periyar karunadhini 450ருஷியாவில் கடவுளே இல்லை என்றும், கடவுள் மீது நம்பிக்கை இல்லை என்றும் சபைகளும் மகாநாடுகளும் கூட்டி, கடவுள் மறுப்புக் கண்காட்சிகளும் வெகு சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டு, கடவுளுக்கு எதிர் பிரசாரம் பலமாக நடைபெறுகின்றது. இதன் பலனாக கடவுளால் முடியாத காரியங்களைக் கூட அந்தத் தேசத்தில் உள்ளவர்கள் செய்து காட்டி வருகின்றனர். அதாவது செத்தவர்களை பிழைக்க வைத்து விடுகின்ற விஷயம் பத்திரிகைகளில் பறந்த வண்ணமாயிருக்கின்றது. கடவுளுக்குப் பிறக்கச் செய்வதும், இறக்கச் செய்வதும்தான் தெரியுமேயொழிய செத்தவர்களுக்கு உயிர் கொடுக்கத் தெரியாது. இந்த வேலை தமக்குத் தெரியாது, சக்தியில்லை என்று அவர் பேசாமல் அடங்கி விட்டாரோ என்னமோ தெரியவில்லை. அல்லது இந்தப் புதிய வேலையை அவர்களே செய்து கொள்ளட்டும், நமக்கு ஏன் இந்த வீண் தொல்லை என்று கருதி பிறப்பிப்பதும், காயலாக் கொடுத்து சாகடிப்பதுமான இந்த இரண்டு வேலையுடன் சும்மா இருந்து விட்டார் போலும். “நாஸ்திக”த்தின் சக்தியே சக்தி!

(குடி அரசு - செய்தி விளக்கம் - 23.06.1929)

Pin It