22.9.2018 அன்று பெரம்பூரில் வடசென்னை மாவட்டக் கழகம் நடத்திய கருத்தரங்கில் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் ‘பெரியார் இயக்கம் சந்தித்த அடக்குமுறைகள்’ என்ற தலைப்பில் நிகழ்த்திய உரையிலிருந்து.

PERIYAR 350இந்தித் திணிப்புக்கு எதிராக இந்திய தேசியக் கொடியை எரிக்கும் போராட்டத்தை அறிவித்தார் பெரியார். 17.7.1955 அன்று திருச்சியில் கூடிய திராவிடர் கழக மத்திய நிர்வாகக் குழு 1955 ஆகஸ்ட் 1ஆம் தேதி கொடி எரிப்புப் போராட்டம் நடத்தும் முடிவை எடுத்தது. இது குறித்து 20.7.1955 அன்று வெளி வந்த ‘விடுதலை’ நாளேட்டில் பெரியார் அறிக்கை வெளியிட்டார். நாடெங்கும் கடும் எதிர்ப்புகள் வந்தன. குறிப்பாக கம்யூனிஸ்ட் கட்சியிடமிருந்து கடுமையான எதிர்ப்பு வந்தது. அப்போது பெரியார் இவ்வாறு எழுதினார்:

“குமரன் காத்த கொடியை கொளுத்தலாமா என்கிறார்கள் நம் நாட்டு கம்யூனிஸ்டுகள். உலகத்தில் அறிவாளிகள் பிறக்குமிடம் கம்யூனிஸ்ட் கட்சி தான் என்கிறார்கள். நம் நாட்டு கம்யூனிஸ்டுகளைப் பொறுத்தவரை அத்தனையும் பொய்யாகிவிட்டது.

குமரன் காத்த கொடி இதுவல்ல; காங்கிரஸ் கட்சி தோன்றிய நாட்களாய் எத்தனை முறை கொடியில் மாற்றங்கள் செய்யப்பட்டன என்பது இவர்களைவிட எனக்குத்தான் நன்றாகத் தெரியும். கடைசியாக இருந்த கட்சியின் கொடி அமைப்பில், இராட்டைக்குப் பதில் அசோக சக்கரத்தைப் பதித்து மத்தியில் வைத்து இதுதான் அரசாங்கக் கொடி தேசியக் கொடி என்கிறார்கள். நாம் கொளுத்தப் போவது சர்க்காரின் கொடியைத்தான்” என பெரியார் விளக்கினார்.

போராட்டத்துக்காக 1955ஆம் ஆண்டு ஜூலை 22 முதல் 31 வரை ஊர் ஊராக இரயிலில் பயணம் செய்து தோழர்களை நேரில் சந்தித்து, கொடி கொளுத்தும் போராட்ட வீரர்களின் பட்டியலைப் பெற்றார். பட்டியலை ‘விடுதலை’ நாளேடு வெளியிட்டது. 10,000 பேர் கொடி கொளுத்தப் பெயர் கொடுத்தார்கள்.

நாடெங்கும் பதற்றம் நிலவியது. இந்த நிலையில் 30.7.1955 அன்று முதல்வர் காமராசர் ஒரு அறிக்கை வெளியிட்டார். “அரசுத் தேர்வுகளில் இந்தி கட்டாயப் பாடமாக இருக்காது. மத்திய அரசின் சார்பிலும் மாநில அரசின் சார்பிலும் இந்தி எப்போதும் எப்படியும் திணிக்கப்பட மாட்டாது என்று நான் உறுதி கூறுகிறேன். இந்த உறுதிமொழியை நம்பி திராவிடர் கழகத்தினர் தேசியக் கொடி எரிப்புப் போராட்டத்தைக் கைவிட வேண்டும்; மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கத் தயங்க மாட்டேன்” என்று அறிக்கை விடுத்தார். இதற்குப் பிறகு தான் தொடர்வண்டி நிலையங்களில் இந்தியில் முதலிடம் பெற்றிருந்த ஊர்ப் பெயர்கள் நீக்கப்பட்டு தமிழில் ஊர்ப் பெயர்கள் பெரிதாக மேலே எழுதப்பட்டன. பெரியார் அறிவித்த தேசியக் கொடி எரிப்புப் போராட்டத்துக்குக் கிடைத்த வெற்றி இது.

காமராசர் அறிக்கையைத் தொடர்ந்து பெரியார் ஒரு அறிக்கை விடுத்தார். கொடி கொளுத்தும் போராட்டத்தை தள்ளி வைப்பதாக அறிவித்த பெரியார், “வீண் பொய்க் கவுரவத்தைப் பார்க்காமல் மிகவும் அறிவுடைமையுடன் நடந்து கொண்ட சென்னை அரசாங்கத்தை மனமாரப் பாராட்டு வதுடன், உறுதிமொழிக்கேற்ப நடந்து கொள்ளு மென்றே நம்புகிறேன்” என்று குறிப்பிட்டார்.

கொடி எரிப்புப் போராட்டம் அறிவித்த பிறகு காமராசர் தமிழக அரசு சார்பாக விடுத்த அறிக்கையை வெளியிடுவதற்கு முன் தன்னிடம் காட்டி திருத்தங்கள் செய்த பிறகே வெளியிடப் பட்டது என்ற சேதியை பெரியார் ஒரு அறிக்கை வழியாக விளக்கினார்.

3.8.1955இல் ‘விடுதலை’யில் வெளிவந்த அறிக்கை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.

“இந்தப் பார்ப்பனர்கள்தாம் இப்படிக் காலிகளைக் கிளப்பி விட்டனர் என்றால் மந்திரி கோவிந்த வல்லப பந்த் அவர்கள், கொடி கொளுத்து வது பெரிய இராஜத்துரோகக் குற்றத்திற்குச் சமமான குற்றமாகும் என்று கூறுகிறாராம். அதன் பிறகுதான் கொடிகொளுத்துவோர் பட்டியலில் ஆயிரக்கணக் கில் பெயர் வந்த வண்ணமிருக்கின்றது. அன்றியும் எந்தச் சட்டப்படி, என்ன குற்றம் என்பதே இதுவரை யாருக்கும் புலப்படவில்லை!

வக்கீல்கள் எல்லாம் சட்டப் புத்தகத்தைப் புரட்டிப் புரட்டிப் பார்த்தும், இப்பேர்ப்பட்ட முக்கிய விசயத்தைப் பற்றிச் சட்டத்தில் ஒன்றுமே தென்படவில்லை. கொடியைக் கொளுத்தினால் என்ன தண்டனை விதிப்பது என்பதைப் பற்றி அரசாங்கமே இன்னமும் சட்டப்பூர்வமாக ஒன்றும் முடிவு செய்யவில்லை.

அப்படி இருக்க, தெருவில் திரியும் ஆண்டி களெல்லாம், கொடியைக் கொளுத்தினால் உயிரைக் கொடுத்துக் காப்பேன் என்று மிரட்டுகின்றனர்.

இவர்கள் மிரட்டலுக்கும், பூச்சாண்டிகளுக்கும் நான் பயந்தவனா? அப்படித்தான் என் உயிர் போனாலும் நஷ்டம் என்ன என்று நினைப்பவன். நானும், இந்நாட்டில் ஒரு மனிதனின் சராசரி வயதைப்போல் மூன்று மடங்கு வயதுடையவன். இதுவரை இருந்தது போதாமல் இன்னமும் உயிருடன் இருக்க ஆசைப்படுபவன் அல்லன், போகிற நேரத்தில் ஏதாவது நல்ல காரியத்தைச் செய்துவிட்டுப் போகலாம் என்பதுதான் பெரிய கவலையே தவிர, என் உயிர் போய்விடுமே என்ற கவலை இல்லை.

நானும் இப்போராட்டம் நடந்தே தீரும் - அதன் மூலமாவது பெரிய குற்றமென்று சொல்கிறார்களே அதற்காகவாவது சில வருடங்கள் சிறைவாசம் செய்ய வாய்ப்புக் கிடைக்கும் என்று ஆவலோடு இருந்தேன். என் உடல்நிலையைப் பற்றிக்கூடக் கவனிக்காது உடல் நிலையில் பலவிதமான குறைகளி லிருந்தும் டாக்டரிடம் சரி செய்து கொள்ளாமல் இருந்து விட்டேன். ஏன்? சொந்தச் செலவில் ஏன் காசை வீணாக்க வேண்டும்; சிறைக்குச் சென்றவுடன் அரசாங்கச் செலவிலாவது பார்த்துக் கொள்ளலாம் என்றெல்லாம் ஆசையுடன் இருந்தேன். ஆனால், தற்சமயம் அவ்வித வாய்ப்புக்கு இடமின்றிப் போய்விட்டது.

நான் விரும்பியபடியே சர்க்கார் உறுதிமொழி கிட்டியது. என்னுடைய விருப்பப்படி சர்க்கார் எப்படிப்பட்ட வாக்குறுதி கொடுத்தால் போதும் என்றேனோ, அதன்படி வாக்குறுதி தந்துவிட்டது. இந்தி மொழி தமிழ்நாட்டார் மீது கட்டாயமாகத் திணிக்கப்பட மாட்டாது என்ற ஒரே உறுதிமொழி கொடுத்தால் போதும் என்றேன்.

இவ்வாக்குறுதியை அடைந்த பிறகு, நான் இக்கிளர்ச்சியை நடத்துவதென்பது சரியல்ல; ஆனால், அரசாங்கமும் இதுவரை அப்படித்தான் கூறி வந்திருக்கிறது. பெரிய தலைவர்களும், மந்திரிகளும்கூட இந்தியை விரும்பாதவர்களிடத்தில் கட்டாயப்படுத்துவதில்லை என்று கூறி வந்துள்ளார்கள். இன்றைக்கு நடைமுறையில் அப்படிக் காணவில்லை. பிரதமர் நேருவிடம் நிலைமையைத் தெளிவுபடுத்தினார் முதலமைச்சர் காமராசர்.

நேரு அவர்கள் கூட காமராசரிடம் அப்படித் தான் கூறினாராம். நாங்கள் எத்தனையோ முறை இந்தியைக் கட்டாயப்படுத்துவதில்லை என்று கூறியுள்ளோமே என்றாராம். முதலில் காமராசரைக் கண்டவுடனேயே நேரு புன்முறுவல் கொண்டு கிண்டல் செய்தாராம். நாயக்கரும், தாங்களும் கட்டிப் புரளுகிறீர்கள் என்று கூறுகிறார்கள். அவ்விதமிருக்க, உங்கள் ஆட்சியிலேயே நாயக்கர் ஏதேதோ செய்யப் போகிறாராமே? என்று கேட்டாராம்.அதற்கு முதன் மந்திரி அவர்கள் எல்லாம் உங்களால் வருவதுதான் என்றாராம். என்ன என்று கேட்டவுடன், இந்தியைக் கட்டாயப்படுத்துவதில்லை என்று பேசிவிட்டு, நடைமுறையில் கட்டாயப்படுத்தப்படுவதைப் பார்த்து ஆத்திரம் பொறுக்காமல் இதுபோன்ற கிளர்ச்சி எல்லாம் செய்கிறார்கள் என்றாராம். பிறகுதான், நம்மிடமா குற்றம் உள்ளது? அப்படி யானால் உடனே சென்று இனி கட்டாயப்படுத்தக் கூடாது என்பதாக அறிக்கை வெளியிடுங்கள் என்றாராம். அதன்படி தான் காமராசர் அவர்களும் அறிக்கை வெளியிடும்படியாகியது.

அந்த அறிக்கையை வெளியிடுமுன் ஒரு சிலர் என்னிடம் கொண்டு வந்து காட்டி, இப்படி வெளியிட்டால் போதுமா என்று என் சம்மதம் கேட்டனர். நானும் அதைப் பார்த்து, ஒரு சில திருத்தங்களைச் சொல்லி, அதன்படி இருந்தால் போதுமென்றேன். அப்படியே திருத்தங்கள் செய்து அறிக்கையும் வெளியிடப்பட்டது.

நானும், வெளியிட்ட எனது அறிக்கையை அவர்களிடம் காட்டவும், அவர்களும் போராட்டத்தை விட்டு விட்டதாகவே வெளியிடச் சொன்னார்கள். ஆனால், நான் அவ்வளவு ஏமாந்தனவனல்லன்! எனவே, நான் தங்கள் அறிக்கையை நடைமுறையில் பார்க்க வேண்டும்; அதுவரை போராட்டத்தைக் கைவிடுவதாக இல்லை; ஆனால், அதுவரை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளேன் என்பதாகக் கூறி, அதன்படியே போராட்டத்தை ஒத்தி வைத்துள்ளதாக இன்றைய அறிக்கையில் வெளியிட்டுள்ளேன்.

இவ்வுண்மைகளை நம் நாட்டுப் பத்திரிகைகள் இருட்டடிப்புச் செய்கின்றன. காமராசர் எச்சரிக்கை என்றும், நாயக்கரின் போராட்டம் வாபஸ் என்றும் எழுதுகின்றன. நாட்டின் நலனுக்கென்று உண்மைச் செய்திகளை வெளியிட வேண்டும் என்ற அறிவாளிகளைக் கொண்ட பத்திரிகைகள் ஒன்றாவது கிடையாது. எல்லாம் பார்ப்பான் நலனுக்கே - பார்ப்பானுடைய ஆதரவிலேயே - பார்ப்பனர்களாலேயே நடத்தப்படுவதால் பித்த லாட்டமும், பொய்யும், புளுகும், லம்பாடித்தன முமாகவே நடந்து கொள்கின்றன.

இதனால் நம் நாட்டின் சுதந்திரத்திற்கும் முன்னேற்றத்திற்கும் வழியின்றி போய்விடுகின்றது. இப்பத்திரிகைகள் அத்தனையும், நம் நாட்டை வடநாட்டவர்களுக்குக் காட்டிக் கொடுப்பவை களாகத்தாம் உள்ளன”- என்று பெரியார் அறிக்கை விடுத்தார்.

  ‘விடுதலை’ 3.8.1955

Pin It