periyar 34இன்று இந்தியாவில் பத்து லட்சக்கணக்கான கோவில்கள் இருக்கின்றன. அவைகளில் அனேகம் குட்டிச் சுவர்களாக மாறி கழுதைகள் போய் ஒண்டுவதற்குக்கூட லாயக்கில்லாத நிலையில் இருக்கின்றன. இனி இருக்கவும் போகின்றன. இப்படி இருக்கையில் கல்கத்தாவில் புதிதாக ஒண்ணரை லட்சம் ரூபாய் செலவு செய்து ஓர் புதுக்கோயில் கட்டி அதில் ஆதிதிராவிடர்களை அனுமதித்திருக்கிறார்களாம். இதை தேசியப் பத்திரிகைகள் போற்றுகின்றன.

இது என்ன அக்கிரமம்? எவ்வளவு முட்டாள்தனம்? என்பதையோ சிந்தித்துப் பார்க்க வேண்டுகிறோம். பழய கோவில்களில் ஆதித்திராவிடர்களை விட வில்லையானால் அதற்காக புதுக்கோவில்கள் கட்டுவது பித்தலாட்டமான காரியமா? அல்லவா? தீண்டப்படாதவர்களுக்குக் கோவில் பிரவேசம் மறுப்பது உயர்வு தாழ்வு பேதத்தைக் காட்டுவதாய் இருக்கின்றதே என்று சொன்னால் அதற்கு பதில் புதுக்கோவில் கட்டி அவர்களுக்குப் பிரவேசமளித்து விட்டால் உயர்வு தாழ்வு ஜாதி வித்தியாசம் ஒழிந்து விடுமா என்று கேள்க்கின்றோம்.

தேசீயம் என்ற பித்தலாட்ட சூழ்ச்சி என்று ஆரம்பமானதோ அன்று முதல் இன்றுவரை தேசீயத்தலைவர் முதல், வாலர்கள் வரையில் ஒவ்வொரு விஷயத்திலும் இந்த மாதிரியான சூழ்ச்சிகளும், பித்தலாட்டங்களுமே நடைபெற்று மக்களையும், முழு மூடர்களாக்கி வருகின்றது. என்றுதான் இந்த புரட்டுகளும், கேடுகளும் ஒழியுமோ?

(குடி அரசு - செய்தி விளக்கக் குறிப்பு - 05.02.1933)

Pin It