விநாயகனை வழிபடுவது சைவர்களுக்கு அவமானம்; அது பார்ப்பான் கட்டிய கற்பனைக் கதை என்கிறார், மறைமலை அடிகளார்.

அன்பர்களே! இக்கதை எவ்வளவு அருவறுக்கற்பாலவான மாறுபாடுகள் நிறைந்ததாய் இருக்கின்றது. எல்லாம் வல்ல இறைவியான உமைப்பிராட்டியார் வினை வயத்தால் பிறக்கும் நம்போல் ஊனுடம்பு உடையரல்லர். அவர்தம் திருமேனி சொல் லொணா அருள் ஒளி வீசித் துலங்கு வதென்று ‘தேனோபநிடதம்’ நன்கெடுத்து மொழியா நிற்க, அவ்வறிவு நூலுக்கும் கடவுளிலக்கணத்துக்கும் முற்றும் மாறாக அம்மையார் திருமேனியில் அழுக்கு நிரம்பி இருந்ததென்றும் அவ் வழுக்கினைத் திரட்டி எடுத்து பிள்ளையாரைச் சமைத்தனள் என்றும் கூறும் அழுக்குப் புராணம் சிவமகா புராணமெனப் பெயர் பெறுதற்குத் தகுதி யுடையதாமோ? ஆராய்ந்து கூறுமின்கள்! ஊனுடம்பு படைத்த மக்களும் அழகும் நாகரிகமும் தூய்மையும் வாய்ந்தார் சிலரின் உடம்புகள் அழுக்கில்லாதனவாய் மினு மினுவென்று மிளிரா நிற்கத் தூய அருட் பேரொளி வடிவாய் விளங்கும் அம்மையின் திருமேனி அழுக்குடையதாயிருக்குமோ சொன் மின்கள்!

மேலும், “தம் மனைவியாரைத் தேடிக் கொண்டு வந்த சிவபிரான் தமக்குப் பிள்ளையென்று அறியாமல் அதன் தலையை வெட்டிவிட்டனரென்பது” கடவுள் இலக்கணத்திற்கு எவ்வளவு முரண்பட்டதாய் இருக்கின்றது. எல்லா உயிர்க்கும் உயிராய் அறிவுக்கு மறிவாய் எல்லா உலகங்களிலும் எல்லா காலங் களிலும் நிகழும் நிகழ்ச்சிகளை எல்லாம் ஒருங்கே உணரும் பெருமான் தம் பிள்ளையைத் தாமே அறியாமல் வெட்டினாரென்றால் அஃது அறிவுடை யோரால் ஒப்பத் தகுந்ததாமோ? இன்னும் பாருங்கள்! வெட்டுண்ட பிள்ளையைத் தலையும் உடம்பும் பொருத்தி உயிரோடு எழுப்பி விடலாகாதா? வெட்டுண்ட தலையை விடுத்து வேறொரு யானைத் தலைய வருவித்துப் பொருத்தினனென்பது எவ்வளவு தகாத செயலாய் இருக்கின்றது. இத்துணைத் தகாததொன்றை இறைவன் செய்தனனென்பது கடவுளிலக்கணத்துக்கு அடுக்குமா? உண்மையாய் நோக்குங்கால் சிவபிரானையும் அருள்வடிவான பிராட்டியையும், ஓங்கார ஒலி வடிவில் விளங்கும் இறைவனையும் இழித்துப் பேச விரும்பிய எவனோ ஓர் ஆரியப் பார்ப்பனன் இக்கதையைச் சிவமகா புராணமென்னும் பெயரால் கட்டி விட்டான் என்பது வெள்ளிடைமலை போல் விளங்கா நிற்கும்.

இப்பொல்லாத பார்ப்பன சூழ்ச்சியை ஆராய்ந்து பார்க்கும் அறிவு மதுகை இல்லாத குருட்டுச் சைவர்கள் இவ்வழுக்குப் புராணத்தைச் சிவமகா புராணமெனக் கொண்டாடிச் சைவ சமயத்துக்குக் கேடு சூழ்வது பெரிதும் வருந்தற்பாலதாயிருக்கின்றது.

Pin It