Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
Keetru Maatru Maruthuvam
Maatru MaruthuvamMaatru Maruthuvam
ஜூலை 2008

இவர்களல்லோ மருத்துவர்கள்!
Dr.நா.சண்முகநாதன்

தொழில், சேவை - இவ்விரு சொற்களும் ஒன்றிலிருந்து ஒன்று வேறுபட்டது. ஒருவகையில் ஒன்றுக்கு எதிர்பதம் இன் னொன்று. ஆனால் இவ்விரு சொற்களையும் ஒருங்கிணைத்து சேவைத் தொழில் என்ற சொற்கோவை அண்மைக் காலமாக புழக்கத்துக்கு வந்துள்ளது. மருத்துவம், கல்வி போன்றவை யெல்லாம் சேவைத் தொழில்களாம். இப்பெயரால் பெரும் மூலதன முதலீட்டுடன் பன்னாட்டு நிறுவனங்கள் இத்துறையை கபளீகரம் செய்ய முனைந்து வருகின்றன. இவர்களுக்கு ஆதரவாக மருத்துவச் சட்டங்களை மாற்றவும் இயற்றவும் கைகட்டி காத்திருக்கின்றன மத்திய மாநில அரசுகள்.

‘காசுக்கேற்ற பணியார’மாக மருத்துவ சேவை மாறிவரும் காலகட்டத்தில் இதன் விளைவாக மக்கள் மடிந்துவரும் நிலையில், இவையெல்லாம் கண்டு மனம் வெதும்பி நிற் போர் பெருகிவரும் வேளையில், பாலைவனச் சோலை போல இரண்டு பெயர்கள் ஆறுதல் அளிப்பதாக உள்ளன. அவை.
1. DR. நார்மன் பெத்யூன்
2. DR. பினாய் சென் யார் இவர்கள்?

(II)

இரண்டு பேருமே ஆங்கில மருத்துவர்கள். இருவருமே T.B. நோய் சிகிச்சையில் புகழ் பெற்றவர்கள். மக்களைத் தேடி மருத்துவர்கள் போக வேண்டும் என்ற கருத்துடையோர். மருத்துவர்கள் நோயாளர்களின் எஜமானர் கள் அல்ல, அவர்களின் சேவகர்கள் என்பதை தமது வாழ்க்கை செய்தியாக முன் வைத்தவர் கள். சாமான்ய மக்களை மருத்துவ அறிவு பெற்ற வெறுங்கால் மருத்துவர்களாக மாற்றிய வர்கள். சாமான்ய மக்களின் இதய சிம்மாச னத்தில் நிரந்தரமாய் இடம் பிடித்தவர்கள். இவர்களது மக்கள் பணிக்காக ஒருவர் ஜப்பான் ராணுவத்தால் கொல்லப்பட்டார். இன்னொருவர் சத்தீஸ்கர் அரசால் பொடா சிறையில் உள்ளார். யார் இவர்கள்?

(III)

வடக்கு அண்டாரியாவில் 1890ம் ஆண்டு மார்ச் மாதம் சாதாரண மதப்பாதிரி யாரின் முதன் மகனாகப் பிறந்தார் பெத்யூன். பின்னர் ரொரண்டாவிலும் பிரிட்டனிலும் பிரான்சிலும் பயின்றார். அந்த பருவத்து இளைஞர்களைப் போல ஆடல் - பாடல், இசை, கலைப்பொருள் சேகரிப்பு, ஓவியம், குடி, காதல் என மகிழ்ச்சியாய் கொண்டாட்ட மாய் வாழ்ந்து வந்தார் பெத்யூன். 1923ல் எடின்பெர்க்ல் F.R.C.S. முடித்தார். அங்கேயே திருமணம் செய்து கொண்டார். கனடாவின் தொழில் நகரமான டெட்ராய்டில் கிளினிக் துவங்கினார். எல்லோரையும் போல நிறைய பணம் சம்பாதித்தார். இக்காலமெங்கும் ஒரு மக்கள் தலைவன் அல்லது போராளிக்கான ஒளிவட்டம் ஏதும் அவர் தலைக்கு பின்னால் சுழலவில்லை.

இயல்பாய் போய்க்கொண்டிருந்த வாழ்க்கையில் அக்காலத்தில் உயிர்கொல்லி நோயான காசநோய் குறுக்கிட்டது. ஆம் 1925ம் ஆண்டு அவரை காசநோய் பீடித்தது. குணமாக்க முடியாத அந்நோய்க்கு ஆட்பட்ட பெத்யூன் கடைசி நாட்களைக் கழிப்பதற்காக டூருடியூ சானடோரியத்தில் சேர்க்கப்பட்டார். அப்போது தான் கண்டுபிடிக்கப்பட்டு வந்த ‘செயற்கை முறை நிமோதொரக்ஸ்’ என்ற சிகிச்சையை தாமே பயின்று சானடோரிய உதவியுடன் அதற்கு உட்பட்டார். மருத்துவ அதிசயமாக அச்சிகிச்சை மூலம் ஒரு நுரையீரலை செயலிழக்கச் செய்து அவர் உயிர் மீண்டார்.

இரண்டாவது பிறவியெடுத்த பெத்யூன் காசநோய் குறித்து மேலும் மேலும் பயின்றார். காலப்போக்கில் உலகப் புகழ்பெற்ற காசநோய் அறுவை சிகிச்சை நிபுணரானார். அவரிடம் சிகிச்சை பெற்றவர்களின் பெரும்பாலோர் உயிர் பிழைத்தனர். எனினும் அவர் மலைக்கத்தக்க வகையில் காசநோய் பெருகிக் கொண்டே போனது. இது ஏன் என்ற கேள்வி யை நோக்கி அவரது தேடல் திரும்பியது.

காசநோய்க்கான சிகிச்சை மட்டுமே அதனை ஒழித்துவிடாது என்பதை பெத்யூ னின் தேடல் அவருக்கு உணர்த்தியது. இதனை உணர்ந்த அந்த நொடிப் பொழுது தான் பெத்யூனுக்குள் சமூகப் பார்வை கருக் கொண்ட பொழுதும் ஆகும். அக்காலத்தில் இரண்டாம் உலகப்போர் தொடங்கவிருந்த நிலையிருந்தது. ஸ்பெயினி லும் சீனாவிலும் மக்கள் படைகளுக்கு ஆதரவாக மருத்துவ சேவையை வழங்கும் பணியில் ஈடுபட்டார். ஓய்வொழிவறியாது நீண்ட பயணங்களையும் சேவையையும் மேற்கொண்டார். அதுவே பின்னர் பெத்யூ னின் உயிரை காவு கொண்டது.

அவரது சீன வாழ்வில் ஏராளமான சாமான்யர்களுக்கு மருத்துவ பயிற்சியளித்து மருத்துவர்களாகவும் அறுவை சிகிச்சையாளர் களாகவும் அவர்கள் செயல்பட வழிவகுத்தார். இவைதான் பின்னர் வெறுங்கால் மருத்துவர் களை சீன அரசு அங்கீகரிக்க காரணமாய் அமைந்தது.

எளிய, ஜாலியான சுகபோக வாழ்வை விரும்புபவராக வாழ்வை துவங்கிய பெத்யூன் தொழில்ரீதியாக நோயற்ற சமுதாயத்தை உருவாக்க நேர்மையாக முயன்றபோது தன்னையறியாமலே அவர் பொதுவுடைமை வாதியாக மாறியிருந்தார். இதுவே அவர்
வாழ்க்கை செய்தி. இவரைப் பற்றிய முழுமை யான விவரங்கள் சென்னை சவுத் விஷன் பதிப்பகம் தமிழில் வெளியிட்டுள்ள ‘டாக்டர்.நார்மன் பெத்யூன் கதை’ என்ற நூலிலுள்ளது.

(IV)

DR. பினாயக் சென் ஒரு வங்காளி. வேலூர் கிருத்துவ மருத்துவக் கல்லூரியில் குழந்தை மருத்துவம் பயின்றவர். இவரது துணைவியார் இலினா புதுதில்லியின் புகழ் பெற்ற ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக பேராசிரியர். இருவரும் 1980களின் தொடக்கத் தில் அப்போதைய மத்திய பிரதேச மலைப் பகுதிகளில் உள்ள எளிய கிராம மக்களுக்கு மருத்துவ சேவையை வழங்கத் துவங்கினார்.

அம்மக்களிடையே T.B. க்கு சிகிச்சை யளிக்கும் மருத்துவர் எனவும் மக்கள் சுகதுக்கங்களில் இரண்டற இணைந்திருக்கும் மக்கள் மருத்துவர் எனவும் புகழ்பெற்றவர். அந்த பின்தங்கிய பகுதியில் கிராமங்கள் தோறும் மருத்துவ மையங்களை உருவாக்கி னார். அம்மக்களிடமிருந்தே சிலரை தேர்ந்தெ டுத்து அவர்களுக்கு மருத்துவ பயிற்சியளித்து மேற்குறிப்பிட்ட கிராம மையங்களை இயக்கி னார். இதனை மிட்டானிக் திட்டம் என்கின்றனர். இதுவே பின்னர் மைய அரசால் ASHA என ஏற்கப்பட்டது.

இப்படி மத்திய-மாநில அரசுகளுக்கே வழிகாட்டியாகத் திகழ்ந்த சென் மக்களை நோயிலிருந்து மீட்பதோடு நோயற்ற நலவாழ்வுக்கு எத்தகைய வழிமுறையில் வாழவேண் டும் என மக்களுக்கு விழிப்புணர்வூட்டினார்.

‘அறிவூட்டப்பட்ட மக்கள் ஆபத்தான வர்கள், அதை (அறிவூட்டுவதை) செய்பவர் தீவிரவாதி’ என்ற இராஜாங்க உணர்வுப்படி சிறையில் உள்ள 80 வயதான மாவோயிய தலைவருடன் கடித தொடர்பு வைத்திருந்தார் என்ற குற்றச் சாட்டின்பேரில் பினாயக் சென் சிறைபடுத்தப்பட்டு ஓராண்டுக்கும் மேலாகிறது.

இவர் செய்த குற்றம் தான் என்ன? சிறுநீரகம் திருடினாரா? கள்ள மருந்து தயாரித்தாரா? கலப்படம் செய்தாரா? போதை ஊசி போட்டாரா?

(V)

மருத்துவத்துறை மக்களால் வெறுக்கப் படும் அளவுக்கு கொள்ளைக் கூடாரமாக மாறிவரும் காலகட்டத்தில் மக்கள் நலனையும் மருத்துவ நேர்மையையும் உயர்த்தி பிடிக்க முயலும் யாரொருவரும், அரசுகளால் எதிராகவும் பொதுவுடைமை இயக்கங் களாலும் மக்களாலும் ஆதரவாகவும் பார்க்கப்படுவதில் வியப்பென்ன?


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Unable to connect to database! Please try again later.