
வரையறைகளுக்கேற்ப
இயல்பாகவே அப்பறவை
நம் நாட்டை நோக்கி வருகிறது
உயரங்களில் இருந்து
பார்க்கையில்
நிலப்பரப்புகளின் தன்மையில்
சாதாரணமற்ற தோற்றம்
கீழ்நோக்கி நெருங்க
கண்களுக்குள் வலியுறச் செருகியது காட்சிகள்
வயல் வெளிகளை
விழுங்கி நிற்கும்
கட்டிடங்கள்
காடுகளின் பசுமைமிகு
ஆடைகளைக் கிழிக்கின்ற
சுற்றுலாத் தளங்கள்
புல்வெளிகளின்
அழகுத் தோற்றம் மறைத்து
மக்காத பொருட்களின் ஆக்கிரமிப்பு
நீரோட்டம் தவிர்த்து
மரணித்த நதிகளின்
சலனமற்ற சடலத் தோற்றம்
ஆங்காங்கே மிச்சமாகி
நிற்கும் உயிரிழந்த
மரங்களின் எலும்புக்கூடுகள்
அவற்றில் ஒன்றின்
இறுதி இலையும் நிலம் சேர
அப்பறவியின் ஒற்றை விழிநீர்த்துளி
அதன்மேல் விழுந்து சிதறியது ....
மனம் கதற
திரும்புகையில்
அப்பறவை ஒலியதிரக் கூவியது
மிச்சம் இருக்கும் பசுமையையும்
அழித்துவிடாதீர்
இந்நாட்டின் சொந்தப் பறவைகள்
இங்கு இருக்கின்றன ஏராளம்
அவைகளுக்கு கண்டம் தாண்டத் தெரியாது....!
- கலாசுரன் (