பொங்கல் திருநாளில் மூலிகைகளின் பங்கு
எஸ்.ஏ.பெருமாள்
சித்திரையில் உழுது, ஆடியில் விதைத்து, ஆவணியில் களையெடுத்து, ஐப்பசியில் பயிரடித்து, தையில் அறுவடை தொடங்குகிறது. அறுவடை செய்யும் மகிழ்ச்சியில் சூரியனுக்குப் படையல் வைத்து பொங்கல் திருநாளை மக்கள் கொண்டாடி வருகின்றனர். ஏர் கலப்பை, பற்றியும், நிலத்தை உழுது சாகுபடி செய்ய வேண்டிய அவசியம் பற்றியும் வேதங்களும், உபநிஷத்துகளும் கூறுகின்றன. சங்க இலக்கியத்தில் பெரும்பாணாற்றுப் படை நூலில், ஏர் என்பது ஒரு பெண் யானையின் வாய் போன்றும், கலப்பை என்பது உடும்பின் முகம் போன்றும் உள்ளதாய் உவமை கூறப்பட்டுள்ளது.
ஏர் மங்கலம் என்னும் வழி பாட்டுப் பாடல் இருந்ததாய் சிலப்பதிகாரம் கூறுகிறது. நிலத்தை உழப் பயன்படும் ஆயுதமான ஏர் கலப்பையை மக்கள் வணங்கிக் கொண்டாடியுள்ளனர். இதற்கு ஏராளமான கல்வெட்டு ஆதாரங்களும் கிடைத்துள்ளன. சூரியப்பாதையின் சுழற்சி தட்சிணாயணம் (தெற்கு நோக்கி), உத்தராயணம் (வடக்கு) என்று ஆண்டுக்கு இரு வகையாய் பிரிக்கப்பட்டுள்ளது. ஆடி முதல் மார்கழி வரை ஆறு மாதங்கள் தட்சிணா யணம் என்றும் தை முதல் ஆனி முடிய ஆறு மாதங்கள் உத்தராயணம் என்றும் அழைக்கப்படுகிறது. பண்டைய வானியலார், தைத் திங்கள் முதல் நாளில் சூரியன் தனுர் ராசியை விட்டு மகர ராசியில் பிரவேசிப்பதாய் கூறியுள்ள னர். தேவலோகத்தில் ஆறு மாதம் இரவு என்றும், ஆறு மாதம் பகல் என்றும் கற்பனையுண்டு. ஆறுமாத இரவு முடிந்து, தை முதல் நாளில் பகல் துவங்குகிறது என்றும் கூறுவர்.
ஒன்பது மாதம் உழைத்ததற்குப் பரிசாக உழவருக்குத் தையில் அறுவடை கிடைத்துப் புதுவாழ்வு தொடங்குகிறது. இதைக் கொண்டாடு வதே பொங்கல் விழாவாகும். இதை நான்கு நாட்கள் - போகி, பொங்கல், மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் என்று கொண்டாடு கின்றனர். முதல் நாளில், ஓராண்டில் வீடு, தொழுவத்தில் சேர்ந்த குப்பைக் கூளங்களையும், பழைய பாய், துணி உள்ளிட்ட பொருட்களையும் தீயிட்டு அழிக்கின்றனர். வீட்டுக்கு வெள்ளை அடிப்பர். பழைய அழுக்குகளைப் ‘போக்கி’ புதுமை பெறுதலாகும். போக்கி என்பது பின்பு ‘போகி’யா கிற்று. இரண்டாம் நாள் - பொங்கலிட்டு சூரியனை வழிபடுவதாகும். மூன்றாம் நாள் உழவில் உழவனின் துணைவனாய் திகழும் மாட்டுக்கு வழிபாடு செய்வதாகும். மாட்டை மனிதன் வென்றடக்கியதை நினைவூட்டும் விதமாக சல்லிக்கட்டும் நடைபெறும். நான்காம் நாள் குடும்பத்தோடு சென்று உற்றார் உறவினர்கள், நண்பர்கள் காண்பதே காணும் பொங்கலாகும்.
உழவர்கள் தங்கள் வாழ்வில் உடல்நலம் பேணும் மூலிகைகளையும் கொண்டாடும் முறையில் காப்புக் கட்டுதலும் நடைபெறுகிறது. மஞ்சள், சிறுபீளை, தும்பை, ஆவாரை, வேம்பு, மாவிலை, பிரண்டை ஆகியவைகளை ஒரே கட்டாகக்கட்டி அதையே வீடுகளின் கூரையிலும், அறுவடைக்குத் தயாரான வயல்களிலும் காப்புக் கட்டுவர். இதை ‘கூரைப்பூ’ என்பர். மனிதர்களின் உடல்நலத்தைக் காப்பதில் காப்பு என்று மூலிகை களை அடையாளப்படுத்திக் காட்டும் வழக்கம் வந்தது.
மஞ்சள், வேப்பிலை அம்மை நோய்க்குப் பயன்படுத்தப்படுபவை. மஞ்சள், உணவில் விஷத் தை முறிக்கும். சிறுபீளை என்ற கண்ணுப்பீளை சிறு நீரகக் கோளாறுகள், சிறுநீரகக் கற்களுக்குச் சிறந்த மருந்தாகும். மேலும் சிறுபீளை இலைச் சாறுடன் மிளகு சேர்த்துத் தர விஷக்கடி தோல் வியாதிகள் தீரும். சிறுபீளை, துளசி, குப்பை மேனிக் கலவை யைத் தேய்த்துக் குளித்தால் அரிப்பு, சிரங்கு, சொறி நோய் தீரும். தும்பை இலை, தேள், பாம்புக் கடிக்கு சிறந்த மூலிகையாகும். ஒருத்தலைவலிக்கு மூக்கில் தும்பைச்சாறு பிழிந்தால் குணமாகும். ஆவாரை, உடல் வறட்சி, சர்க்கரை நோய்களுக்குச் சிறந்த மருந்து இதன் பூவைப் பொடியாகவோ, கசாயமாகவோ சாப்பிடப் பல நோய்கள் தீரும். மாந்தளிரும் மாதுளையும் ரத்தக்கடுப்பை நீக்கும் பெண்களுக்குப் பெரும்பாடு நீங்கும்.
பிரண்டை, எலும்புகளை வலுப்படுத்தும், பசியைத் தூண்டும், மூலிகைகளின் சிறப்பை எடுத்துக் காட்டி அவை காலங்காலமாய் காக்கப்பட வேண்டும் என்பதை எடுத்துக்காட்டவே காப்புக் கட்டும் நடைமுறை வந்துள்ளது.
நன்றி : தீக்கதிர் - 14-01-09
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|