கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

ஆரிய ஆதிக்கத்தின் மீது, திராவிட இயக்கம் ஒரு நூற்றாண்டாக நிகழ்த்தி வரும் சம்மட்டி அடியால், முந்நூறு ஜாதிகள் சமூக தளத்தில் மூன்று பிரிவுகளாகச் சுருங்கி விட்டன. உயர் ஜாதி, இடைநிலை ஜாதி, தாழ்த்தப்பட்ட ஜாதி என்ற 3 பிரிவுகள் மட்டுமே மெல்லியதான கோடுகளுடன் மிச்சமிருக்கின்றன. சுயமரியாதைத் திருமணங்கள், சமத்துவபுரங்கள், தீண்டாமையைக் கடைப்பிடிக்காத கிராமங்களுக்குப் பரிசு போன்ற திட்டங்களின் ஊடாக இந்த 3 கோடுகளையும் கரையச் செய்கிற பணியை `திராவிட மாடல்’ அரசு செய்துகொண்டிருக்கிறது. ஆனால், ஓர் அரசு மட்டுமே செய்துவிடக் கூடிய பணி அல்ல இது. சமூகமும் சேர்ந்து எடுக்க வேண்டிய தீர்க்கமான முடிவு அது. அந்த முடிவுக்கு ஆகச்சிறந்த முன் உதாரணம்தான் மாதிரிமங்கலம்.

மயிலாடுதுறைக்கு அருகே உள்ள அரங்கங்குடியைச் சேர்ந்த துரைசாமி, நீதிக்கட்சிக் கொள்கையின்பால் ஈர்க்கப் பட்டவர். பார்ப்பனிய அதிகார வர்க்கத்துடன் மோதல், தலித் மக்களின் உரிமைகளுக்கான போராட்டம் என்று சிறுவயது முதலே ஜாதி ஒழிப்புக் களத்தில் உறுதியோடு நின்றவர். அவரைக் காவல்துறையில் சேர்த்துவிட்டால், இதையெல்லாம் விட்டுவிட்டு, மற்றவர்களைப் போல் சராசரியான மனிதனாகி விடுவார் என்று அவரது தந்தை நாராயணசாமி முயற்சி எடுத்து அவரைக் காவலராக்கினார். 1950-களில் காவல்துறையில் கோலோச்சிய பார்ப்பனர்களை எதிர்த்து, கலகக்குரல் எழுப்பி, பணியை விட்டார். அதன்பின்னர், கதிராமங்கலத்திற்குக் குடிபெயர, அங்கும் அக்ரஹார அடக்குமுறைகளுக்கு எதிராக வெகுண்டெழுந்தார். பின்னர், 1955-இல் மாதிரிமங்கலத்தில் மளிகைக் கடை வைத்தார். அத்துடன் மாதிரிமங்கலம் ஊராட்சியின் திராவிடர் கழகத் தலைவராகவும் ஆகிவிட்டார்.

அப்போது தேநீர்க் கடையில் தாழ்த்தப்பட்டோருக்கு அமர இடம் இருக்காது, தேங்காய்ச் சிரட்டையில் தேநீர் கொடுக்கும் வழக்கம் இருந்தது. துரைசாமி பேசிப்பார்த்தார், பலன் இல்லை. அருகே புதிய கடையைத் திறந்தார், பணியாளர்கள் யாரும் வரவில்லை. கேரளாவில் இருந்து அழைத்துவந்தார். `இங்கு அனைவரும் சமமாக அமர்ந்து தேநீர் குடிக்கலாம்’ என அறிவிப்பு செய்தார். முதன்முதலாக மக்கள் சமமாக அமர்ந்து தேநீர் குடித்தனர். மாதிரிமங்கலத்தில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கோனேரிராஜ புரத்தில் ஆதிரத்தினேஸ்வரர் கோயில் எதிரே குளம் ஒன்று உள்ளது. அக்ரஹாரவாசிகளைத் தாண்டி வேறு யாரும் குளத்தைப் பயன்படுத்தக் கூடாது என்பது எழுதப்படாத விதி. அந்தத் தீண்டாமையை ஒழிக்க, ஊரெங்கும் பிரச்சாரம் செய்தார், பெரியாரை அழைத்துப் பொதுக் கூட்டம் நடத்தினார்.

ஆனால், காவல்துறைப் பாதுகாப்போடு மேலாதிக்கத்தைத் தக்கவைக்க முயன்றது எதிர்த்தரப்பு. இரவோடு இரவாக குளத்தில் பால்டாயில் ஊற்றினார் துரைசாமி. மீன்கள் செத்து மிதந்தன. குளத்தைத் தூர்வார பார்ப்பனர்கள் ஆட்களை அழைத்தனர். யாரும் குளத்தில் இறங்கக்கூடாது என ஏற்கெனவே எச்சரித்து வைத்திருந்தார் துரைசாமி. வெளியூரில் இருந்து ஆட்கள் அழைத்து வரப்பட்டால், மீன்களுக்குப் பதிலாக மனிதர்கள் மிதப்பார்கள் என்றும் மிரட்டி வைத்திருந்தார். ஆட்சியர், பொதுமக்கள், திராவிடர் கழகத்தினர் முத்தரப்புப் பேச்சுவார்த்தை நடத்தினர். குளத்தில் குளிக்கவும், தண்ணீர் எடுக்கவும் எல்லோரையும் அனுமதித்தால், தூர்வாரும் பணியில் ஈடுபவார்கள் என்று உறுதியாகச் சொன்னார். அப்போதும் பார்ப்பனர்கள் அமைதி காக்க, அனைவரும் குளத்தைப் பயன்படுத்தலாம், யாரேனும் தடுத்தால் சட்ட நடவடிக்கை பாயும் என்று எச்சரித்து, தீண்டாமைக் கொடுமையை முடிவுக்குக் கொண்டு வந்தார் ஆட்சியர்.

ர.பிரகாசு முரசொலியில் எழுதியது.