இது கடுங்கோடைக் காலம்

தெருமுனையில் திடீரென கூச்சல் அதிகமாகி சந்தையில் முடிகிறது

காரணம் இது கடுங்கோடைக் காலம்

டாஸ்மாக் கடையிலிருந்து ஒருவன் அடிபட்டு

தலையிலும் முகத்திலும் ரத்தம் வழிந்தபடி ஓடிவருகிறான்

காரணம் இது கடுங்கோடைக் காலம்

தான் பிடித்த சிகரெட் சிவப்பை ஒருவன்

தன் மனைவியின் யோனிக்குள் திணிக்கிறான் காரணம்

இது கடுங்கோடைக் காலம்

முன்னொரு சமயம் தான் சுவைத்த காதலனின் குறியை

காதலி இப்பொழுது கடித்துத் துப்புகிறாள்

காரணம் இது கடுங்கோடைக் காலம்

எட்டு வயது சிறுமியை வன்புணர்ச்சி செய்ததாக ஒருவன் கைது செய்யப்படுகிறான்

as_0காரணம் இது கடுங்கோடைக் காலம்

நீண்ட கடுங்கோடைக்காலத்தில் எழுதிய இந்தக் கவிதையின் காலமும்

இதை நீங்கள் வாசிக்கும் காலமும் ஒன்றல்ல

இரண்டுக்கும் இடையில் பல கடுங்கோடைக் காலங்கள்

கடந்து போயிருக்கின்றன.

பாலைப்புயல், போதை, கடவுள், கஞ்சா மற்றும் அவன்

அவன் முன் பாலைப்புயல் எழும்பி அடங்குகிறது

அது பார் பையன் வைத்துவிட்டுப் போன விஸ்கியாக இருக்கிறது

விஸ்கியை அவன் உட்கொள்ளத் தொடங்க

அடங்கிய புயல் எழும்பி அவன் உடலெங்கும் பரவுகிறது

அவன் சந்தித்தப் பெண்கள் கணப்பொழுதில்

அவன் முன் சுழன்று மறைகிறார்கள்

உற்சாகத்துடன் அவன் தன் முதல் பெக்கைக் காலி செய்கிறான்

அவன் முன்னுள்ள ஆம்லெட்டை

அருகிலிருக்கும் அவன் பிட்டு உண்ணத் தொடங்க

அருகிலிருக்கும் அவனுக்கு ஆம்லெட்டை ஆர்டர் செய்கிறான்

எங்கிருந்தோ வந்தவன் அவனிடம் வந்து பீடி கேட்க

வந்த அவனுக்கு சிகரெட் கொடுத்து அனுப்புகிறான்

பக்கத்தில் மூத்திரம் பெய்யப்போன இடத்தில்

பெருச்சாளியொன்று நாகலிங்க மரத்தடியில்

அகழ்ந்து கொண்டிருப்பதை ஆர்வத்துடன் கவனிக்கிறான்

திரும்பித் தன் இருக்கைக்கு வரும் வழியில்

வாந்தி எடுத்துக்கொண்டிருக்கும் அவனை சிரித்துக்கொண்டே கடக்கிறான்

போதையைத் தேடிப்போகும் ஒவ்வொரு முறையும்

மூத்திர நெடியுடன் கூடிய இந்தப் பார் சூழலையும் சேர்த்துக்கொள்கிறான்

பாரை விட்டு வெளியே வரும்போது

லாரியின் ஹாரன் ஒலி அவன் போதையை நடுங்கச் செய்கிறது

அதன் திசைநோக்கி கல்லெறிந்து சபித்து விட்டு தன் வழி நடக்கிறான்

செல்லும் வழியில் கருப்பு அங்கி அணிந்தவன்

தனிமையில் புகைப்பிடித்துக் கொண்டிருக்கிறான்

கறுப்பு அங்கி மனிதன் கடவுளாகவும் இருக்கலாம் என்பதோடு

தன்னைப் போலவே எல்லாக் கடவுள்களும்

தனிமையில்தான் இருக்கிறார்கள் என்பதையும் எண்ணிக் கொள்கிறான்

அருகே செல்ல கறுப்பு அங்கி அணிந்த அவன்

மௌனமாக புகையை நீட்டுகிறான்

அது கஞ்சா புகை

கறுப்பு அங்கி மனிதன் கடவுள்தானென்பதை

உறுதிப்படுத்திக்கொண்டே கஞ்சாவை இழுக்கத் தொடங்குகிறான்

அவன் முன் தெருவும் இரவும் கடவுளும் அவனும் தள்ளாடுகிறார்கள்

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.