நாடகத்தில் நடிப்பதற்கு பெண்கள் வரத் தயங்கிய காலத்தில் எம்.ஆர்.இராதாவின் ‘இரத்தக் கண்ணீர்’, ‘இலட்சுமி காந்தன்’ நாடகங்களில் துணிச்சலாக நடிக்க வந்தார் பிரேமாவதி என்ற 17 வயது பெண். இராதாவுக்கும் பிரேமாவதிக்கும் இடையே காதல் உருவாகி, திருமணம் செய்து கொண்டார்கள். பிறந்த குழந்தைக்கு ‘தமிழரசன்’ என்று பெயர் சூட்டினார்கள். அம்மை நோய் பாதிப்புக்குள்ளாகி, முதலில் ‘தமிழரசன்’ இறக்கிறார்; அடுத்த 3 நாள்களில் அதே நோய்க்கு பிரேமாவும் தனது 22 வயதில் இறந்து விட்டார். தனது அன்பு மனைவி, மகனுக்கு கோவையிலிருந்து பாலக்காடு போகும் வழியில் ஆற்றுப் பாலத்தைக் கடந்து நிற்கும் இடு காட்டில் அவர்கள் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் நாற்பதடி உயரத்தில் அவர்கள் நினைவாக கோபுரம் போன்ற நினைவுச் சின்னத்தை எழுப்பினார் எம்.ஆர். இராதா. அவ்வப்போது இந்த நினைவிடத்துக்கு வந்து நடிகவேள் கண் கலங்குவார். அந்த நினைவிடத்தின் கீழே பொறிக்கப்பட்ட வாசகங்களும் மிகவும் முக்கியமானது.

“பெரியார் ஈ.வெ.ரா. அவர்களின் நாட்டு விடுதலைப் போருக்கு நாடகம் மூலம் தொண்டு செய்து கொண்டிருந்த நடிகவேள் எம்.ஆர்.ராதா அவர்களின் துணைவியார் மறைந்த திருமதி பிரேமாவதிக்கும், மகன் தமிழரசனுக்கும் திராவிடத் தோழர்கள் உண்டாக்கிய நினைவுக் குறி - 1951”

- என்ற வாசகங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. சிதைந்துபோன நிலையில் அந்த வாசகங்கள் இப்போதும் காணப்படுகிறது.

தகவல் : ‘எம்.ஆர். ராதா காலத்தின் கலைஞன்’ நூல்

செப்டம்பர் 17 நடிகவேள் நினைவு நாள்

Pin It