப் பெண்களிடையே பெரிதாக ஏதும் நடந்துவிடவில்லை. கிரீஸ் நாட்டைத் தவிர இதர ஜனநாயக நாடுகளில் பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமை பல ஆண்டுகளாக நடைமுறையில் இருந்து வந்தது.

டச்சு மக்கள் 1915ம் ஆண்டிலிருந்தும், ஸ்வீடன் மக்கள், ஆங்கிலேயர், ஜெர்மானியர் 1918ம் ஆண்டிலிருந்தும் அமெரிக்கர்கள் 1920ம் ஆண்டிலிருந்தும் இவ்வுரிமையை பயன்படுத்தி வந்தனர். இது தவிர பெரும்பாலான ஜனநாயக நாடுகளில் (மீண்டும் கிரீஸைத் தவிர்த்து) 15லிருந்து 49 சதவீதத்தியப் பெண்கள் தேர்தலில் வெற்றிபெற்று பாராளுமன்ற உறுப்பினர்களானார்கள். பிரான்சு நாட்டில் மட்டுமே அது எட்டமுடியாத குறியீடாக இருந்தது. இருபது ஆண்டுகளாக முயற்சித்து கடைசியில் பிரான்சு, இதர ஐரோப்பிய நாடுகளோடு இசைவுறாத ஒரு குறியீட்டைத் தொட்டது. 1945ம் ஆண்டின்படி பிரெஞ்சு பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையில் 5.4 சதவீதப் பெண்களும், 1968ம் ஆண்டில் 1.6 சதவீதப் பெண்களும் இடம் பெற்றனர்.

பிறகு இந்தக் குறியீடு சட்டென்று பலம்பெற்று 11 சதவீதமாக ஜூன் 1997ம் ஆண்டு உயர்ந்தது. ஆக இந்த வேகத்திலே போனாலுங்கூட, ஆண்களுக்குச் சமமான எண்ணிக்கையில் பாராளு மன்றத்தில் நுழைவதற்கு நமக்குக் குறைந்தது இன்னும் 390 ஆண்டுகள் தேவைப்படும். பெரிதாகச் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு இல்லையயன்கிற போதும், நம்மால் ஏதோ கொஞ்சம் மூச்சுவிட முடிந்தது. ஜெர்மானியர்களின் ஆக்கிரமிப்பின்போது இதர ஐரோப்பிய நாடுகள் கலகலத்துப் போயிருக்க, நாம் அவர்களுடன் கைகோர்த்ததால் கண்ட பலன். பெண்களுக்கான இடஒதுக்கீட்டு குறியீட்டினை உயர்த்துவதற்கான பெரிய நடவடிக்கையினை எடுக்கின்ற எண்ணமேதும் அரசுக்கு இல்லை. இவர்களுக்கு பாராளுமன்றத்தில் பெண்கள் உரிய பிரதி நிதித்துவம் பெறாதது அதிர்ச்சிதரும் விஷயமல்ல, மாறாக பெண்களுக்கான இடஒதுக்கீட்டுக் கொள்கைபற்றி நாம் பேசினால் அதிர்ச்சி தருகிறது.

தங்களை அடையாளப்படுத்திக் கொள்ள விழையும் அநேகப் பெண்களுக்குப் 1949ம் ஆண்டு வெளிவந்த ‘பெண்ணென்ற ஓர் இரண்டாமினம்' (Deuxieme sex) ஒரு முன்னுதாரணம் மட்டுமல்ல என்பது, அநேக பேருக்கு விளங்குவதில்லை. இந்நூல் பதிப்பித்து வெளிவந்த கொஞ்ச நாட்களிலேயே, உலக மகளிருக்கான மறைநூல் என்கிற தகுதியை பெற்றது. அறிவு ஜீவிகளிடையே பெரும் விவாதத்திற்குரியதாக இருந்தபோதிலும், வெகுசனப் பண்பாட்டில் குறிப்பிடும்படியான தாக்கமெதனையும் உண்டாக்கிவிடவில்லை. பெண்களின் நிலையை ஒரு புதிய கண்ணோட்டத்துடன் ஆய்வுக்கு உட்படுத்தி கண்ட பெரிய உண்மையை, ஏற்கிற மனமுதிர்ச்சியும் இங்கில்லை.

நான் முதன் முதலில் வாசித்தபோது, கருத்தியலில் எழுத்தாளர் ‘சிமோன் தெ பொவாரு'க்கிருந்த (Simone de Beauvoir), ஆழமும் கூர்மையும், விரிவான தளத்தினில் மிகுந்த அக்கறையுடன் மானிடவியலை அவர் கையாண்ட விதமும் என்னைப் பெரிதும் கவர்ந்தன என்கிற போதும், உலகில் இனந்தெரியாத ஒரு கூட்டத்தினைப் பற்றிய பதிவென்றே, அதாவது எங்கோவிருக்கும் ஆப்பிரிக்க குள்ளமனிதர்களின் இருப்பினை அவர் ஆய்வுசெய்து எழுதியதைப்போல எடுத்துக் கொண்டேன். இங்கே நமது மக்கள் கூட்டத்தில் ஒரு பகுதியினர் இன்னுங்கூட தாழ்ந்த நிலையிலேயே இருக்கிறார்கள் என்பதையும், அச்சிறுகூட்டத்தில் நானும் ஒருத்தியென்பதையும் ஒரேயொரு விநாடியாவது நினைத்துப் பார்த்திருப்பேனா வென்றால், இல்லை.

ஆம், அப்பரிதாபத்திற்குரிய குள்ளர்கள் கூட்டத்தில் நானுமொருத்தி. இங்கே இன்னொன்றையும் நினைவில் கொள்வது அவசியம். ஐம்பதுகளில் ‘சிமோன்' வரலாற்றாசிரியராகவும், தத்துவவாதியாகவும் அறியப்பட்டிருந்தாரேயன்றி ஒரு பெண்ணியவாதியாக அப்போதைக்கு அறியப்படவில்லை. மகளிரியக்கம், போதிய ஆதரவினைப் பெறமுடியாமற் போனதற்கு அதுகூட காரணமாக இருக்கலாம். பிறகு ஐம்பதெட்டாம் ஆண்டில் ‘லிட்ரேலுடைய' (Maximilien Paul Emile Litte) அகர முதலியில் ‘பெண்ணியம்' என்ற வார்த்தை விடுபட்டு போனதுங்கூடக் அதற்குக் காரணமாக இருக்கலாம்.

அமெரிக்காவில் மிகப்பெரிய வரவேற்பினைப் பெற்ற அப்புத்தகத்திற்கு எதிராக இங்கே பிரான்சில் கட்சி பேதமின்றி, பல்வேறு தரப்பினரும் ‘வரையறையைத் தாண்டிவிட்டதெனக்' குற்றம் சொல்ல ஒன்று திரண்டார்கள். அதில் கண்ட ‘பெண் விடுதலை' சிந்தனையும், ஆணுக்கு நிகர் பெண்ணென்ற குரலும், நமது ஆண்களை அதற்கெதிராக ஒன்று திரட்டிவிட்டது. கடந்த காலங்களால் கட்டியெழுப்பப்பட்டவர்கள் எனது சொந்தக் கதையை மாத்திரமல்ல, நமது கல்விப் பாடத்திட்டங்களிலோ அல்லது நமது வரலாற்று புத்தகங்களிலோ இடம் பெற்றிராத பெண்ணியவாதத்திற்குக் காரணமான ஒலிம்ப் தெ கூர்ழ் (Olympe de Rouge), பொலின் ரொலான் (Pauline Roland), உபெர்த்தின் ஒக்லெர் (Hubertine Auclert), மார்கெரித் த்யுரான் (Margurite Durand) மற்றும் பல புரட்சியாளர்களை அலட்சியம் செய்திருக்கிறேன்.

நவீன பெண்ணியச் சிந்தனைக்கு பெரிதும் காரணமாகவிருந்த மற்றுமொரு கட்டுரைத் தொகுப்பான ‘A Room of One’s Own’(1923), பிரெஞ்சு மொழியில் அப்போது வெளிவரவில்லை. நமது சமூகம் ஆணினத்தை எவ்வாறெல்லாம் தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடுகிறதென்பதை கட்டுரை ஆசிரியர் வெர்ஜீனியா உல்ஃப் (Virginia Woolf) நயத்தோடும், எள்ளளோடும் சொல்லியிருக்க, அப்புத்தகத்தை ஒரு சராசரி நாவலாகத்தான் அப்போது நான் எடுத்துக்கொண்டேன்.

அடிப்படையான ஆதாரங்களோ அதனை வெளிப்படுத்துவதற்கான போதிய வார்த்தைகளோ இன்றி; நம்மைச் சரியாக அடையாளப்படுத்திய பெண்களை முன்னுதாரணமாக கொள்ளாமலோ; நமது துயரங்களையும், நமக்கான வழித்தடங்களை மறுத்து இச்சமுதாயம் ஏற்படுத்திய வாழ்வியல் நெருக்கடிகளையும் எங்கனம் நாம் வெளிப்படுத்த முடியும்?

யுத்தத்திற்கு பிறகுவந்த நெருக்கடியான காலங்களில், குடும்ப அமைப்பு, ஆண் - பெண் உறவுகள் இவைகளைப் பற்றியெல்லாம் கேள்விக் குட்படுத்துவதென்பது இயலாததாக இருந்தது. பெண்களென்றால் இப்படித்தான் இருக்கவேண்டும், அது இயற்கையின் விதியென ஆண்டாண்டு காலமாக நம்பிக்கொண்டிருக்கிற உலகத்திற்கு எதிராக கொடி பிடிப்பதென்பதும் அப்போதைக்கு அவ்வளது சுலபமல்ல.

உலகப்போரின் போது எனக்கு இருபது வயது. இலத்தீன் மொழி பேராசிரியராக பணியாற்றி வந்தேன், எனினும் எனக்கு வாக்குரிமை இல்லை. பிறர் இதனைச் சாதாரணமாக எடுத்துக் கொண்டனர். யுத்தத்திற்குப் பிறகு முன்னெடுத்துச் செல்வதற்கு வேறு பிரச்சினைகள் அவர்களுக்கு இருந்தன. தவிர நான் அப்போதைய பெரும்பாலான இளம்பெண்களை போலவே அடக்கமாக இருக்க வேண்டுமென விதிக்கப்பட்டவள். அதாவது அக்காலக்கட்டத்தில் உற்பத்தி செய்யப்பட்ட பல்லாயிரக்கணக்கான பெண்களில் ஒருத்தியாக, மூச்சுமுட்ட ஒழுக்கம் திணிக்கப்பட்டு, சுயசிந்தனைகளுக்கு வாய்ப்பற்ற கிறித்துவப் பள்ளிகளின் வார்ப்பாக இருந்தவள். ‘பண்டைய வழக்குகள்' நுகத்தடியாக எனது கழுத்தில் பூட்டப்பட்டிருந்தது. சிறையில் அடைபட்ட உணர்வு. கழுத்துவரை விலங்குகள். எவரோடு, எப்படி எனது எதிர்ப்புக் குரலை வெளிப்படுத்துவதென்கிற மனக்குமுறலுக்கோ பலனேதுமில்லை.

இந்த நிலைமையில்தான் 1968ம் ஆண்டு ஒரு பெரிய அலை வீசியது, அந்த அலைக்கு நமது மக்களின் தீவிரமான விடுதலை உணர்வும், காலாங்காலமாய் நமது சமூக வழக்கிலிருந்த தந்தை வழி சமுதாயத்தின் எதேச்சதிகாரத்தை நிராகரித்த துணிச்சலும் காரணமாயின. எனினும் எழுபதுகளில் இடதுசாரி அரசியல் அலை மீண்டும் வீசும்வரை காத்திருக்க வேண்டியிருந்தது. எல்லாமே கனவுகள் என்று வெகுசீக்கிரத்தில் புரிந்ததால் மிகப் பெரிய ஏமாற்றம், குறிப்பாக நமது பெண்களுக்கு, நடந்தவை அனைத்தும் நாடகங்களாகவே இருந்தன. இறுதியாக தங்கள் மரியாதையைக் காப்பாற்றிக் கொள்ள பெண்களே வீதியில் இறங்கவேண்டியக் கட்டாயம்.

புரட்சியயன்று சொல்கிறபோது ஒரு தொடக்கம் தேவைப்படுகிறது. நமது இயக்கத்திற்கும் அப்படியான நாளாக 1970ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 20ம் தேதி அமைந்தது. அன்றைய தினம் துணிச்சல் மிக்க பெண்களில் சிலர் உலகப்போரில் உயிரிழந்த வீரர்களுக்கென்று எழுப்பப்பட்டிருந்த நினைவிடத்திற்குச் சென்று மலரஞ்சலி செலுத்தினார்கள். அவர்கள் அஞ்சலி செலுத்தியது, இறந்துபோன வீரர்களுக்காக அல்ல, அவ்வீரர்களின் பெருமைக்குக் காரணமாக இருந்த மனைவிமார்களுக்காக. அப்பெண்கள் அனைவரும் உடனேயே கைது செய்யப்பட்டனர். மறுநாள் ‘M.L.F.(5) பிறந்தது' என நாளேடுகளில் தலைப்புச் செய்தி. மற்றொரு இதழோ, ‘பெண்கள் சுதந்திரம், ஆண்டு பூஜ்யம்' எனத் தலைப்பிட்டு எழுதியது. 1968ம் ஆண்டு வெடித்த போராட்டத்தின் தொடர்ச்சியாக நடத்தப்பட்ட இவ்வியக்கத்தின் நோக்கம், 1972ம் ஆண்டில் ‘ஒலிம்ப் தெ கூர்ழ்' (Olympe De Gourage) உரத்து குரல் கொடுத்ததைப் போல, ‘ஒன்றிரண்டு பெண்களுக்காக குறைந்தபட்ச சலுகைகளை யாசித்து பெறவேண்டுமென்பதல்ல, ஒட்டுமொத்த பெண்களுடைய நியாயமான சலுகைகளை உரிமையுடன் கேட்பது', அப்படிப் பேசியதற்காவே கிலெட்டினால் அவர் சிரம் வெட்டப்பட்டது.

அனைத்து தரப்புப் பெண்களுக்கும் முதன் முறையாக பேச்சுரிமை வழங்கியும், கடந்தகால பெண்ணியவாதிகளின் அபிப்பிராயத்தை முற்றிலும் ஒதுக்காமலும், ஒருபக்கம் ஆனந்த களிப்பிற்கும் இன்னொரு பக்கம் அர்த்தமுள்ள விழிப்புணர்வுக்கும் பெரிதும் காரணமாகவிருந்த ‘பொவாருடைய' (Beauvoir) பங்களிப்பை இறுதியில் அங்கீரித்தும், பலமுனைகளிலும் பெண்கள் அடக்குமுறைக்கு ஆளாவது குறித்து, பல்வேறு தரப்பினரும் ஆய்வுகள் மேற் கொண்டனர். ‘உயிர் பிழைத்திருக்கிற மிகப்பெரிய அடிமைகள் கூட்டமென்று' (La plus massive survivance de 1’esclavage) ஜெர்மானிய மானுடவியலாளர் தியோன் (Tillon) அவர்களால் விமர்சிக்கப்பட்ட பெண்கள் கூட்டத்தை வெளிச்சத்திற்குக் கொண்டு வரும் முயற்சியாக தடைகள் மீறப்படுகின்றன. மொழி மாற்றத்திற்கு உள்ளாகிறது. காலங்காலமாய் இருந்துவந்த குடும்பம் என்கிற கட்டமைப்பு கலகலத்துப் போகிறது, விளைவு கடந்த நாற்பது ஆண்டுகாலமாக நான் பொய்யாய் நடத்திவந்த வாழ்க்கையும் அதன் மீதான எனது கருத்து உருவாக்கமும் நொறுங்கிப்போயின.

பெண்ணுரிமை இயக்கங்கள், ஆண்களை உதாசீனப்படுத்துவதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றன என்று பொதுவாகச் சொல்லப்படும் குற்றச்சாட்டு. வழக்கம்போல நீயா? நானா? என்பதால் விளைந்த சிந்தனை. ஆணும் பெண்ணுமாய் இருக்கிற பாராளுமன்ற அவையிலும் சரி அல்லது அரசியல்வாதிகளின் கூட்டத்திலும் சரி, ஒரு பெண் உறுப்பினர் (அவர் இடதுசாரியோ அல்லது வலது சாரியோ) என்ன பேசினாலும், நான் அவதானித்த வகையில் ஆண்கள் கூட்டத்திற்கு அது வெறும் குப்பை, அர்த்தமற்ற பேச்சு. ஏதோ இவர்களுக்குப் புரியாத மொழியில் பேசுவதாய் நினைக்கிறார்கள். உரையின் முக்கியத்துவம் குறைகிறது, கேட்கின்ற ஆண்களும் அக்கறையின்றி உட்கார்ந்திருக்க, சம்பந்தப்பட்டப் பெண்களின் பேச்சு காற்றோடு போகிறது.

அதுமாதிரியான சூழ்நிலைகளில் பெண்கள் தங்களிடையே சுதந்திரமாக உரையாடிக் கொள்வதையும், பிறர் கேட்க தங்கள் கருத்தைச் சொல்ல முடிகிற அதிர்ஷ்டத்தையும் காணும் வாய்ப்பு எனக்கு அமைந்ததுண்டு. கூச்சம், உறுதியற்ற தன்மை, எனது திறன் குறித்த அவநம்பிக்கை, எப்படியிருக்க வேண்டுமோ அப்படி இல்லையேயயன இரவு பகலாய் வருத்தம் என்றிருந்தபோதுதான், இதற்கெல்லாம் தீர்வாக ஒர் அதிசயம் நிகழ்ந்தது. அது ‘இரு பெண்களுக்கிடையேயான ஓர் புதிய வெளிப்பாடு, என்னவென்று அறிந்திராத நாட்டிற்கோ அதுவோர் விநோதமான அதிர்ச்சி'. சட்டென்று அவளுக்கு ஒரு தேஜஸ் கிடைத்தது. அவள் நல்லவளானாள்.

மாற்றம் அரசியலிலும் நேர்ந்தது 74ம் ஆண்டு பெண்களுக்கென தனி அமைச்சகம் ஏற்படுத்தப்பட்டது, பிரான்சுவாஸ் ழிரூ (FRANCOISE GIROUD) அதன் பொறுப்பினை ஏற்றார். பிரச்சினைகளை முறையாக அணுகத் தவறிவிட்டதால் இரண்டு ஆண்டுகள் கழித்து அது கலைக்கப்பட்டது. அதே ஆண்டில் சிமோன் வெய் (SIMONE VEIL) முயற்சியால் விரும்பினால் கருக்கலைப்பு செய்து கொள்ளலாமென சட்டம் (L’INTERUPTION VOLONTAIRE DE GROSSESSE) இயற்றப்பட்டது. கருத்தடைக்கான உரிமையையும், (68லேயே அதற்கான சட்டம் இயற்றபட்டிருந்த போதிலும் முதன் முறையாக அமுலாக்கப்படுகிறது.

‘ELLE’ (அவள்) இதழ் பெண்ணினத்தின் வெற்றி என்பதாக ஒரு சிறப்பிதழினை வெளியிட்டு, அதற்கு காரணமான பெண்ணியவாதிகளாக கிறிஸ்தியன் ரோஷ்போர் (CHRISTIANE ROCHEFORT), மார்கெரித் த்யூரா (MARGUERITE DURAS), பிரான்சுவாஸ் தோபோன் (FRANCOISE D’EAUBONNE), எவ்லின் சுல்லெரோ (EVELYNE SULLEROT), பெனுவாத் மற்றும் ஃப்ளோரா க்ரூல்த் (BENOITE et FLORA GROULTE), மொனிக் விட்திழ் (MONIGUE WITTING), சிமொன் தெ பொவார் (SIMONE DE BEAUVOIR), லூயீஸ் வைஸ் (LOUIS WEISS), அர்லெத் ல கிய்யே (ARLETTE LA GUILLER), ழிஸேல் அலிமி (GISELE HALIMI), டெல்பின் செரிக் (DELPHINE SEYRIG), லிலியானா கவான்னி (LILIANA CAVANNI), யனிக் பெலோன் (YANNICK BELLON) மற்றும் பலரையும் குறிப்பிட்டுக் கட்டுரை எழுதியது. படைப்பாளினிகள், வழக்காளினிகள், திரைப்பட இயக்குனிகள்(?), தத்துவ ஆசிரியைகள் எனச் செய்யும் தொழில் குறித்த பெண்பாற் சொற்கள் குறைந்தபட்சம் தற்காலிகமாகவாவது பெண்ணியவாதத்தை அங்கீகரிக்க வகைசெய்தென்பதை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.

பிறகு 1975ம் ஆண்டினை ஐக்கிய நாட்டு ஸ்தாபனம் ‘மகளிர் ஆண்டாக' அறிவித்தது. ‘அன்னையர் தினம்' என்று அறிவித்து அன்றைக்கு மாத்திரம் அன்னையருக்கு நல்லது செய்ய முற்படுவதில்லை? அதுபோல அவ்வருடம் பெண்களுக்குச் சாதகமாக சிலவிஷயங்கள் நடந்தேறின. பதிப்பாளர்கள் பெண்ணெழுத்துகளில் ஆர்வம் காட்டினர். அதற்கு முந்தைய நாள்வரை கேட்பாரற்றிருந்த அவர்களது சிந்தனைகள் அச்சிலேறின. பெண்ணியத்தைப் பேசுவதற்கென்று பல நூல்கள் : HELENE CIXOUS, ANNIE LECLERC, KATE MILLET என்று பலரது எழுத்துக்களும் புத்தக வடிவம் பெற்றன .பெண்ணாக இருப்பதும், ஷந்தால் ஷவாஃப் (CHANTAL CHAWAF) ‘பெண்ணைப்' பற்றியும் லுஸ் இரிகரி (LUCE IRIGARY) ‘திறந்து விரிவது' (Speculum) பற்றியும் ‘தோற்ற பெண்கள்' (FEMMES BATTUES) என்று எரென் பிஸ்ஸேவுல் (ERIEN PIZZEY), ‘சூதக இரத்தம்' (SAING MENSTRUEL) என்று மரி கர்டினல் (MARIE CARDINAL) என்பவரும், மாதவிடாய், பெண்குறியென இதுவரை தீண்டப் பாடாதவை எனக் கருதப்பட்ட, இலக்கியங்கள் நிராகரித்த சொற்களை தலைப்பாகக் கொண்டு படைப்புகள் வெளிவந்தன.

இம்மாதிரியான சூழ்நிலையில்தான் ‘அவள் விதிப்படி ஆகட்டும்' (AINSI SOIT-ELLE) 1975ம் ஆண்டு வெளிவந்தது. பெண்ணியவாதிகளின் புத்தகங்கள், ஏதோ ஒரு பைத்தியக்காரக் கூட்டத்திற்கு சம்பந்தப்பட்ட தென்கிற காலம்போய், ஆண்வர்க்கம் அவற்றை வாசிக்கத் தயங்கியபோதும், ஊடகங்களின் நியாயமான ஆதரவை அவை பெற்றன. சில வேளைகளில் அவற்றின் சாட்சியங்கள் இரைச்சல் மிகுந்ததாகவும், முன்னிறுத்துவதில் தெளிவில்லாமலும், அபத்தமாகவும், அக்கறைகொண்டதாகவும், அசாத்தியமானதாகவும், அர்த்தமற்றதாகவும் இருந்தபோதிலும் காலங்காலமாக வாய்மூடிக்கிடந்த அவை இன்று வாய் திறக்கிறபோது, நம்மை நெகிழ வைக்கின்றன.

புத்தம்புது இருப்பளித்த சந்தோஷமும், இருபாலரும் சமமென்ற முழக்கமும், ‘அடைய வேண்டியதை அடைந்துவிட்டோம்' என்ற எண்ணத்தினை நமக்களித்தது. உண்மையில் வெற்றிபெறும் நிலையில் விசிலூதி நம் ஆட்டத்தை நிறுத்திய கதைதான். நாமெறிந்த ஈட்டியினை நமக்கெதிராகத் திருப்புகின்றனர். ‘பெண் விடுதலை இயக்கம்' இன்றைக்கு சோளக்கொல்லை பொம்மையாக்கப்பட்டிருக்கிறது. பெண்ணியவாதிகளை ஓரினச்சேர்க்கை கூட்டமென்றும், விரைவாங்கிய ஆண்களென்றும், ‘பெண்ணியம்' என்பது ஏதோ தகாத சொல்போலவும் இன்றைக்கு முன்னிறுத்தப்படுகிறது. ஊடகங்கள் போராட்டம் இனி அவசியமில்லையென்றும், இனி அவரவருடைய இடத்திற்கு நல்லப்பிள்ளையாக, (ஆண்கள் எப்போதும்போல தங்கள் முதன்மை ஸ்தானத்திற்கு) திரும்பலாம் என்பதுபோல எழுதுகின்றன.

ஆனால் புரட்சியிலே பங்கு பெறாத பெண்களும் நாட்டில் இருக்கின்றார்களென்பதும், அவர்களுக்கு மீண்டும் தங்கள் பூர்வீகத்திற்குத் திரும்புகிற எண்ணமேது மில்லையென்பதும், ஊடகவியலாளருக்கு விளங்குவதில்லை. பெண்ணியம் வெற்றிபெற்று விட்டதென்றும், சமத்தன்மையை அவள் அடைந்துவிட்டதாகவும் ஒருவித பொய்யான வதந்தி இன்று பரப்பப்படுகிறது.

இதுவொரு வகையில் நமது இளம் பெண்களை ஏமாற்றும் தந்திரம், திசைதிருப்பும் செயல். ‘O’வின் கதை (Histoire d’O) என்றொரு திரைப்படம், அதில் அடங்கி நடக்கவும், அடிபடவும், பாலியல் வன்முறைகளுக்கு உட்படவும் பெண்களுக்கு பிரியம் அதிகமெனச் சொல்லி சென்ற நூற்றாண்டின் அதர்மத்தை நியாயப்படுத்துகின்றனர். எதிர்க்கும் பெண்ணியவாதிகளை கேலி பேசுகின்றனர். வன்முறை, பாலியல் ரீதியில் பெண்களை உபயோகப்படுத்துவது, ஆணாதிக்கம் இவை மூன்றிற்கும் இடையில் உண்மையில் எந்தவிதத் தொடர்புமில்லை என்பது அவர்களின் வாதம்.

இறுதியாக சிமொன் தெ பொவார் தவறிழைத்து விட்டாரென்றும், பெண்ணாகப் பிறந்தவள் அடங்கிக் கிடந்தே வாழ்க்கையை அனுபவிக்க வேண்டுமென்றும், ஆணும் பெண்ணும் சமம் என்று சொல்லிக்கொண்டிராமல், அவன் தேவையை நிரப்பி வாழ்வின் தாத்பரியத்தையும், காதலின் மேன்மையையும் பெண் பிறப்பின் பலனாக அடைய வேண்டுமென சொல்லி வருகிறார்கள். அப்படி சொல்கிறவர்கள் ‘பெண்ணென்ற ஓர் இரண்டாமினத்தில்' (DEUXIEME SEX) மிப்பெரிய புரிதலுக்கு வழிவகுக்கிற ‘உடலியல் மாத்திரமே நமது மேன்மைகளை தீர்மானிப்பதல்ல' என்ற வாக்கியத்தின் உண்மையான பொருளை மறந்துவிடுகிறார்கள்.

1972ம் ஆண்டில் எழுதப்பட்டதென்பதை வாசகர்கள் நினைவு கூர்வது அவசியம்.

1. மே - ஜூன் - 1968. மாணவர்கள் தொடங்கப்பட்ட இப்போராட்டமானது, மெல்லமெல்ல அனைத்துத் தரப்பினரின் ஆதரவுடன் விரிவடைய அரசாங்கமே ஸ்தம்பித்துப் போனது. இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிகள் பிரெஞ்சுமக்களிடையே ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியிருந்தது, ஸ்திரத் தன்மையற்ற எதிர்காலங்குறிந்த கவலையும், பாரம்பரிய சமூகக் கட்டமைப்பு ஏற்படுத்தியிருந்த இரணங்களும் அனைத்துத் தரப்பினரும் வீதியில் இறங்கக் காரணமாயிற்று.

2. மனிதர் உரிமைச் சாசனப் பிரகடனம் (1789 ஆகஸ்டு 26)

3. REGIME DE VICHY (1940 - 1944). முதல் உலகப்போரில் விஷியை நிர்வாகக் கேந்திரமாகக்கொண்டு ‘பெத்தேன்' (Petain) என்ற ராணுவத் தளபதியின் தலைமையில் ஜெர்மானியர்களுக்கு ஆதரவாக செயல்பட்ட பாஸிஸ பிரெஞ்சு நிர்வாகம்.

4. Charle De Gaulle (1890 - 1970) -இரண்டாம் உலகப்போரின்போது இலண்டனிலிருந்து கொண்டு நாஸிகளுக்கு எதிராக ழான் மூலன் (Jean Moulin) உதவியுடன் விடுதலை இயக்கமொன்றை நடத்தியவர், 1958-1969 வரை ஆறாவது பிரெஞ்சுக் குடியரசின் முதற் தலைவராகத் திகழ்ந்தவர்.

5. Mouvement de liberation des femmes -பிரான்சு நாட்டில் பெண்கள் விடுதலைக்கான இயக்கமென்பது 1970ல்தான் காலுன்றியது.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com