என் வீடு
செல்வக்குமாரி
திறந்தே கிடக்கிறது
சன்னல் கதவுகளற்ற
மிகச்சிறிய என்வீடு.
திருடர்கள்
வெகுஎளிதாக நுழைந்து
திருட முடியாதபடிக்கு
ஏகப்பட்டவைகள்
அடைத்துக் கொண்டுள்ளன.
இருந்தபோதும்
விருந்தினரை வரவேற்கும்
ஒரு நாற்காலி காலியாக உள்ளது.
யாதுமற்ற ஒரு வழிப்போக்கன்
வெகுஇலகுவான நிர்வாணத்துடன்
அனுமதியின்றி நுழைந்து
யாவற்றையும் நிர்மூலமாக்கி
வெளியேறிவிடுகிறான்.
நாற்காலி மட்டும்
எதையோ நிரப்பிக் கொண்டுள்ளது.
இறுதியில்
மிகச்சிறிய என்வீடு
சுவர்களற்ற பெருவெளியாய்
மிகப்பிரமாண்டத்துடன்
விரிந்துக் கொண்டேயிருக்கிறது
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|