தலையங்கம்
இடதுசாரிக் கட்சியினருக்கு மாற்றுமருத்துவத் துறையினரின் திறந்த மடல்
“தடுப்பூசி போடப்பட்டு இறந்த குழந்தை களின் குடும்பங்களுக்கு உரிய நிவாரணத் தொகை கிடைப்பதற்காக சில இடங்களில் போராட்டங்கள் நடத்தினோம் ; சட்டமன்றத்திலே வலியுறுத்தினோம். இப்போதும் குழந்தை மரணங்கள் தொடர்ந்து நடக்கின்றன. இப்பிரச்சனைகளில் ஆணிவேர்களை இன்னும் நாங்கள் ஆராயவில்லை என்பதைச் சுயவிமர்சனமாய் ஏற்றுக் கொள்கிறேன்”... என்று 21.09.08 அன்று திண்டுக்கல்லில் நடைபெற்ற நலம் பேரமைப்புக் கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சி சட்டமன்ற உறுப்பினர் பாலபாரதி எம்.எல்.ஏ. அவர்கள் பேசும்போது குறிப்பிட்டார். இக்கருத்தின் வெளிச்சத்தில் சில சிந்தனைகள் தொடர்கின்றன.
மற்ற அரசியல் கட்சிகள் போல ஓட்டுக்காகச் செயல்படுவது, பதவிகளுக்காக சாதி, சமயம், இனம், பணம் போன்றவற்றைத் துருப்புச் சீட்டாய் பயன்படுத்துவது, மக்கள் பணத்தில் மஞ்சள் குளிப்பது, வஞ்சலாவண்யங்களில் மூழ்கித் திளைப்பது போன்ற இழிநிலை அரசியலுக்கும் கம்யூனிஸ்டுக் கட்சிகளுக்கும் சம்பந்தமில்லை. கம்யூனிஸ்டுகள் உழைப்பாளிகளுக்காகவும், ஒடுக்கப்பட்டவர்களுக்காகவும் உடல்பொருள் ஆவியை அர்ப்பணிக்கக்கூடியவர்கள்; பொதுமக்களை அறிவுப்பூர்வமாக வழிநடத்தக் கூடியவர்கள்.
அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை தொலை நோக்குப் பார்வையுடன் இந்தியாவிலுள்ள கம்யூனிஸ்டுகள் எதிர்த்து வருவதை உலகம் அறியும். இந்திய அணுசக்தித் துறையின் வளர்ச்சி என்பது சுய முயற்சிகளால் உருவானது. 1974 லும் 1998 லும் நாம் அணுகுண்டு சோதனைகள் நடத்தியபோது அமெரிக்கா தொழில்நுட்பம் மற்றும் எரிபொருள்கள் இந்தியாவுக்கு வழங்கக் கூடாது என ஒரு கூட்டமைப்பை (சநஎ) உருவாக்கியது
கடந்த 40 ஆண்டுகளாக இந்திய அணுசக்கித் துறையைத் தன் கண்காணிப்புக்குள் கொண்டுவர அணுஆயுத வல்லரசுகள் பல முயற்சிகள் செய்தன. ஆனால் இயலவில்லை. ஆனால் இப்போது நாட்டின் 14 அணு உலைகளைச் சர்வதேச அணுசக்தி முகமை கண்காணிக்க அனுமதி அளித்ததின் மூலம் நூற்றுக்கணக்கான விஞ்ஞானிகளின் தன்னலமற்ற சேவையையும்,நாட்டின் இறையாண்மையையும் ஒரு சேர பறிகொடுத்திருக்கிறது அரசு. நாம் இதுவரை கையாண்டு வரும் தொழில்நுட்பம், மேற்கொண்டுவரும் ஆராய்ச்சிகள், விஞ்ஞானிகள் பற்றிய விரவங்கள், ரகசியமாகச் சேகரித்துள்ள அணுஆயுதத் தயாரிப்புக்கான முலப்பொருட்கள் என எல்லாவற்றையும் இழக்கப் போகிறோம். அணு ஒப்பந்தத்தில் மற்றொரு முக்கிய அம்சம் அமெரிக்க இந்திய கூட்டு ராணுவ பயிற்சி. மேலும் இந்த ஒப்பந்தத்தால் தெற்கு ஆசியப் பகுதியில் பதட்டம் அதிகரிக்கும். சீனா, ஈரான், பாகிஸ்தானுடன் உறவு பாதிக்கும்.
அணுக்கழிவுகளை பாதுகாப்பான முறையில் அழிக்க உரிய வழிகள் இது வரை கண்டறியப்படவில்லை. முன்னேறிய நாடுகளில் அணுமின் முயற்சிகள் வெற்றிபெறவில்லை. இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, கனடா போன்ற நாடுகள் இதனை மறுபரீசிலனை செய்கின்றன. மாற்று ஏற்பாடுகளை நோக்கி நகர்கின்றன. இந்நிலையில் அணுசக்தி ஒப்பந்தம் இந்தியாவிற்கே வெளிச்சத்தை கொடுக்கும் என்கிறார் பிரதமர்.
நாட்டின் மின் உற்பத்தியில் அணு சக்தியின் பங்கு 3 சதவீதம் மட்டுமே உள்ளது. இந்த ஒப்பந்தம் முழுமையாக செயல்படுத்தப்பட்டால் 7 % முதல் 9 % க்கு மேல் அதிகரிக்க வாய்ப்பே இல்லை. ஆனால் அதற்காக நாம் அரசியல் ரீதியிலும், பொருளாதார ரீதியிலும் சந்திக்கப்போகும் இழப்புகள் ஏராளம், இவ்விவரங்களை மக்களிடம் எடுத்துக்கூறி ஆளுவோரின் சூழ்ச்சிகளுக்கு எதிராக கடுமையான எதிர்நிலை எடுத்துச் சரித்திரச் சிறப்புமிக்க பங்களிப்பை இடதுசாரிகள் இந்திய அரசியலில் நிகழ்த்தி வருகின்றனர்.
அணுசக்தித் துறையைப் போலவே மருத்துவத் துறையும் மிக நுட்பமான தளங்களில் எண்ணற்ற ஆபத்துக்களையும், பாதிப்புகளையும் ஏற்படுத்தக்கூடியது. ஆங்கில ஏகபோக மருத்துவம் ஏகாதிபத்தியத்திங்களின் கைக்கருவியாய் செயல்படப் கூடியது. ஆனால் விஞ்ஞானம், தொழில் நுட்பம் எனும் பெயரால் ஆங்கில மருத்துவம் பலராலும் ஏற்கப்படுகிறது.
ஆய்வுகள் இல்லை, அறிவியல் அடிப்படைகள் இல்லை என்று கூறி மக்கள் மருத்துவமான அக்குப்பஞ்சரை சீனாவில் மாசேதுங் தூக்கி எறிந்து விடவில்லை. இன்று உலகம் முழுதும் அக்குப்பஞ்சர் உள்ளிட்ட சீன பாரம்பரிய மருத்துவங்களுக்கு வரவேற்பு உள்ளது. இதற்கு சீனா மிகப்பெரிய ஆதரவு பூமியாக, ஆதர்ச சக்தியாக பிரகாசிக்கிறது. அக்குப்பஞ்சர் மருத்துவத்தை விஞ்óஞானப்பூர்வமாக வளர்த்தெடுத்து உலக நல நிறுவனம் ஏற்குமளவு உயர்த்தியுள்ளது.
இந்தியாவில் மேற்கு வங்காளத்தில் மட்டும் ஹோமியோபதிக்கு மக்களிடம் செல்வாக்கு உள்ளது. சுதந்திரப் போராட்ட கால இயக்கத் தலைவர்களும், பொதுவுடைமையாளர்களும் இதற்குப் பங்களிப்புச் செய்துள்ளனர். ஆனால் பிறமாநிலங்களில் இத்தகைய நிலை இல்லை. உலகளவில் சீனாவைப் போல வேறு எந்த பொதுவுடைமை நாட்டிலும் இயற்கை முறை மருத்துவங்களை / தாயக மருத்துவங்களை / மாற்று மருத்துவங்களை அங்கீகரித்து ஏற்கவிலலை.
ஒட்டு மொத்தமாக ஆய்வு செய்தால் கம்யூனிஸ்டுகள் உலகம் முழுதும் ஹோமியோபதி அக்குப்பஞ்சர், இயற்கை மருத்துவம், யோகா போன்ற மாற்று மருத்துவமுறைகள் குறித்து தீர்க்கமான ஆய்வுகளும் முடிவுகளும் மேற்கொள்ளவில்லை என்றே தெரிகிறது.
இந்தியாவில் இவ்வளவு காலமாக அமெரிக்கா, ஜப்பான், சிங்கப்பூர், உள்ளிட்ட அன்னிய நாடுகளின் நுகர் பொருட்கள் விற்கப்பட்டு வந்த போதெல்லாம் மௌனமாக அடங்கிக் கிடந்த இந்திய ஊடகங்கள் சீனாவிலிருந்து பொருட்கள் இறக்குமதி செய்யப்படும் போது மட்டும் தேசத்தின் நலனுக்கே மிகப்பெரிய கேடு நேர்ந்து விட்டதாக கதறுகின்றன. இதே நிலைதான் மருத்துவத் துறையிலும் உள்ளது. ஊடகங்களும், பெரும் மருந்து நிறுவனங்களும் மாற்றுமருத்துவங்களை அறிவியல் பூர்வமான மருத்துவம் இல்லை என்றும் சித்தரிக்கின்றன. இத்தகைய பார்வை சரியானதா என்பதை கம்யூனிஸ்ட் இயக்கங்கள் ஆழ்ந்து பரிசீலிக்க வேண்டும்.
ஹோமியோபதியையும் இந்திய மருத்துவங்களையும் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்தும் அரசுகள், அரசியல் கட்சிகள் ஆங்கில மருத்துவத்தின் கொடூரமான சுரண்டலையும், பாதிப்புகளையும் தீவிரமாக உணரவில்லை. தடைசெய்யப்பட வேண்டிய (ஆங்கில) மருந்துகள், (ஆங்கில) மருந்துக் கம்பெனிகள், அரசு மருத்துவமனைகளின் விரிவாக்கங்கள், (ஆங்கில) மருத்துவர் தேவைகள் பற்றி தெளிவான கோரிக்கைகளை முன்வைக்கும் இடதுசாரிக் கட்சிகளும், அமைப்பு களும் மாற்று மருத்துவங்களில் (சீனாவைப் போல) மிகவும் கவனம் செலுத்தவேண்டியுள்ளது.
ஆங்காங்கே ஒரு சில இடது சிந்தனையாளர்கள் ஹோமியோபதியை புரிந்தவர்களாய், ஏற்பவர்களாய் இருப்பது ஆறுதலான விஷயம். எனினும் மருத்துவத்துறையில் ஏகாதிபத்தியங்களின் ஊடுருவலை ஒழிக்கவும், கோடிக்கணக்கான எளிய மக்களை நோய்களி லிருந்து இயற்கையான முறையில் பாதுகாக்கவும், மருத்துவத்துறையின் ஈவிரக்கமற்ற சுரண்டலைத் தடுத்து நிறுத்தவும் மாற்று மருத்துவங்களை முன்னெடுத்துச் செல்ல வேண்டும். இடது சாரி அரசியல் அமைப்புகள் மாற்று அரசியல், மாற்றுப் பொருளாதாரம், மாற்றுக்கல்வி, மாற்றுக் கலாச்சாரம் போல மாற்று மருத்துவங்கள் குறித்தும் தெளிவான கொள்கை முடிவுகள் மேற்கொள்ள வேண்டும் என்பது மாற்றுமருத்துவத் துறையினரின் தோழமையான வேண்டுகோள்.
மிக்க அன்புடன்... ஆசிரியர்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|