Nikolai Ostrovsky                “மனிதனது மதிக்க முடியாத உடைமைகளில் சிறந்தது அவனது வாழ்வாகும். அவன் ஒரு முறைதான் வாழ முடியும். காலமெல்லாம் குறிக்கோளில்லாமல் பாழாக்கிவிட்டேனே என்ற வருத்தம் மனதை வதைப்பதற்கு வாய்ப்பளிக்காத வகையில் அவன் சீராக வாழ வேண்டும். அற்பனாக வாழ்ந்து இழிவு தேடினேனென்ற அவமானம் உள்ளத்தை எரிப்பதற்கு இடமில்லாத வகையில் அவன் உயர்ந்து வாழ வேண்டும். உலகத்தின் தலைசிறந்த இலட்சியத்துக்காக, மனித குலத்தின் விடுதலைப் போராட்டமென்ற பொன்னான மார்க்கத்துக்காக நான் எனது வாழ்வு முழுவதையும் அர்ப்பணித்தேன் என்று இறக்கும்பொழுது கூறும் உரிமை பெறும் வகையில் அவன் வாழ வேண்டும். திடீர் நோயோ, விபத்தோ வாழ்வுக்கு உலைவைக்குக் கூடுமாதலால், மனிதன் தன் வாழ்வின் ஒவ்வொரு விநாடியையும் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்”.

                பயனுள்ள உன்னதமான வாழ்வை மனிதன் எப்படி ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதை, ‘வீரம் விளைந்ததுஎன்ற தனது நாவலில் மேற்கண்ட கருத்தை தெளிவாக எடுத்துக் காட்டியுள்ளார், நிக்கொலாய் ஆஸ்த்ரோவஸ்கி! அவர் அப்படி கூறியது மட்டுமல்லாமல், அப்படியே வாழ்ந்து காட்டியுள்ளார்.

                நிக்கொலாய் ஆஸ்த்றோவஸ்கி 1904 ஆம் ஆண்டு, இரஷ்யாவில் வொஹினியா மாநிலத்தில் உள்ள விலியா என்னும் சிறிய கிராமத்தில் பிறந்தார். அவர் ஒரு ஏழைத் தொழிலாளியின் மகன். தமது பதினைந்தாவது வயதில் சோவியத் கம்யூனிஸ்ட் இளைஞர் சங்கத்தில் உறுப்பினராகச் சேர்ந்தார். பின்னர், அவர் சோவியத் செஞ்சேனையில் இணைந்தார். இளைஞர்களை அணிதிரட்டி தீவிரமாகப் போராடுவதிலும், அப்போராட்டத்திற்குத் தலைமை தாங்கி வழி நடத்துவதிலும் ஆற்றல் மிக்கவராகவும் திகழ்ந்தார்.

                ஆஸ்த்ரோவஸ்கி முப்பத்திரண்டு ஆண்டுகள் மட்டுமே இம்மண்ணில் வாழ்ந்தார். தமது குறுகிய கால வாழ்க்கையின் பெரும் பகுதியை தமது தாய்நாட்டைப் பாதுகாப்பதற்கான போராட்டத்திற்கு அர்ப்பணித்தார்.

                பிரித்தானியாவைச் சேர்ந்த மார்க்சிய இலக்கியவாதிகளான கிறிஸ்தோபர் கோட்வெல், ரல்வ்ஃபொக்ஸ் முதலிய இருவரும், பாசிசத்துக்கு எதிரான ஸ்பானிய போர்முனையில் தங்களுடைய இன்னுயிர்களை தியாகம் செய்தனர். அவர்களது அடிச்சுவட்டில் தமது தாய்நாட்டையும், மனித குலத்துக்கு பேரொளியாக வந்த உலகின் முதலாவது சோசலிச அரசையும், ஏகாதிபத்தியவாதிகளிடமிருந்தும், உள்ளூர்த் தேசத்துரோகிகளிடமிருந்தும் பாதுகாப்பதற்கான போரில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டார்.

                போலந்து நாட்டின் வெண்படையினர் 1920 ஆம் ஆண்டு சோவியத் இரஷ்யாவை திடீரெனத் தாக்கிக் கொள்ளை அடிப்பதில் ஈடுபட்டனர். இந்த வெண்படைக் கொள்ளையினருக்கெதிராக சோவியத் செஞ்சேனை போர் தொடுத்தது. சோவியத் நாட்டு இளைஞர்கள் இந்த யுத்தத்தில் முன்னணிப் படையாக நின்று போராடினர். போர் முனையில் ஆஸ்த்றோவஸ்கி தலைமையேற்று தீரத்துடன் போராடி வெண்படையினரைத் துரத்தியடித்துச் சாதனை புரிந்தார். இந்தப் போரில் அவருக்குப் படுகாயம் ஏற்பட்டது. இதனால் 1928 ஆம் ஆண்டிலிருந்து அவர் பன்னிரெண்டு ஆண்டுகள் கடுமையாக நோய்வாய்ப்பட்டு படுத்த படுக்கையாகக் கிடக்க நேரிட்டது. இறுதியில் அவர் தனது கண் பார்வையையும் இழந்தார். கம்யூனிச லட்சியத்தின் வெற்றிக்கான உன்னத போராட்டத்தில் ஆஸ்த்றோவஸ்கி தனது உடலால் உழைக்க முடியாவிட்டாலும், தனது பேனாவை ஆயுதமாகக் கொண்டு தொடர்ந்து போராடினார்.

                ‘வீரம் விளைந்ததுஎன்ற தமது நாவலை 1932 ஆம் ஆண்டு எழுத ஆரம்பித்தார். அவர் படுக்கையிலிருந்தபடியே நாவலின் பாதிப் பகுதியை எழுதினார். அவர் கண்பார்வையை இழந்து விட்டபடியால் மீதியை அவரால் எழுத இயலவில்லை. எனவே, அவர் சொல்லச் சொல்ல வேறு ஒருவரால் எழுதப்பட்டது. இந்நாவலை அவர் தமதுநினைவுப் பதிவுகள்என்று கூறினார். ‘வீரம் விளைந்ததுஎன்ற இந்நாவல், இதன் கதாநாயகனான பாவல் கச்சாக்கினது புரட்சிகர அரசியல் போராட்ட உணர்வையும், அவனுடைய வீரதீரச் செயல்களையும் காட்டுகின்ற ஒரு சுய வரலாற்றுப் படைப்பாக அமைந்துள்ளது. மேலும், இளமை, காதல், சோகம், வீரம், தியாகம், தேசபக்தி, மனிதநேயம், சர்வதேச பாட்டாளி வர்க்க உணர்வு முதலியவை இந்த நாவலில் செறிந்துள்ளன.

                மனித குலத்தின் விடுதலைக்காக அர்ப்பணிப்பு செய்வதன் மூலம்தான் ஒரு மனிதன் மதிக்க முடியாத, பெருமதிப்புமிக்க பயனுள்ள வாழ்க்கையை அவனால் வாழ முடியும் என்ற உன்னத தத்துவத்தைவீரம் விளைந்ததுநாவல் வெளிப்படுத்துகிறது. மேலும், 1915 ஆம் ஆண்டு முதல் 1931 ஆம் ஆண்டுவரை ஆஸ்த்றோவஸ்கியும், அவரது தோழர்களும் நடத்திய வீரம் செறிந்த போராட்டங்களையும், அவர்கள் செய்த தியாகங்களையும் இந்த நாவல் சித்தரிக்கிறது.

                ‘வீரம் விளைந்ததுநாவலின் முதலாவது வாசகர், உலகத்து முற்போக்கு இலக்கியத்தின் முன்னோடியும், உலகப் பாட்டாளி வர்க்கத்தின் போர்ப்பிரகடனமாக அமைந்துள்ளதாய்நாவலின் ஆசிரியருமான மார்க்ஸிம் கார்க்கி ஆவார். மேலும், இந்த நாவலை எழுதிய ஆஸ்த்றோவஸ்கியைப் பெரிதும் புகழ்ந்து பாராட்டியுள்ளார் மார்க்ஸிம் கார்க்கி.

                ‘வீரம் விளைந்ததுநாவல் 1934 ஆம் ஆண்டு முதன் முதலாக வெளியிடப்பட்டது. உலகெங்குமுள்ள நாற்பத்து எட்டு மொழிகளில் இந்நாவல் மொழிபெயர்க்கப்பட்டு உள்ளது. சோவியத் நாட்டில் 495 பதிப்புகள் வெளிவந்தது.

                சோவியத் யூனியனில் இளைஞர்களுக்கானகம்ஸமொல்ஸ்க்காயா பிராவ்தாஎன்ற தினசரி இதழ் மூலம்பொதுக் கருத்து மன்றம்ஒரு கருத்துக் கணிப்பை நடத்தியது. “செவ்வாய்க் கிரகத்திற்குச் செல்லும் விண்வெளி விமானிகளாகிய நீங்கள் உங்களுடன் எதை எடுத்துச் செல்வீர்கள்? என்ற கேள்வி கேட்டிருந்தது. இந்தக் கருத்துக் கணிப்பில் கலந்து கொண்டவர்களில் அதிகப் பெரும்பான்மையினர்வீரம் விளைந்ததுநாவலை எங்களுடன் எடுத்துச் செல்வோம்என்று கூறினர் என்பது வரலாற்றுச் செய்தி!

                இந்த நாவலை எழுதி முடித்ததும் என்னைச் சுற்றியிருந்த இரும்பு வளையமொன்றிலிருந்து விடுபட்ட உணர்வு பெற்றேன். அசைய முடியாமை என்ற துன்பத்தை வென்றேன். மறுபடியும் போர் வீரர்களில் ஒருவனாக மாறிவிட்டேன்என்று ஆஸ்த்றோவஸ்கி கூறியுள்ளார்.

                ஆஸ்த்றோவஸ்கியின் கட்டுரைகள், பேச்சுக்கள், கடிதங்கள் முதலியவை தொகுப்பட்டுவாழ்க்கையைப் போற்றுவோம்என்ற தலைப்பில் 1955 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.

                ‘புயலில் பிறந்தவர்கள்என்ற தமது இரண்டாவது நாவலை 1936 ஆம் ஆண்டு எழுத ஆரம்பித்தார். ஆனால், இந்த நாவலை எழுதி முடிக்கும் முன்பே (22 டிசம்பர் 1936) இறந்துவிட்டார்.

                ‘வீரம் விளைந்ததுநாவல் மூலம் உலகெங்குமுள்ள புரட்சிகர உணர்வுடைய இளைஞர்களது இதயங்களில் என்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார் ஆஸ்த்றோவஸ்கி.

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.