நாம் எப்பொழுதும் நம்மைவிட புகழிலும் செல்வத்திலும் உயர் நிலையில் இருப்பவர்களைப் பார்த்து, நாம் உயர்வதற்கு உண்டான வழிமுறைகளை கற்றுக் கொள்ள முயல்கிறோம். சில சமயங்களில் நமக்குக் கீழே இருப்பவர்களின் முயற்சியையும், சுறுசுறுப்பையும் கவனிக்கத் தவறிவிடுகிறோம். சில நேரங்களில் நம் வாழ்க்கையில் நம்மைச் சுற்றியுள்ள சாமான்ய மக்களிடமிருந்தும், சாதாரண நிகழ்வுகளிலிருந்தும் பாடங்களைக் கற்றுக் கொள்கிறோம், கற்றுக் கொள்ள வேண்டும்.

ஆசான் ஜிம் ரோன் (Motivational Guru Jim Rohn) வாழ்வில் முன்னேற ஊக்கமளிக்கும் 'எறும்புகள் தத்துவம்' (Ants philosophy) என்று நான்கு செய்திகளை பாடங்களாக எடுத்துச் சொல்கிறார்.

1. முயற்சியை விட்டு விடாதே: எறும்புகளைப் பாருங்கள். எப்பொழுதாவது முயற்சியை விட்டு விடுகின்றனவா? அவைகள் செல்லும் வழியில் தடங்கலை ஏற்படுத்திப் பாருங்கள். முட்டி, மோதி தடம் மாறி மேலே செல்ல முயற்சிக்கும். முயற்சியைக் கைவிடுவதில்லை. திகைத்து நின்று திரும்பிப் போவதுமில்லை. இதுபோல நம் வாழ்விலும் பல நேரங்களில் நினைத்த காரியங்கள் நினைத்தவுடன் நடக்காமல் தடங்கல் ஏற்படலாம். துவளாமல் அவற்றை சவாலாக எடுத்து, மாற்று வழியை ஆராய்ந்து முயற்சி செய்யுங்கள். வெற்றி நிச்சயம். முன்னாள் பிரிட்டிஷ் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சிலும் இதையே, 'விடாதே, விடாதே, விட்டு விடாதே' என்று தாரக மந்திரமாகச் சொன்னார். 

2. துணிந்து செல்: எறும்புக்கும் வெட்டுக் கிளிக்கும் இடையே நடந்த ஒரு சுவாரஸ்யமான கதையை நாம் இங்கே நினைவில் கொள்ள வேண்டும். எறும்புகள் எதிர் வரும் குளிர் காலத்தை மனதில் வைத்து, கோடை காலத்தில் சுறு சுறுப்பாக தானியங்களை சேமிக்கின்றன. ஆனால் வெட்டுக் கிளிகள் சோம்பேறியாக துள்ளித் திரிகின்றன. கோடை காலம் வெகு நாட்களுக்கு நீடிக்காது என்று எறும்புகளுக்குத் தெரியும். நாம் நன்றாய் செல்வாக்காக இருக்கும் பொழுது, எதிர் காலத்தில் இடர் வராது என்று இறுமாப்பாய் இருக்காதே. எல்லோரிடமும் அன்பாய் இரு. சில சந்தர்ப்பங்களில் நேரம் சரியில்லாவிட்டாலும், நல்ல நண்பர்கள் துன்பம் வரும் நேரத்தில் கைகொடுப்பார்கள்.

3. நம்பிக்கை வை: எறும்புகள் தாங்க முடியாத குளிர் காலத்தில், எதிர் வரும் கோடை காலத்தை மனதில் வைத்து பொறுமையாகக் காத்திருக்கும். கோடை காலம் வந்ததும் மீண்டும் சுறு சுறுப்பாக வெளிக் கிளம்பி, தானியங்கள் சேகரிக்க ஆரம்பித்து விடும். அது போல துன்பம் வரும் வேளையில் துவண்டு விடாமல் பொறுத்திரு. காத்திரு. தீராத பிரச்னை என்று எதுவுமில்லை. அதற்கு பிறர்க்கு தீங்கு நினையாத நல்ல மனம் வேண்டும். நல்லது நடக்கும் என்று நம்பி, காத்திருந்து முயற்சித்தால் எதிர் காலம் வளமாக அமையும்.

4. உன்னால் முடிந்ததெல்லாம் செய்: ஒவ்வொரு எறும்பும் எவ்வளவு தானியத்தை சேமித்து விட முடியும்? எறும்புகள் ஒன்றுடன் ஒன்று போட்டியிடுவதில்லை. மற்ற எறும்புகள் சமமாக உழைக்க வில்லையே! நான் மட்டும் ஏன் தொடர்ந்து உழைத்து சேகரிக்க வேண்டும் என்று சோம்பி இருப்பதில்லை. உழைப்பதற்கு கூலி குறைவென்றும் சலித்துக் கொள்வதுமில்லை. எனவே உன்னால் முடிந்ததெல்லாம் செய். நூற்றுக்கு நூறு சதம் நல்ல மனதுடன் உழைத்தால் மகிழ்ச்சியும், வெற்றியும் நிச்சயம்.

ஒன்று தெரியுமா? எறும்புகள் தன் எடையைப் போல 20 மடங்கு கனமான பொருட்களை துக்கிச் செல்ல முடியும். எனவே அடுத்த முறை நம்மால் முடியாது என்று நினைக்கும் போது, மிரண்டு விடாதே, சிறிய எறும்புகளை நினைத்துப் பார். உன் தோள்களின் சுமை எளிதாகும்.

வ.க.கன்னியப்பன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It