மூச்சடிக்கிப் பலவகையாக யோகஞ் செய்வதன் மூலம் சிறிது சரீர திடம் பெறுவதற்கு ஏதாவது மார்க்கமிருக்குமேயொழிய அதில் வேறு “தெய்வீகத் தன்மை” யாதொன்றுமில்லை யென்பதே நமது அபிப்பிராயமாகும். ஆகவே இதுவும் கழைக் கூத்து, சர்க்கஸ், ஜால வித்தை முதலியவைகளைப் போல ஒன்றுதான் என்பதில் சந்தேகமில்லை.

periyar 533ஆனால் நமது மக்கள் யோகத்தில் ஏதோ “தெய்வீகத் தன்மை” இருப்பதாக நம்பியிருப்பதால் அநேகர் யோகிகள் என்று கிளம்பி, சில ஜாலங்களைச் செய்து, பாமர மக்களை மலைக்கச் செய்து ஏமாற்றி வருகின்றனர். ஜன சமூகமும் இவர்கள் பால் பரம்பரையாகவே ஏமாந்து கொண்டும் வருகிறது.

இதற்கு உதாரணமாகச் சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியைக் கவனித்தால் விளங்கும். “ஹட யோகம்” என்பதில் சித்தி பெற்றவராகச் சொல்லப்பட்ட நரசிம்மசாமி யென்பவர் சென்னை, கல்கத்தா முதலிய இடங்களில், பிரபல ரசாயன சாஸ்திரிகளின் முன்னிலையில், கொடிய விஷம், கண்ணாடித் துண்டுகள், ஆணிகள் முதலியவற்றை விழுங்கி உயிரோடிருந்தாராம். இந்த நிகழ்ச்சியைக் கண்டு ரசாயன சாஸ்திரிகள் எல்லோரும் மலைத்துப் போய் விட்டனர். ஆகவே யோகத்தின் மகிமையைப் பற்றிப் பத்திரிகைகளில் விளம்பரப்படுத்தப்பட்டது.

ஆனால் இதே நரசிம்ம சாமியார் சில தினங்களுக்கு முன் ரெங்கூனில் இரண்டாம் முறையாக விஷங்களையும் கண்ணாடித் துண்டுகளையும் விழுங்கிய கொஞ்ச நேரத்திற்குள் மரண யோகம் பெற்று விட்டார். இதற்குக் காரணம் விஷம் உண்டவுடன் ‘ஹட யோகம்’ பண்ணுவதற்குக் கொஞ்சம் நேரமாகிவிட்டது என்று பத்திரிகைகளில் சொல்லப்படுகின்றது. ஆனால், அவைகளை உட்கொள்ளும் சாதுரியத்திலோ அல்லது மாற்று மருந்தை உட்கொள்ளுவதிலோ அல்லது பழக்கப்பட்ட அளவை உட்கொள்ளுவதிலோ தவறி விட்டார் என்று ஏன் சொல்லக் கூடாதென்று தான் நாம் கேட்கின்றோம்.

யோகத்தில் ‘தெய்வத் தன்மை’ உண்டென்பது வீண் புரட்டேயொழிய வேறில்லை. சாதுரியத்தினாலோ அல்லது பழக்கத்தினாலோ அல்லது மாற்று மருந்துகளினாலோ செய்யப்படும் காரியங்களையெல்லாம் யோகமென்றும், மந்திரமென்றும், தேவதையென்றும், தெய்வ சக்தியென்றும் சொல்லி ஒரு கூட்டத்தார் ஜன சமூகத்தை ஏமாற்றி வருகிறார்கள் என்பதை அறிய வேண்டுகிறோம். ஆகையால் இனியேனும் இது போன்ற மோசடியான காரியங்களைக் கண்டு ஏமாறாமலிருக்கும்படி எச்சரிக்கை செய்கிறோம்.

(குடி அரசு - துணைத் தலையங்கம் - 03.04.1932)

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.