1967 மே 24 விடயபுரத்தில் நடந்த பயிற்சி வகுப்பில் கடவுள் மறுப்பு வாசகங்களை பெரியார் உருவாக்கினார். அதில் அந்த வாசகங்களை விளக்கி பெரியார் எழுதிய கட்டுரையைக் கடந்த இதழில் வெளியிட்டு இருந்தோம். இதுகுறித்து மறைந்த பேராசிரியர் இராமநாதன் அவர்கள் எழுதிய கட்டுரையை இங்கு வெளியிடுகிறோம்.

கடவுளை வணங்குகிறவர்களைக் காட்டுமிராண்டிகள் என கடுமையான சொற்களைப் பயன்படுத்தியவர் பெரியார் அதற்கான காரணம் என்ன தெரியுமா....

காட்டுமிராண்டி மக்களுக்கும், மற்ற மக்களுக்கும் என்ன வேறுபாடு? எல்லோரும் மக்கள்தான். பொது இயல்பில் வேறுபாடில்லை.

நடைமுறையில் வேறுபாடு உண்டு. காட்டுமிராண்டி மக்கள் வாழ்வில் அறிவொடுபட்ட செயல்முறைகள் இல்லை. மானம் இல்லாதவர். அறிவும் மானமும் இல்லாமல் விலங்கொடு விலங்காக வாழ்பவர்.

மனிதனுக்கு மற்ற உயிரினங்களைவிடப் பகுத்தறிவு இருக்கின்றது. அந்த அறிவைக் கொண்டே மனிதன் தன்னுடைய வாழ்க்கையில் பல மாற்றங்களை ஏற்படுத்திக்கொண்டு உலகில் முன்னேறியிருக்கின்றான். ஆயினும் அவன் தன்னுடைய பகுத்தறிவைக் கொண்டு முன்னேற முடியாமல் கடவுள் கருத்தும், இதனை ஒட்டி எழுந்துள்ள கற்பனைகளும், தடை செய்துவிட்டன. மனிதன் எவ்வளவோ முன்னேறியிருந்தாலும் மனித இனத்தில் குறிப்பிடத் தகுந்த அளவுள்ள மக்கள் இன்னும் மக்களுக்கு இன்றியமையாது வேண்டிய அடிப்படைத் தேவைகளை நிறைவுசெய்து கொள்ள முடியாதவர்களாகவே இருக்கின்றார்கள். எண்ணற்ற உயிரினங்களைத் தன்பால் கொண்ட உலகத்தில் பசியாலும், பட்டினியாலும் சாவது மக்கள் உயிர் மட்டுமே என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டியவராக இருக்கின்றோம். அறிவைப் பயன்படுத்தவிடாமல் கடவுள் கொள்கையை நம்பிக்கையை வளர்த்துவிட்டார்கள். இதனால் சிந்திக்கும் திறனை மனிதன் இயல்பில் இழந்தவன் ஆகின்றான். அறிவிருந்தும் காட்டுமிராண்டியாக வாழ்கின்றான்.

இதற்குப் பெரியார் சொல்லும் ஓர் எடுத்துக்காட்டை இங்குக் காட்டி விளக்குகின்றேன்.

ஓர் ஊரில் ஓர் ஆசிரியர் இருந்தார். அவர் ஒரு திண்ணைப் பள்ளிக்கூடம் வைத்து மாணவர்கட்கு வேண்டிய படிப்பைச் சொல்லி கொடுத்துக்கொண்டிருந்தார்.

அந்த ஆசிரியருக்குத் துணி தைக்க ஓர் ஊசி வேண்டியிருந்தது. அவர் ஊசி ஒன்றை வாங்கி வரவேண்டும் என்று பொதுவாகச் சொன்னார். ஒரு மாணவன் எழுந்து நான் போய் வாங்கி வருகின்றேன் என்று கூறினான். அவனுடன் வேறு சிலரும் போய் வருவதாகக் கேட்டுக் கொண்டனர். எல்லோரும் போய் வாங்கிக் கொண்டு வந்து சேருங்கள் என்றார். எல்லோரும் போய் ஊசியை விலைக்கு வாங்கினர். அதனை ஒரு பையன் வாங்கிக் கையில் வைத்துக் கொண்டான். மற்ற மாணவர்கட்கு அவன்மேல் கோபம் வந்தது. நீ மட்டும் ஊசியைக் கொண்டுபோய்க் கொடுப்பதா? எல்லோருக்கும் அதில் பங்கு வேண்டாமா என்று கேட்டு வம்பு செய்தார்கள்.

பக்கத்தில் ஒரு பனை மரத்துண்டு கிடந்தது. அந்த பனைமரத் துண்டில் ஊசியை குத்திவைத்து எல்லோரும் மிக்க சங்கடப்பட்டுக் கொண்டு போய் இறக்கினார்கள். ஆசிரியர் எல்லோரும் ஏன் இப்படித் தூக்கிக் கொண்டு வந்து சங்கடப்பட்டீர்கள்? என்று கேட்க, எல்லோரும் ஊசி வாங்கிக்கொண்டு வந்ததில் பங்கிருக்க வேண்டும் என்பதற்காக இவ்வாறு செய்தோம் என்றார்கள்.

இப்படிச் சொல்லிக்கொண்டே பனை மரத்துண்டில் அழுத்தி வைத்த ஊசி எங்கே என்று தேடினர். ஊசியைக் காணோம்.'

அந்த ஆசிரியர் சொன்னார். அட! மடப்பசங்களா! அந்த ஊசியை அந்த மரத்தில் வைத்துக் கட்டித் தூக்கிக்கொண்டு வருவதுதானே? ஏன் இப்படிச் செய்தீர்கள் என்று சினந்து கொண்டாராம்.

இந்தக் கதையைக் கேட்டவுடன் உங்கட்கு மாணவருக்கும் ஆசிரியருக்கும் இருந்த அறியாமையை நினைத்து சிரிப்பு வருகின்றது. நாட்டில் நடைமுறையில் கடவுள் பெயரால் இதனைப் போன்று நடக்கும் மடத்தனத்தை யாவரும் கண்டு சிரிக்கவில்லை. சிரிக்காததோடு இந்த மடத்தனத்தை இப்போதும் தொடர்ந்து செய்துகொண்டே இருக்கின்றார்கள். அது என்ன?

ஊரிலுள்ள பெரிய மரங்களை வெட்டி நூற்றுக்கணக்கான தச்சர்களை வைத்துப் பெரிய தேர் செய்து ஒன்றரை அடி அல்லது இரண்டடி உள்ள அய்ம்பொன்னால் செய்த சாமிச் சிலையை வைத்து ஆயிரக்கணக்கான மக்கள் கூடி பெரிய வடம் பிடித்து அந்தத் தேரை இழுக்கின்றார்களே! இது எவ்வளவு பெரிய மடத்தனம்?

அந்த ஒன்றரை அல்லது இரண்டடிச் சாமியை ஓர் ஆள் தோளில் தூக்கி வைத்துக்கொண்டு உலாவரலாம். அது ஒன்றும் சங்கடமன்று. முடியாததும் அன்று. அப்படியிருக்கத் தேரில் வைத்து இழுப்பதன் கருத்து என்ன? சாமி சிலையை ஒருவன் தூக்கிக் கொண்டு ஊர் சுற்றி வந்தால், அவ்வாறு தூக்கிக்கொண்டு ஊரார் சுற்றியதால் கிடைக்கும் நல்ல பயன்கள் அந்த ஒரு மனிதனுக்கே போய்விடும். சாமியைத் தூக்கிக்கொண்டு ஊர் சுற்றும் புண்ணியம் ஆயிரக்கணக்கான மக்களுக்குக் கிடைக்கவேண்டுமானால் இதுபோலப் பெரிய தேர் செய்து இழுத்தால் எல்லாருக்கும் கிடைக்கும். இதற்காகவே தமிழகக் கோயில்தோறும் தேரோடும் திருவிழா நடக்கின்றது.

ஊசியைக் கையில் வாங்கிக்கொண்டு வராமல் எல்லோருக்கும் பங்கு வேண்டும் என்று பனை மரத்துண்டில் செருகித் தூக்கிக் கொண்டு வந்த முட்டாள் மாணவர்கட்கும். தேரில் சாமியை வைத்து இழுக்கும் ஆயிரக்கணக்கான பக்தர்கட்கும் என்ன வேறுபாடு? சிந்தித்துப் பாருங்கள்.

இப்படியுள்ள மக்களை அல்லது பக்தர் கூட்டத்தைக் காட்டு மிராண்டி மக்கள் என்று சொல் லாமல் வேறு எப்படிச் சொல்லுவது என்பதை நீங்கள் சிந்தித்துப் பாருங்கள்.

இவர்களிடத்தில் அறிவிருக்கின்றது என்பதற்கு ஏற்ற அடையாளம் இருக்கின்றதா? ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகத் தேரில் ஒன்றரையடி அல்லது இரண்டடிச் சாமியை ஏற்றிவைத்து, ஆயிரக்கணக்கில் மக்கள் கூடி அந்தத் தேரை இழுத்துக்கொண்டு வீணாகத் தொல்லைப்படும் இந்த மனிதக் கூட்டத்துக்கு அறிவிருக் கின்றது என்று கூறமுடியுமா? இவர்கள்தான் உண்மையான காட்டுமிராண்டிகள்.

அடுத்து இந்த நாட்டில் எவ்வளவோ கோயில்கள் இருக்கின்றன. அந்தக் கோயில்களுக்கு எல்லாம் ஏராளமான சொத்துக்கள் இருக்கின்றன. அந்தக் கோயில்களுக்கு ஆண்டுதோறும் பக்தர்கள் செலுத்தும் காணிக்கை கோடிக்கணக்கில் வருகின்றன. இந்தக் கோயில்களைக் கட்டியவர்களும் மானியம் விட்டவர்களும் கோயில்களுக்குக் கோடிக்கணக்கில் காணிக்கைக் குவிப்பவர்களும் தமிழின திராவிட மக்களே ஆவர்.

இவ்வளவும் செய்த மக்களை ஒன்றுமே செய்யாத பார்ப்பனப் புல்லுருவிக் கூட்டம் `சூத்திரர்' என்ற இழிந்த பொருளைக் கொடுக்கும் சொல்லை அவர்கட் குரியதாக்கி, அவர்கட்குக் கோயில்களில் பூசகராக வரும் உரிமை கிடையாது என்று பேசி ஊர் தெரியாத யார் யாரோ எழுதி வைத்த வேதம் சாஸ்திரம், புராணம் முதலிய ஆதாரங்களைக் காட்டித் தடுக்கின்றார் என்றால், அதனையும் சகித்துக் கொண்டு மேலும் பக்தர்களாகப் பார்ப்பனருக்குக் கொத்தடிமைகளாகத் திராவிட மககள் வாழ்கின்றார் என்றால் இவர்கட்கு மானம் இருக்கின்றதா? என்பதைச் சிந்தித்துப் பாருங்கள்.

ஆகவேதான் அறிவும், மானமும் அற்று விலங்குகளாக வாழும் பெரும்பாலான கடவுள் நம்பிக்கையாளரைப் பெரியார் காட்டுமிராண்டிகள் என்றார். என்றும் பிற வகையிலும் கடவுள் பற்றிய பெரியாரின் பொருள் மொழிகளை விளக்கலாம்

ஆகவே இப்பொருள் மொழிகள் வசவுமொழிகளல்ல என்பதையும் நன்றாக ஆய்வு செய்து ஆய்வின் வெளிப்பாடாக அறிவிக்கப்பட்ட மொழிகள் என்பதையும் கருத்தில் கொள்வோமாக.

- பெரியார்

(நன்றி: பெரியாரியல் பாடங்கள் (தொகுதி:1)

பெரியார் பேருரையாளர் பேராசிரியர் ந. இராமநாதன்)