கோழிக்கோடு சாமுத்திரி மன்னனின் கடற்படை தலைவர்களுக்கு வழங்கப்பட்ட பெயர் குஞ்ஞாலி மரைக்காயர். குட்டிமுஹமது அலி-முதலாம் குஞ்ஞாலி மரைக்காயர் (1520-1531), இரண்டாம் குஞ்ஞாலி மரைக்காயர் (1531-1571), பட்டுகுஞ்ஞாலி-மூன்றாம் குஞ்ஞாலி மரைக்காயர்(1571-1595), முஹம்மது அலி-நான்காம் குஞ்ஞாலி மரைக்காயர்(1595-1600)

 15ம் நூற்றாண்டில் தென் இந்தியாவை ஆண்ட விஜய நகரப் பேரரசுவின் அரசர்கள்தான் வாஸ்கோடகாமாவிற்கு சிவப்பு கம்பளம் போட்டு வரவேற்பு செய்தனர். அன்றுதான் இந்தியா வரலாற்றின் கருப்பு நாட்களும், ரத்தம் தோய்ந்த நாட்களும் துவங்கியது. அப்போது கி.பி.1501லிருந்து 1575 வரை தமிழ்நாட்டு முஸ்லிம்களுக்கு வரலாற்றின் கருப்பு பக்கம் என்றே கூறலாம். 1502ல் வாஸ்கோடகாமா தனது கடல் பயணத்தின்போது மேவி என்ற ஒரு முஸ்லிம் கப்பலை இந்தியப் பெருங்கடலில் கண்டார். அதைப் பிடித்து அதிலிருந்த பொருள்களையெல்லாம் தனது கப்பலுக்கு மாற்றிக் கொண்டார். பின்பு அந்த கப்பலில் குடும்பம் குடும்பமாக இருந்த முன்னூறு ஹஜ் பயணிகளையும் கப்பலின் கீழ்த்தளத்தில் அடைத்து வைத்தார். பின் அந்தக் கப்பலுக்குத் தீ வைக்கப்பட்டது. ஆனால் அந்தக் கப்பலிலிருந்த முஸ்லிம் மாலுமிகள் கப்பலையும் பயணிகளையும் காப்பாற்ற மூன்று நாட்கள் கடுமையாகப் போராடினர். அக்கப்பலின் உரிமையாளரும், எகிப்திய சுல்தானின் தூதர் ஜாபர் பெய்கும் அத்தளபதிக்கு தூது அனுப்பி புனித ஹாஜிகளையாவது விட்டுவிடுமாறு தூது அனுப்பினார். ஆனால் கல்நெஞ்சக்காரனான வாஸ்கோடகாமா கப்பலில் உள்ள முஸ்லிம் ஹாஜிகள் அனைவரையும் சாகடிக்கும் வரை விடவில்லை.

 ஆனாலும்; வாஸ்கோடகாமாவின் வெறி தனியவில்லை. அந்த முஸ்லிம் கப்பலை நகரமுடியாமல் செய்து, அதிலிருந்த உயிர்களின் மரண ஓலத்தைக் தனது கப்பலின் அறையில் இருந்த ஒரு துவாரத்தின் மூலம் கண்டு களித்தார் என்று An Etymological Survey fo the Muslim of Sri Lanka என்ற புத்தகத்தில் 43-பக்கம் கூறுகிறது. இந்த கொடூரமான சம்பவம் நடந்ததை ஓ.கே.நம்பியார் என்ற இந்திய வரலாற்றாசிரியரும் தனது Portugese Pirates and Indian Seaman என்ற நூலின் 47-ம் பக்கத்தில் உறுதி செய்கிறார். இறுதியில் அக்கப்பலுக்கு ஜலசமாதி கட்டப்பட்டது. அதன்பின்னர் சுதாகரித்துக்கொண்ட சாமூத்திரிமானவிக்ரமனுடன் குஞ்ஞாலி மரைக்காயர் இணைந்து போர்ச்சுக்கீசியரை எதிர்க்க ஆரம்பித்தனர். அப்போது போர்ச்சுக்கீசிய தளபதி அல்புகர்க்கின் தலைமையில் வந்த ஒரு பயங்கரவாதக் கும்பல் கள்ளிக்கோட்டையில் இருந்த பள்ளிவாசலை இடித்து தரைமட்டமாக்கியது. அதன் பின்னர் வெகுண்ட குஞ்சாலி மரைக்காயர் படைகளைத் திரட்டி 500க்கும் மேற்பட்ட போர்ச்சுக்கீசியர்களை கொன்று குவித்தனர். இறுதியில் போர்ச்சுக்கீசியர் கோவாவில் தஞ்சமடைந்தனர். நயவஞ்சகத்தை தாரக மந்திரமாகக் கொண்ட போர்ச்சுக்கீசியர் நம்ப+திரி ஒருவன் மூலம் ஆளைக் கொல்லும் விஷம் ஒன்றைக் கொடுத்து சாமூதிரி மன்னனைக் கொன்றனர்.

ஆசிய மக்களை ஆசிய மக்களைக் கொண்டே அழிக்க வேண்டும் என்ற தத்துவப்படி 1513ல் அல்புகர்க்குடன் ஒப்பந்தம் செய்து போர்ச்சுக்கீசியருடன் இணக்கம் கொண்டு அடுத்த வரலாறை படைக்க முயன்றனர். இதனால் தன்னந்தனி ஆளாக விடப்பட்டார் குஞ்ஞாலி மரைக்காயர். 1523 ஆம் ஆண்டு 200க்கும் மேற்பட்ட கப்பல்களுடன் போர்ச்சுக்கீசியரை எதிர்த்தார். போர்ச்சுக்கீசியர்கள் கள்ளிக்கோட்டையில் பண்டகசாலையை நிறுவினார்கள். தேவாலயங்களை நிறுவினார்கள். அவர்களை பாதுகாக்க டிசோசா என்ற படைத்தளபதியை நியமித்தான். அவனுக்கு தக்க பதிலடி கொடுக்க எண்ணி குஞ்ஞாலி மரைக்காயர், குட்டி அலியின் தலைமையில் படையை நியமித்தார். குட்டி அலியின் படைக்கும் டிசோசாவின் படைக்கும் அவ்வப்போது தகராறு ஏற்பட்டது. இருபுறமும் ஏராளமான தலைகள் உருண்டது. குட்டி அலியின் படையை தாக்குபிடிக்கமுடியாமல் போர்ச்சுக்கீசியர் கவர்னர் மெனிசிஸ் பெரிய கப்பற்படையை குஞ்ஞாலியின் கப்பற்படை முகாமான பொன்னானி துறைமுகத்தை தாக்க 1525 ஆம் ஆண்டு 26ந்தேதி நாள் குறிக்கப்பட்டு பொன்னானி துறைமுகத்தை தாக்குதல் நடத்தினார்கள். இதற்கு பதிலடி கொடுக்க குஞ்ஞாலியின் படை கள்ளிக்கோட்டையில் உள்ள பண்டகசாலையை தாக்குதல் நடத்தினார்கள். பண்டகசாலை தன்னுடைய வாழ்வை இழந்துகொண்டிருப்பதைக் கண்ட போர்ச்சுக்கீசிய தளபதி மெசினிஸ் மேலும் படைத்தளபதிகளை அனுப்பி ஏழு மாதங்கள் கடுமையாக போராடி இறுதியில் 1525 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 15ம் நாள் குஞ்ஞாலி படைக்கு இரங்கற்பா கவிதை வடித்தனர். இறுதியில் உறுதியான குஞ்ஞாலி படை தோல்வியை தழுவியது.

 தோல்வியடைந்த குஞ்ஞாலி மரைக்காயர் தலைமறைவாகி மீண்டும் படைகளை திரட்டி மூன்று ஆண்டுகள் கழித்து 1528 ஆம் ஆண்டு பர்கூர் என்ற இடத்தில் வந்த போர்ச்சுக்கீசிய கப்பல்களையும், எதிர்த்து வந்த போர்ச்சுக்கீசியர்களையும் கண்ட துண்டமாக வெட்டினார். இதில் போர்ச்சுக்கீசிய மாலுமிகள், படைகள் அனைத்தும் சமாதி ஆகியது. இவ்வெற்றிதான் மரைக்காயரின் மாபெரும் வெற்றி என்கிறார்கள் சரித்திர ஆய்வாளர்கள்.

 இந்த கொலை விழா வெற்றி அடைந்த பின்னர் போர்ச்சுக்கீசியர் எங்கெல்லாம் இந்தியாவை ஆக்கிரமித்துள்ளனர் என தன்னுடைய ஞானத்தால் கண்டு இலங்கையை நோக்கி படையை செலுத்தினார் குஞ்ஞாலி. 1537 ஆம் ஆண்டு எஞ்சியுள்ள கப்பல் படைகளுடன் இலங்கையை நோக்கிச் சென்று போர்ச்சுக்கீசியர்களை கொன்று குவித்தனர். அதில் தப்பித்த போர்ச்சுக்கீசியர் தூத்துக்குடி சென்றனர். குஞ்ஞாலி மேல் உள்ள வெறுப்பில் தூத்துக்குடியில் முத்துக்குளித்த 800க்கும் மேற்பட்ட முஸ்லீம்களை 28.1.1538 ஆம் ஆண்டு கொன்று குவித்தனர். இதனை அறிந்த குஞ்ஞாலி மரைக்காயர் படை தூத்துக்குடி சென்று போர்ச்சுக்கீசியரை கொன்று குவித்தார். அதன் பின்னர் குஞ்ஞாலி மரைக்காயர் ஓய்வு எடுப்பதற்காக இலங்கையில் உள்ள வேதாளையில் தங்கினார். இதனைக் கேள்விப்பட்ட பரங்கியர்கள் 1538 ஆம் ஆண்டு ஜனவரி 30-ந்தேதி டிசோசா படை குஞ்ஞாலி படையை தாக்கியது. இதை எதிர்பார்க்காத மரைக்காயர் படை பெரும் பின்னடைவை சந்தித்தது. இறுதியில் தலைமறைவாகி மீண்டும் கொழும்பில் போரை துவக்கினார். ஆனால் துரதிஷ்டவசமாக பரங்கியரின் குண்டு ஒன்று குஞ்ஞாலி மரைக்காயரின் நெஞ்சை பதம் பார்த்தது. இந்திய நாட்டிற்காக போராடிய வீரன் மண்ணோடு மண்ணானார். இந்திய கடல் எல்லையில் ஏறத்தாழ 35 ஆண்டுகள் போர்ச்சுக்கீசியரின் கண்ணில் விரல் விட்டு ஆட்டிய முதலாம் குஞ்ஞாலி மரைக்காயரின் சகாப்தம் முடிவுக்கு வந்தது.

இரண்டாம் குஞ்ஞாலி மரைக்காயர்

 முதலாம் குஞ்ஞாலி மரைக்காயர் மறைவுக்குப்பின்னர் அவரது சகோதர்கள் அவ்வப்போது போர்ச்சுகீசியருடன் அடுத்தடுத்து போர்கள் செய்தனர். இரண்டாம் குஞ்ஞாலி கண்ணணூர் துறைமுகத்திற்குள் புகுந்து அங்கு நின்று கொண்டிருந்த போர்ச்சுகீசியக் கப்பலைக் தாக்கி கடும்; சேதம் விளைவித்தார். கோவாவிலிருந்து டீலிமா என்பவரின் தலைமையில் வந்த போர்ச்சுக்கீசிய கடற்படையை எதிர்த்து முறியடித்தார். அதன் பின்னர் டிமெல்லோ என்பவரின் தலைமையில் வந்த கப்பற்படையுடன் எதிர்த்துப் போரிட்டனர். இதில் டிமெல்லோ படுகாயமடைந்து தலைமறைவானான். அதன் பின்னர் பொன்னானியில் கோட்டை ஒன்றை இரண்டாம் குஞ்ஞாலி மரைக்காயர் கட்டினார். ஆனால் துரதிருஷ்டவசமாக கோட்டை முடிக்கப்பட்ட சில நாட்களிலேயே இறந்து விட்டார்.
 
மூன்றாம் குஞ்ஞாலி மரைக்காயர்

 அதன் பின்னர் மூன்றாம் குஞ்ஞாலி மரைக்காயர் அக்கோட்டைக்கு அதிபரானார். பொன்னானியிலிருந்து போர்ச்சுக்கீசியருக்கு சொந்தமான பண்டகசாலைகளையும் அவர் தகர்த்து எறிந்தார்;. ஆனால் நயவஞ்சகமாக சாமுத்திரி மன்னர் போர்ச்சுக்கீசியருடன் உறவாட ஆரம்பித்தான். தனித்து விடப்பட்டார் குஞ்ஞாலி மரைக்காயர். தனித்து விடப்பட்டாலும் போர்ச்சுக்கீசியருக்கு சொந்தமான கப்பல்களை கைப்பற்றியும், போர்ச்சுக்கீசிய பண்டகசாலைகளையும் கைப்பற்றினார்.

சாமுத்திரி படைக்குத் தோல்வி

 1592-ஆம் ஆண்டு போர்ச்சுக்கீசியர் கடல் வழியாகவும், தரை மார்க்கமாகவும் பொன்னானிக்கு வந்தனர். மூன்றாம் குஞ்ஞாலி மரைக்காயரின் கோட்டையை முற்றுகையிட்டனர். இதில் போர்ச்சுக்கீசிய படைத்தளபதியின் மூன்று பேர் துப்பாக்கிக்கு பலியானார்கள். அதன் பின்னர்நடைபெற்ற தரைப்போரில் சாமுத்திரியின் படை தோல்வியை சந்தித்தது.

 அதன் பின்னர் இரண்டு மாதங்களுக்கு பின்னர் போர்ச்சுக்கீசியர் இவரது கோட்டையை முற்றுகையிட்டனர். இதனால் கோட்டையில் உணவு, குடிநீர் என தட்டுப்பாடு ஏற்பட்டது. படைவீரர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதனால் கோட்டையில் சமாதானக்கொடியை ஏற்றினார் குஞ்ஞாலி மரைக்காயர். சமாதானம் பேச அழைத்து இறுதியாக வெளியே வந்தபோது போர்ச்சுக்கீசியர் சராமாரியாக துப்பாக்கி ச+டு நடத்தினார்கள். அதனால் மீண்டும் கோட்டைக்குள்ளே சென்றார். அதன் பின்னர் சாமுத்திரி மன்னன் சமாதானம் பேச இவரை அழைத்தான். அவனது நயவஞ்சகபேச்சை நம்பி கோட்டைக்கு வெளியே வந்த அவரை சாமுத்திரி மன்னன் படைகள் ச+ழ்ந்து கொண்டன. அதன் பின்னர் சிறை பிடிக்கப்பட்டு கோவாவுக்கு கொண்டு செல்லப்பட்டு சிரச் சேதம் செய்யப்பட்டு மாண்டார்.

- வைகை அனிஷ்

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.