பொழுதெல்லாம் எங்கள் செல்வம் கொள்ளை கொண்டு போகவோ?
தமிழகஅரசின் அரசு ஊழியருக்கான புதிய மருத்துவக் காப்பீடு - ஒரு பார்வை
ஆலோசனைக் குழு
Dr.ப.லெனின்
Rtn.,Dr.G.ராஜமோகன்
Dr.K.தனபாலன்
Dr.K.A.சௌடையா
Dr.A.கிருபானந்தம்
Dr.A.S.அசோக்குமார்
R.மணிமாறன்
நிர்வாக ஆசிரியர்
Dr.V.ஆவுடேஸ்வரி
ஆசிரியர்
Dr.S.வெங்கடாசலம்
தொடர்பு முகவரி:
மாற்று மருத்துவம்,
29/9-A, பழைய டிரங்க் ரோடு,
(TELC சர்ச் எதிர்ப்புறம்)
சாத்தூர் - 626 203
தொலைபேசி: 04562 - 263168
கைபேசி: 94431-45700, 93452-09911
|
இந்தியாவிலேயே முதன்முறையாக அரசு ஊழியர்களுக்கான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் தமிழகத்தில் 28-4-2008 அரசாணை மூலம் அறிவிக்கப்பட்டு 11-06-08ல் தொடங்கப்பட்டுவிட்டது. அதற்காக ‘ஸ்டார் ஹெல்த் அண்டு அல்லைடு இன்சூரன்ஸ் கம்பெனி’ என்ற பன்னாட்டு காப்பீட்டு நிறுவனம் தெரிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிறுவனமும், மகாராஷ்டிரா மாநில அரசால் கறுப்புப்பட்டியலில் இடப்பட்ட ஐசிஐசிஐ லம்பார்டு நிறுவனமும் கூட்டமைப்பாக குறைந்த பிரிமியத் தொகையாக ரூ.675- கோரியதைத் தொடர்ந்து, அழைத்துப் பேசி மேலும் பிரிமியத் தொகையை ரூ.495 ஆகக் குறைத்துள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாலிசிதாரர் ரூ.300ம் அரசு ரூ.195ம் செலுத்தக் கூடிய நிலையில் 13,50,000 ஊழியர்களிடம் வசூலிக்கப்பட கூடிய தொகை ரூ. 40 கோடியே 50 லட்சம், அரசு செலுத்தவுள்ள சேவைக்கட்டணம் (12.5%) உள்ளிட்ட பிரிமியத் தொகை ரூ.34,67,81,250 மொத்தம் ஆண்டுக்கு ரூ. 75,17,81,250 செலுத்தப்படவுள்ளது.
பிரிமியம் குறைவு என்பதால் அரசுக்கு ரூ. 121.5 கோடி காப்பீடு குறையும் என்றும் இத்திட்டத்தின் செயல்பாடுகளில் உள்ள குறைகளை நீக்க மாவட்ட & மாநில அளவில் அதிகாரிகளும், காப்பீட்டு நிறுவன பிரதிநிதிகளும் கொண்ட குழுக்கள் உதவும் என்றும், அரசு அலுவலர்களைப் பொறுத்தவரை இது முழுக்கமுழுக்க அரசின் திட்டமே என்றும் அரசு விளக்கங்கள் வெளியிட்டு வருகிறது.
இத்திட்டம் அறிவிக்கப்பட்ட உடனேயே பிரதான எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதா, சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், தேமுதிக தலைவர் விஜய்காந்த், பாமக, இடதுசாரிக்கட்சிகள் மற்றும் அரசு ஊழியர் சங்கத்தினர் கடுமையான ஆட்சேபம் தெரிவித்தனர். மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயற்குழு இத்திட்டத்தை கைவிடுமாறு தீர்மானம் நிறைவேற்றி அரசை வலியுறுத்தியுள்ளது. இத்திட்டம் குறித்து அரசியல் கட்சிகள், அரசு ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ள வினாக்களை, சந்தேகங்களை, கோரிக்கைகளை அரசு புறக்கணிக்கக் கூடாது.
அ) பன்னாட்டு தனியார் நிறுவனங்களின் சேவைத் தரத்திற்கான கட்டமைப்பு பற்றி காப்பீட்டு பாலிசி தாரர்களுக்கு (அரசு ஊழியர்களுக்கு) திருப்தியளிக்கும் சான்றாதாரம் ஏதுமில்லை.
ஆ) ‘ஸ்டார் ஹெல்த் அண்டு அலைடு இன்சூரன்ஸ் கம்பெனி’ தனது மூலதனத்தைச் செலவிட்டு மருத்துவக் காப்பீடு வழங்குவதற்காக வரவில்லை. மிகப்பெரிய கொள்ளை ஆதாயம் அடையவே வருகிறது என்பது ஊரறிந்த உண்மை. ரூ.75,17,81,250 என்ற பெருந்தொகையை அன்னிய நாட்டு தனியார் நிறுவனத்திற்குத் தாரை வார்ப்பது சரியல்ல; இந்த கூட்டுக் கொள்ளையில் இங்குள்ள கார்ப்பரேட் மருத்துவமனைகளும் இணைந்து ஆதாயம் பெறப் போகின்றன. இதனை அரசே சிறப்பாக செயல்படுத்த வேண்டும்.
இ) இது அரசின் திட்டம் என்பதும் ஏற்கத்தக்கதல்ல. தனியார் காப்பீட்டு நிறுவனத்திற்கு பாலிசிதாரர்களை (கட்டாயப்படுத்திச்) சேர்ப்பதிலும், பிரிமியம் வசூலித்துத் தருவதிலும் மட்டுமே இது அரசு திட்டம். அதன்பின் காப்பீடு வழங்குவது தனியார் நிறுவன வேலை. தனியார் நிறுவனத்துக்கு பிரிமியம் வசூலிக்கும் ஏஜெண்டாக அரசு அதிகாரிகளை ஈடுபடுத்துவது நியாயமா?
ஈ) குறைகள் களையும் கமிட்டியில் பாலிசிதாரர் (ஊழியர்கள்) தரப்புப் பிரதிநிதிகளுக்கு இடமில்லாதபோது இக்குழுக்கள் உரிய காலத்தில் குறைகளை உணர்ந்து உரியமுறையில் எப்படி உதவிட முடியும்?
உ) ஓர் அரசு தனது ஊழியர்களின் நலத்தைக் காக்க தனது அரசு மருத்துவமனைகளைவிட தனியார் மருத்துவமனைகளே உகந்தது என்று கருதினால் அரசு மருத்துவமனைகளின் சிகிச்சை, தரம், இதர வசதிகள் குறித்து என்ன கருத்து கொண்டுள்ளது? மக்களும் தமது நலம் காக்க தரமான சிகிச்சை பெற தனியாரை நாடவேண்டும் என்பதுதான் அரசின் வழிகாட்டலா?
ஊ) அரசு ஊழியர்களுக்கென அரசே செயல்படுத்திவரும் நல்வாழ்வு நிதித் திட்டத்தை முடிவுக்கு கொண்டுவந்து விட்டு ஊழியர்களின் மருத்துவ சிகிச்சைக்கு இதைத்தவிர வேறுவழியில்லை என்று நல்லதொரு திட்டத்தைத் தனியாருக்கு தாரை வார்க்கும் மோசமான முன்னுதாரணத்தை தமிழக அரசு உருவாக்கக் கூடாது. இந்தியாவிலே மிகச் சிறந்த முதல் முயற்சி என்று இதனை அரசு பெருமைப்படுவது அபத்தமானது.
எ) அரசு ஊழியர்களின் நல்வாழ்வுத் திட்டத்தை அரசு தன்னிச்சையாக முடிவு செய்யக்கூடாது. அனைத்து ஊழியர்களின் விருப்புரிமை அறியப்படவேண்டும்.அதன் அடிப்படையில் இத்திட்டம் உருப்பெற்று செயல்படவேண்டும்.
“இத்திட்டத்தில் அரசு ஊழியர்கள் கட்டும் பிரிமியம் மூலம் ஆண்டுக்கு ரூ.75 கோடி ஸ்டார் ஹெல்த் கம்பெனிக்கு கிடைக்கப்போகிறது. ஆண்டுக்கு 3250 பேர் தங்கள் சிகிச்சைக்கு தலா ரூ.2 லட்சம் பெற்றால்தான் இத்திட்டத்தால் பலன் கிடைக்கும். நிச்சயமாக, கட்டுகிற பணத்தை எல்லோரும் பயன்படுத்தும் நிலைவராது. அப்படியானால் அந்தப் பணம் ஹெல்த் கம்பெனிக்குத் தானே? அரசே நடத்தினால் ஒவ்வோர் ஆண்டும் கிடைக்கும் பலகோடி ரூபாய்களை மக்கள் நலத் திட்டங்களுக்குப் பயன்படுத்தலாம் அல்லவா?”
தமிழ்நாட்டில் கால்நடைகளுக்கான காப்பீட்டுத் திட்டத்தைப் பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்கள் மூலம் செயல்படுத்திவரும் நிலையில், அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தைத் தனியார் மூலம் செயல்படுத்த முற்படும் அரசின் நடவடிக்கையால் ஆடு மாடுகளைவிடக் கேவலமாக இவர்களை அரசு கருதுகிறதோ என்ற ஐயப்பாடு இயல்பாகவே எழுகிறது” என்று கூறும் அரசு ஊழியர் சங்க மாநில பொதுச்செயலர் ஆர்.முத்துசுந்தரம் அவர்களின் ஆதங்கம் உண்மைதானே!
மேலும் மருத்துவக் காப்பீட்டு வசதிகள் மூலம் ஆங்கில மருத்துவம் மட்டுமே அளிப்பதன் மூலம் இந்திய மருத்துவங்களும், ஹோமியோபதியும் புறக்கணிக்கப்படுகிறது. ஆங்கில மருத்துவத்தால் தீர்வு காணமுடியாத எண்ணற்ற நோய்களுக்கு ஆளானவர்களுக்கு காப்பீட்டுத் திட்ட அலோபதி சிகிச்சை வசதிகளால் எந்தப் பயனுமில்லை. சிறுநீரக நோய்கள், புற்றுநோய், அல்சர் உள்ளிட்ட குடல்நோய்கள், கர்ப்பப்பை தொடர்பான நோய்களுக்கு (காப்பீட்டு திட்டத்திலுள்ள 52 நோய்களில் முக்கியமான இந்நோய்களுக்கு) ஆங்கில மருத்துவம் தீர்வளிக்காது என்பதோடு நோய்நிலைகளை உள்ளமுக்கி வளர்ப்பதும், அறுவை சிகிச்சை தவிர வேறு வழியில்லை என்று இறுதி நிலைக்கு இட்டுச் செல்வதும்தான் உண்மை. இத்தகைய மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்களை அரசே நடத்துவதோடு உரிய படுக்கை வசதிகளும், சேவை வசதிகளும் உள்ள மாற்று மருத்துவமனைகளை அரசே நிதி ஒதுக்கீடு செய்து உருவாக்கி இணைத்துக் கொள்ளவேண்டும்.
- ஆசிரியர்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|