தமிழி கல்வெட்டுகள் கி.மு. 5 ஆம் நூற்றாண்டில் இருந்து கி.பி. 3ஆம் நூற்றாண்டு (கி.பி. 250) வரை பழந்தமிழகத்தில் பொறிக்கப்பட்டுள்ளன. அக்கால கட்டத்தில் வெட்டப்பட்ட 40 கல்வெட்டு இடங்களையும் அதில் கிடைத்த 99 கல்வெட்டுப் பொறிப்புகளையும் குறித்த தரவுகள் இங்கு சுருக்கமாகப் பட்டியலிடப்பட்டுள்ளன. காலம் நூற்றாண்டில் சுமாராகத் தரப்பட்டுள்ளது. கல்வெட்டுகள் மாவட்டம் வாரியாகவும், மாவட்டங்கள் அகரவரிசை வாரியாகவும் தரப்பட்டுள்ளன. மேலும் பழந்தமிழகமாக இருந்த ஆந்திர, கேரள மாநில இடங்களும் இங்கு தரப்பட்டுள்ளன.
மாவட்டம் ஊர்ப்பெயர்-எண்ணிக்கை காலம்
ஈரோடு அரச்சலூர் - 3 கி.பி. 1
ஈரோடு ஈரெட்டிமலை – 2 கி.பி. 2
கரூர் ஐவர்மலை – 1* கி.மு. 2
கரூர் புகளூர் (ஆறுநாட்டர்மலை) - 12 கி.மு. 3-1
சிவகங்கை திருமலை – 1 கி.மு. 2
சிவகங்கை திருமலை – 1 கி.மு. 1
சிவகங்கை குன்னக்குடி – 2 கி.பி. 2
சிவகங்கை பிள்ளையார் பட்டி – 1* கி.மு. 1
சேலம் அம்மன்கோவில்பட்டி – 1 கி.பி. 2
திண்டுக்கல் மேட்டுப்பட்டி – 10 கி.மு. 3-2
திண்டுக்கல் ஐவர்மலை (அயிரமலை) - 1 கி.மு. 3
திருச்சி மலைக்கோட்டை – 1 (4-3) கி.பி. 2
திருநெல்வேலி அய்யனார்குளம் – 1+1 கி.மு. 1
திருநெல்வேலி மறுகால்தலை – 1 கி.மு. 2
திருவண்ணாமலை மாமண்டூர் – 1 கி.மு. 2
புதுக்கோட்டை குடுமியான்மலை – 1 கி.மு. 3
புதுக்கோட்டை சித்தண்ணவாசல் – 1 கி.மு. 2
மதுரை அரிட்டாப்பட்டி – 2 கி.மு. 3
மதுரை அழகர்மலை – 12 கி.மு. 3-2
மதுரை ஆனைமலை – 1 கி.பி. 1
மதுரை கீழவளவு – 1 கி.மு. 3
மதுரை கொங்கர் புளிகுளம் – 3 கி.மு. 3-2
மதுரை கருங்காலக்குடி – 1 கி.மு. 2
மதுரை திருப்பரங்குன்றம் – 2 கி.மு. 3-1
மதுரை திருப்பரங்குன்றம் – 1 கி.மு. 1
மதுரை திருவாதவூர் – 2 கி.மு. 3-2
மதுரை மாங்குளம் – 6 கி.மு. 5-3
மதுரை முதலைகுளம் – 1 கி.மு. 3-2
மதுரை முத்துப்பட்டி – 1 கி.மு. 3
மதுரை முத்துப்பட்டி – 1+1 கி.மு. 3-1
மதுரை வரிச்சியூர் – 3 கி.மு. 3-2
மதுரை விக்கிரமங்கலம் – 6 கி.மு. 3-2
விழுப்புரம் சம்பை – 1 கி.மு. 3
விழுப்புரம் தொண்டூர் – 1 கி.மு. 1
விழுப்புரம் நெகனூர்பட்டி - 1 கி.மு. 2-1
ஆந்திரா நெல்லூர் (மாலகொண்ட) – 1* கி.மு. 3
கேரளா வயநாடு (எடக்கல்) – 1+3 கி.பி. 2
மொத்தம்-37 கல்வெட்டுகள் - 94 காலம்: கி.மு.500-கி.பி.250
சான்று: தமிழ் நாட்டில் சமணம், அனந்தபுரம் கோ.கிருட்டினமூர்த்தி, செம்மொழித்தமிழாய்வு மத்திய நிறுவனம், 2023, பக்: 79-331.
இந்தச் சான்று நூலின் 80-81 ஆம் பக்கத்தில் உள்ள மேலே உள்ள அட்டவனையில் இல்லாத, * இப்புள்ளி உள்ள 3 இடங்கள் நூலின் உள்ளிருந்து எடுத்துச் சேர்க்கப்பட்டுள்ளன. 35, 36 ஆகிய விழுப்புரம் மாவட்ட இடங்கள் கி.பி. 250க்கு பிற்பட்டவை என்பதால் அவை சேர்க்கப்படவில்லை. அதுபோன்றே திருச்சி மலைக்கோட்டையில் இருந்த 3 கல்வெட்டுகள் அதே காரணத்துக்காக நீக்கப்பட்டுள்ளன. அதே சமயம் கேரளாவில் உள்ள வயநாட்டு கல்வெட்டுகள் 3 சேர்க்கப்பட்டுள்ளன. ஆகவே இந்த அட்டவணையில் தரப்பட்டுள்ள 37 இடங்களில் இருந்த 94 கல்வெட்டுப் பொறிப்புகளும் கி.மு. 5ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 250 வரையான காலகட்டத்துக்குரியவை. தேனி ஆண்டிப்பட்டியில் உள்ள புலிமான் கோம்பையில் கிடைத்த 3 நடுகற்களின் காலம் கி.மு. 3 முதல் கி.மு. 4 ஆம் நூற்றாண்டு. அங்குள்ள தாதப்பட்டியில் கிடைத்த நெடுநிலைக்கல் கி.மு. 4ஆம் நூற்றாண்டு (1). புதுக்கோட்டை பொற்பனைக் கோட்டையில் கிடைத்த நடுகல் காலம் கி.பி. முதல் நூற்றாண்டு. இவற்றைச் சேர்த்தால் 40 இடங்களும் 99 கல்வெட்டுப் பொறிப்புகளும் ஆகின்றன.
பழந்தமிழ்க்கல்வெட்டுகள் - தமிழ்அறிவர்கள்: பழந்தமிழ்க் கல்வெட்டுப் பொறிப்புகள் அனைத்தும் ஆசிவகர் போன்ற தமிழ் அறிவர்களுக்காக வெட்டப்பட்டவை. இவை சமணர்களுக்காக வெட்டப்படவில்லை. சங்கப் பாடல்கள் துறவிகள் குகைத்தளத்தில் உறைவிடம் கொண்டிருந்தனர் என்பதைக் கூறுகின்றன. ஆனால் அவை கூறும் துறவிகள் குறித்தக் குறிப்புகள் அவர்கள் சமணத்துறவிகள் அல்ல என்பதையும் அவர்கள் தமிழ் அறிவர்கள் என்பதையும் உறுதி செய்கின்றன. இந்தத் தமிழ் அறிவர்களில் பலர் உள்ளூர் மக்களாக இருந்துள்ளனர் என்பதை பாறைக்கல்வெட்டுகளும் அவை இருந்த சூழ்நிலைகளும் உறுதி செய்கின்றன. இந்தியா முழுவதும் சமணர்களுக்கு என எங்குமே கற்படுக்கைகள் வெட்டப்படவில்லை. வட இந்தியாவில் மௌரிய அரசன் அசோகன் ஆசிவகத் துறவிகளுக்கு கற்படுக்கைகள் அமைத்துக் கொடுத்துள்ளான். ஆனால் அவன் சமணர்களுக்கு என கற்படுக்கைகள் அமைத்துத் தரவில்லை அவன் காலத்திலும் அதன்பின்னரும் வெட்டப்பட்ட கற்படுக்கைகள் அனைத்தும் ஆசிவகத் துறவிகளுக்கு என வெட்டப்பட்டவை. பேராசிரியர் தி.வி. மகாலிங்கம் தமிழகப் கற்படுக்கைகள் ஆசிவகர்கட்கு உரியன என ஆய்வு செய்து உறுதி செய்துள்ளார். கி.மு. 6ஆம் நூற்றாண்டிலிருந்து கி.பி. 2ஆம் நூற்றாண்டு வரையான சங்ககாலப் புலவர்களில் பெரும்பாலோர் ஆசிவக சமயத்தைச் சேர்ந்தவர்கள் என்பதாலும், அன்று சமண பௌத்த மதங்களோ, வைதீக மதமோ தமிழ்நாட்டில் செல்வாக்கு பெற்றிருக்கவில்லை என்பதாலும் சங்ககாலக் கற்படுக்கைகள் அனைத்தும் ஆசிவகர்களுக்கு உரியவை. அவை சமணர்களுக்கானவை அல்ல (2).
பெரும்பாலான கல்வெட்டுப் பொறிப்புகள் யார் கற்படுக்கை அமைத்துக் கொடுத்தனர் என்பதைத்தான் கூறுகின்றன; யாருக்கு அமைத்துக் கொடுத்தனர் என்பதை அதிகம் கூறவில்லை. கூறப்பட்ட ஒருசில கல்வெட்டுகளில் உள்ள செங்காயபன், அமணன், காயபன், வெண்காசிபன், சாத்தன், கணிநாதன், கணிநாகன், அந்துவன், நெடுஞ்சாத்தான், கணிநந்தாசிரியன், இளங்காயபன் போன்றவை தமிழ் அறிவர், ஆசிவகர் போன்றவர்களைக் குறிக்கும் சொற்கள். ஆகவே பழந்தமிழ்க் கல்வெட்டுகளில் பெரும்பாலானவை தமிழ் அறிவர், ஆசிவகர் போன்றவர்களுக்கு கற்படுக்கைகள் அமைத்துக் கொடுத்ததற்கான கல்வெட்டுகள். சில குளங்கள் அமைத்தல் போன்ற பிறவற்றுக்கான கல்வெட்டுகள். ஆகவே மேற்கண்ட தரவுகளின்படி அவை சமணத் துறவிகளுக்கான கல்வெட்டுகள் அல்ல.
கல்வெட்டுகளின் கால வடிவ வேறுபாடுகள்: பொதுவாகப் பழந்தமிழகக் கல்வெட்டுகள் மூன்று நூற்றாண்டுகளும் அதற்கு மேலும் பிற்காலத்ததாக கணிக்கப்பட்டுள்ளன. சங்ககால வேந்தர் ஆண்டுகளும் மூன்று முதல் ஐந்து நூற்றாண்டுகள்வரை பிற்காலத்ததாக கணிக்கப்பட்டுள்ளன. சான்றாக சேரன் செங்குட்டுவன் காலம் கி.பி. 2ஆம் நூற்றாண்டு எனக் கணிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவன் காலம் கி.மு. 3ஆம் நூற்றாண்டு என ஆசிரியரது ‘பழந்தமிழ்ச் சமுதாயமும் வரலாறும் என்ற நூல் உறுதி செய்துள்ளது. ஆகவே 3 முதல் 4 நூற்றாண்டுகள் வரை காலம் பிற்காலத்ததாகக் கணிக்கப்பட்டுள்ளது. இதுதான் கல்வெட்டுகளிலும் நடந்துள்ளது. சான்றாக புகளூர் கல்வெட்டு மூன்று பொறையர் குல சேர வேந்தர்களைக் குறிப்பிடும் கல்வெட்டு. ஆனால் இதன் காலம் கி.பி. 2ஆம் நூற்றாண்டு என கணிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதன் காலம் கி.மு. 3ஆம் நூற்றாண்டு. அதுபோன்றே சம்பை கல்வெட்டின் காலம் கி.பி. முதல் நூற்றாண்டு எனப்பட்டது. ஆனால் அதன் காலம் கி.மு. 3ஆம் நூற்றாண்டு (3). ஆகவே உண்மையான கல்வெட்டின் காலத்திற்கும் அதன் எழுத்தமைதி உள்ளடக்கம் போன்றனவற்றைக் கொண்டு கணிக்கப்பட்ட காலம் என்பதற்கும் இடையே 3 முதல் 4 நூற்றாண்டுகள் இடைவெளி உள்ளன. ஆகவே கல்வெட்டுகளின் காலம் என்பதை மறுபரிசீலனை செய்ய வேண்டிய தேவை உள்ளது.
கல்வெட்டுகளின் காலம் என்பது அதன் எழுத்தமைதி, புள்ளி இடம்பெறுதல், வட்டெழுத்து மாற்றம், அதன் உள்ளடக்கம், இன்னபிற தரவுகள் முதலிய பலவற்றைக் கொண்டும் கணிக்கப்பட்ட போதும் இந்த முரண்கள் இருந்து வந்துள்ளன. ஆகவே கல்வெட்டுகளின் காலம் குறித்த மீளாய்வு தேவை. இங்கு தரப்பட்டுள்ள கல்வெட்டுப்பொறிப்புகள் குறித்தத் தரவுகள் அனைத்தும் முன்பு சான்று நூலாகத் தரப்பட்ட கோ.கிருட்டினமூர்த்தி, அவர்களின் ‘தமிழ்நாட்டில் சமணம்’ என்ற நூலை அடிப்படையாகக் கொண்டு தரப்பட்டுள்ளன. அதன் காலங்கள், நூலின் உள்ளே தரப்பட்ட பல்வேறு தரவுகளைக் கொண்டும் இன்ன பிறவற்றைக் கொண்டும் உரிய மாற்றம் செய்யப்பட்டுத் தரப்பட்டுள்ளன. ஆனால் பொதுவாகக் கல்வெட்டுகளின் காலம் பிற்காலத்ததாகக் கணிக்கப்பட்டுள்ளன என்பதன் அடிப்படையில் பெரும்பாலான கல்வெட்டுகளின் காலத்தை ஓரிரு நூற்றாண்டு முற்காலத்ததாகக் கணித்துக் கூறப்பட்டுள்ளது. மேலும் பல கல்வெட்டுகளுக்கு நூலின் உள்ளே தரப்பட்டுள்ள பல்வேறு காலங்களை கணக்கில் கொண்டு, அதில் பொருத்தமாக உள்ள காலம் தரப்பட்டுள்ளது.
புள்ளி இடுதல் என்பது சம்பை கல்வெட்டிலேயே தொடங்கி விடுவதாகக் கருதப்படுகிறது. விழுப்புரம் நெகனூர்பட்டி கல்வெட்டின் காலம் பொதுவாக கி.பி. 3ஆம் 4ஆம் நூற்றாண்டு எனக் கருதப்பட்ட போதும் அதில் புள்ளி இடுதல் இருப்பதால் அதன் காலம் கி.மு. 2ஆம் 1ஆம் நூற்றாண்டு என ஆய்வாளர் சு. இராசவேலு கருதுகிறார் (4). ஆகவே அக்காலமே பொருத்தமான காலம் எனக்கருதி இங்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. அது போன்றே ஈரோடு மாவட்ட ஈரெட்டிமலை கல்வெட்டுகளில் உள்ள மெய்யெழுத்துகள் புள்ளியைக் கொண்டுள்ளன. அவை புளிமான் கோம்பை நடுகற்களுடன் ஒப்புமை கொண்டுள்ளன. அவை தமிழி எழுத்து வட்டெழுத்தாக மாறும் நிலையை உணர்த்தும் கல்வெட்டுகளாக இருக்கின்றன. ஆகவே இவைகளைக் கொண்டு அதன் காலத்தை கி.பி. 2ஆம் நூற்றாண்டு எனக் கணிக்கப்பட்டது. மேலும் வட்டெழுத்து என்பது சங்கம் மருவிய காலத்திற்குப் (கி.பி. 250) பிறகு வந்ததாகக் கருதப்படுகிறது. ஆனால் கி.பி. முதல் நூற்றாண்டுக்கு முன்பிருந்தே பழந்தமிழகத்தில் வட்டெழுத்து என்பது ஓலைகளில் எழுதப் பயன்படுத்தப்படத் தொடங்கி கி.பி. 250க்கு முன்பே அது முழுமையான வட்டேழுத்து வடிவத்தைப் பெற்று ஓலைகளில் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. அதன்பின் கி.பி. முதல் நூற்றாண்டில் இருந்து இந்த வட்டெழுத்து என்பது ஒரு சில கல்வெட்டுகளிலும் ஆங்காங்கு பயன்பாட்டுக்கு வந்துள்ளது.
அரச்சலூர் இசைக்கல்வெட்டு சிலப்பதிகாரக் காலகட்டத்தைச் சேர்ந்தது என்பதால் அதன் காலம் கி.பி. 2ஆம் நூற்றாண்டு என புலவர் இராசு கருதுகிறார். ஆனால் அதனை சிலப்பதிகாரத்திற்கு முற்பட்டது எனக் கொண்டு அதன் காலம் கி.பி. முதல் நூற்றாண்டு எனக் கருதலாம். தொல்லியல் ஆய்வாளர் சு. இராசவேல் அவர்களும் அதன் காலம் கி.பி. முதல் நூற்றாண்டு எனக் கணித்துள்ளார். அதில் உள்ள மகரம் னகரம் முதலிய எழுத்துகள் வட்டெழுத்தாக அமைந்து வட்டெழுத்தின் தொடக்கத்தைத் தெரிவிக்கின்றன. ஆகவே கி.பி. முதல் நூற்றாண்டில் இருந்தே வட்டெழுத்துகள் கல்வெட்டில் பயன்படுத்தப்பட்டுள்ளன எனலாம். தமிழி எழுத்து வட்டெழுத்துகளாக மாறும் நிலைமையை ஈரெட்டிமலை கல்வெட்டு நமக்குக் காட்டுகிறது. அதன் காலம் கி.பி. 2ஆம் 3ஆம் நூற்றாண்டு (கி.பி. 250க்குள்). ஆகவே வட்டெழுத்து முறை கி.பி. 250க்கு முன்பே தமிழ் மக்களால் ஓலைகளை எழுதுவதில் முழுமையாக பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. ஓலைகளில் முழுமையாக பயன்படுத்தப் பட்டு வந்த, அந்த வட்டெழுத்து முறைதான் களப்பிரர் பல்லவர் காலத்திலும், அதன்பின்னர் தமிழரசர் காலத்திலும் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டது.
பழந்தமிழ்த் துறவிகள்: பழந்தமிழகத்தில் பொருள்முதல்வாத மெய்யியல் அறிவர்களும், ஆசிவகர்களும் துறவு மேற்கொண்டிருந்தனர். அவா அல்லது ஆசை தான் துன்பங்களுக்குக் காரணம் என்பதால் அதிலிருந்து விடுதலை பெற வேண்டும் என்ற நோக்கத்தைக் கொண்டவர்களாகவும் சமூகத்துக்கும் மக்களுக்கும் உதவ வேண்டும் என்ற பொதுநல நோக்கம் கொண்டவர்களாகவும் இருந்ததன் காரணமாகவே, அவர்கள் துறவை மேற்கொண்டனர். அவர்களில் பலர் வானியல், கணிதம், இயற்கை அறிவியல், இயற்கை மருத்துவம், ஊழியல் போன்ற பலவற்றில் ஆர்வம் கொண்டவர்களாகவும், அவற்றை ஆய்வு செய்பவர்களாகவும் இருந்தனர். ஆகவே அவர்களது துறவு என்பது வீடுபேறு அடைவதை நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை. இந்த உலகம் ஊழி ஊழிக் காலமாய் இருந்து கொண்டிருப்பதால் இதனைப் படைப்பதற்கு யாரும் தேவைப்படவில்லை என்ற கருத்தைக் கொண்டவர்களாகவும், கடவுள் குறித்தோ வீடுபேறு குறித்தோ கவலைப்படாதவர்களாகவும் அவர்கள் இருந்தனர். ஆகவே அவர்கள் வீடுபேறு அடைவதற்கு என துறவு மேற்கொள்ளவில்லை. அவர்கள் ஆசையிலிருந்து விடுபடவும், பொது மக்களுக்கு உதவும் நோக்கத்திலும் தான் துறவு மேற்கொண்டனர். அந்தத் துறவிகளுக்குத் தான் குகைத்தளத்தில் படுக்கைகள் வெட்டப்பட்டன. அந்தத் துறவிகளில் பலர் உள்ளூர் மக்களாகவும் இருந்தனர்.
அவ்வாறு படுக்கைகளை வெட்டியவர்கள் தான் கல்வெட்டுப் பொறிப்புகளையும் பொறித்தனர். பெரும்பாலும் ஆசிவகத் துறவிகளுக்கே அதிக அளவில் கற்படுக்கைகள் வெட்டப்பட்டன. தமிழ்நாட்டுக் குகைத் தளத்துப் படுக்கைகளிலும் படுக்கைப் பகுதிக்கு அருகிலும் பலவகைக் கட்டங்கள், குறியீட்டு வடிவங்கள், குழிகள், உரல் அமைப்புகள் முதலியன இருப்பது சிறப்புக்குரியதாகும். ஒருசில குகைத்தளப் பகுதிகளில் சிந்துவெளிக் குறியீடுகளோடு ஒப்புமை கொண்ட குறியீடுகளும் உள்ளன. இந்தப் பல்வேறு அமைப்புகள், குறியீடுகள் முதலியன வானவியல் காலநிலை, பருவ மாற்றம், விண்மீன்களின் அமைப்பு மாற்றம் ஆகியன குறித்துத் துறவிகள் அறிந்து கொள்வதற்கும், அறிந்ததைத் தேவையான போது, பொதுமக்களுக்குத் தெரிவிக்கவும் பயன்பட்டன. மேலும் இவை இயற்கையை அறிவதற்கும் ஆய்வு செய்வதற்கும், கணித அறிவிற்கும், ஊழியலுக்கும், மாந்தரீகம், தாந்தரீகம் போன்றவற்றிற்கும் பயன்பட்டன எனலாம். அடுத்ததாக தமிழர் மரபு மருத்துவம், குகைத்தளத்தில் வளர்ந்து விரிந்து பரவியது எனலாம். அங்கிருந்த பலவகை பெரிய சிறிய குழிகள், உரல் அமைப்புகள் முதலியன மருந்துகள் தயாரிக்கவும் அவற்றைச் சேமிக்கவும் மருந்துக்கான விதைகள், இலைதலைகள், இன்னபிற பொருட்கள் ஆகியனவற்றைச் சேமிக்கவும் பயன்படுத்தப்பட்டன. தாவரச்சாருகள் தயாரிக்கவும், அதிக அளவான மருந்துகள் தயாரிக்கவும் பல்வேறு உரல்வகை அமைப்புகள் பயன்பட்டுள்ளன. இவர்களின் மருத்துவம் சார்ந்த அனுபவங்கள், ஆய்வு முடிவுகள், நோய்களுக்கான தீர்வுகள் போன்றனவற்றை அடிப்படையாகக் கொண்டு தமிழ் மருத்துவ நூல்கள் பல உருவாகின. இவற்றை அடிப்படையாகக் கொண்டே தமிழ்ப் பாரம்பரிய மருத்துவமும், பின் சித்த மருத்துவமும் வளர்ச்சி அடைந்தன (5).
சங்கம் மருவிய காலக் கல்வெட்டுப் பொறிப்புகள்:
ஈரோடு அரச்சலூர் - 3 கி.பி. 1
ஈரோடு ஈரெட்டிமலை – 2 கி.பி. 2
சிவகங்கை குன்னக்குடி – 2 கி.பி. 1
சேலம் அம்மன்கோவில்பட்டி – 1 கி.பி. 2
திருச்சி மலைக்கோட்டை – 1 கி.பி. 2
மதுரை ஆனைமலை – 1 கி.பி. 1
கேரளா வயநாடு (எடக்கல்) – 4 கி.பி. 2
பொற்பனைக்கோட்டை நடுகல் - 1 கி.பி. 1
மொத்தம் 8 இடங்கள், 15 கல்வெட்டுப்பொறிப்புகள்.
அரச்சலூர் இசைக்கல்வெட்டு (கி.பி. முதல் நூற்றாண்டு):
ஈரோடு காங்கயம் நெடுஞ்சாலையில் ஈரோட்டிலிருந்து 20 கி.மீ. தொலைவில் இருக்கும் அரச்சலூரில் உள்ள நாகமலையில், இயற்கையாக அமைந்த குகைத்தளம் இருக்கும் குன்று ஆண்டிப்பாறை எனப்படுகிறது. இந்த ஆண்டிப்பாறை குகைத்தளத்தில் நான்கு படுக்கைகளும் மூன்று கல்வெட்டுகளும் இருக்கின்றன. அரச்சலூரில் இருக்கும் இந்தக் கல்வெட்டுகள்தான் இந்தியாவிலேயே மிகப்பழமையான இசை குறித்த கல்வெட்டுகள். இவற்றின் காலம் கி.பி. முதல் நூற்றாண்டு. அதில் உள்ள மகரம் னகரம் முதலிய எழுத்துகள் வட்டெழுத்தாக அமைந்து வட்டெழுத்தின் தொடக்கத்தைத் தெரிவிக்கின்றன. ஆகவே ஓலையில் எழுதப் பயன்படுத்தப்பட்ட வட்டெழுத்துகளை கி.பி. முதல் நூற்றாண்டில் இருந்தே கல்வெட்டுகளில் பொறிக்கும் வழக்கம் தொடங்கி விட்டது என்பதை அரச்சலூர் இசைக் கல்வெட்டு உறுதி செய்கிறது.
அரச்சலூர் மலையின் வடக்குச்சரிவில் ஆண்டிப்பாறையின் குகைத்தளத்தில் மேற்கு நோக்கி நான்கு படுக்கைகள் உள்ளன. முதல் படுக்கையின் விளிம்பில் ஒரு கல்வெட்டும், அடுத்த இரு படுக்கைகளின் அருகில் இரு கல்வெட்டுகளும் உள்ளன. அங்குள்ள இசை சார்ந்த மூன்று கல்வெட்டுகளில் முதல் கல்வெட்டு இசை குறித்தப் பாடத்தைக் கொண்டுள்ளது.
முதல் கல்வெட்டு:
முதல் கல்வெட்டில் ஐந்து வரிசையில், ஐந்து எழுத்துகள் ஒரே வகையில் அமையுமாறு எழுதப்பட்டுள்ளன. இந்த எழுத்துகள் எவ்வாறு கல்வெட்டில் உள்ளன என்பது தற்கால எழுத்தோடு சேர்த்துக் கீழே தரப்பட்டுள்ளது.
கல்வெட்டில் இவ்வாறு உள்ளது.
அதாவது ஐந்து எழுத்துகள், ஐந்து வரிசையில் இடமிருந்து வலமாகவும், மேலிருந்து கீழாகவும் ஒரே வகையாக அமையுமாறு இக்கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது. இதன் அருகில் உள்ள அடுத்த கல்வெட்டும் இசைப் பாடத்தை கொண்ட கல்வெட்டு தான். ஆனால் அக்கல்வெட்டில் எழுத்துகள் சில இல்லை. அவை அழிந்திருக்கலாம். ஆனால் இதிலும் ஐந்து எழுத்துகள், ஐந்து வரிசையில் முதல் கல்வெட்டு போலவே பொறிக்கப்பட்டுள்ளது. ஆனால் எழுத்துகள் மட்டும் மாறுபடுகின்றன.
இரண்டாவதில் உள்ள ஐந்து எழுத்துகள், கை த தை த கை ஆகியன.
இந்த ஐந்து எழுத்துக்களே ஐந்து வரிசையில் இடமிருந்து வலமாகவும், மேலிருந்து கீழாகவும் ஒரே வகையாக அமையுமாறு முந்தைய கல்வெட்டு போலவே பொறிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதில் பல எழுத்துகள் இல்லாது போயுள்ளன.
மூன்றாவது கல்வெட்டும் அதன் எழுத்தும்:
மூன்றாவது கல்வெட்டு, “எழுத்தும் புணருத்தான் மணிய வண்ணக்கன் சாத்தன் “என்ற எழுத்துப் பொறிப்பைக்கொண்டதாக உள்ளது.
மேலே இருப்பது அரச்சலூரில் உள்ள மூன்றாவது கல்வெட்டின் எழுத்து (வட்டெழுத்து) வடிவம். கீழே இருப்பது அதன் தமிழி வடிவம்.
வட்டெழுத்தின் தொடக்க நிலை:
இக்கல்வெட்டின் எழுத்துகள் தமிழி (பிராமி) எழுத்திலிருந்து வட்டெழுத்து தோன்றுவதற்கு அடிப்படையான தொடக்கமாகக் கருதப்படுகிறது. பெரும்பாலும் நேர்கோடுகளால் அமைந்த தமிழி எழுத்தின் திருந்திய வடிவம் சற்றே மாறுபட்டு வளைவுகள் நிரம்பப்பெற்றதாக உருக்கொண்ட நிலையை இங்கு காண்கிறோம். மேலும், தமிழி எழுத்துகள் போலன்றி, எழுத்துகள் தலைக்கோடு பெற்றுள்ளதைக் காணலாம்.
சான்று: https://groups.google.com/g/mintamil/c/99sCuesuLdU
இந்த மூன்று கல்வெட்டுகளும் இசைக்குரிய ஓசைக்கான எழுத்துக்களைச் சேர்த்து, அதனை ஓசையோடு புணரச் செய்த முயற்சியைத் தெரிவிக்கிறது. இசைக்கும் தாளத்திற்கும் ஏற்ப எழுத்துக்களைப் புணர்ப்பது என்பது சிலப்பதிகாரத்திற்கு முன்பிருந்தே பழந்தமிழகத்தில் இருந்துவரும் பண்பு. அதனை சிலப்பதிகார அரங்கேற்ற காதையில் குழலோன் அமைதி கூறுமிடத்து இளங்கோவடிகள் கூறியுள்ளார். ஆதலால் இசைக்கும் தாளத்திற்கும் ஏற்ப எழுத்துக்களைப் புணர்ப்பது குறித்து ஆய்வு செய்து எடுத்துரைத்த பதிவு என இந்த இசைக் கல்வெட்டுகளைக் கருதலாம். இங்கு படுக்கைக்கு அருகே சூலம் போன்ற குறி பொறிக்கப்பட்டுள்ளது. சூலக்குறி 2500 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழகப் பாறை ஓவியங்களில் காணப் படுவதால், சூலக்குறி என்பது தமிழர்களின் மரபுக்குறி எனலாம். அடுத்த ஒரு கற்பாறையானது, இணையர்களின் நாட்டியக்காட்சியைக் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது. அதில் எழுத்துப் பொறிப்புகள் இல்லை.
இணையர்களின் நாட்டியக் காட்சி:
2000 ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் சாத்திரிய இசை, நாட்டியம் ஆகியவற்றில் மிகச் சிறந்தவர்களாக இருந்துள்ளனர் என்பதை அரச்சலூரில் உள்ள இந்த மூன்று இசை சார்ந்த கல்வெட்டுகளும், இணையர்களின் நாட்டியக் காட்சியைக் கொண்ட கற்பாறையும் உறுதி செய்கின்றன (6).
ஈரெட்டி மலை (கி.பி. 2ஆம் நூற்றாண்டு):
ஈரோடு மாவட்டம் பவானி வட்டம் அந்தியூரிலிருந்து மைசூர் செல்லும் நெடுஞ்சாலையில் இருக்கும் ஈரெட்டி மலையில் ஒரு கல்வெட்டும், அங்கிருந்து 4 கி.மீ தூரத்தில் உள்ள தாமரக்கரை என்ற ஊரில் ஒரு கல்வெட்டும் உள்ளது. தாமரைக்கரையில் உள்ள கல்வெட்டில்
‘....ன் கருமதச் சாத்தன் கல்’
என பொறிக்கப்பட்டுள்ளது. இக்கல்லின் மேல்பகுதி உடைந்துள்ளது. அதன் கீழ்ப்பகுதியில் மூன்று வரியில் இக்கல்வெட்டுப்பொறிப்பு உள்ளது. கருமதச் சாத்தன் என்பதில் உள்ள ‘கருமத’ என்பதற்கு வருங்காலத்தைக் கணித்துக் கூறுபவன் எனப் பொருள் கூறப்படுகிறது. சாத்தன் என்ற சொல்லும் வருங்காலத்தைக் கணிப்பது என்பதும் ஆசிவகம் சார்ந்தவை எனலாம். அதேசமயம் இதனை சாத்தன் என்ற வீரனுக்கான நடுகல் எனவும் கூறலாம்.
ஈரெட்டி மலையில் உள்ள இன்னொரு கல்வெட்டில்
‘துற கய்யுள்ளாரு கல்’
என இரு வரியில் பொறிக்கப்பட்டுள்ளது. இக்கல்வெட்டில் உள்ள துற > தொற என்பதற்கு 'அதிக' என்னும் பொருளை செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகர முதலி தருகிறது. அதே போல் கை என்பதற்கு ஆற்றல் என்ற பொருளையும் தருகிறது. இப்பொருளை பொருத்திப் பார்க்கிறபோது "துற கய்யுள் / ளாரு கல்" என்பதற்கு அதிக ஆற்றல் உள்ளவர் நினைவில் நட்ட கல் எனப் பொருள் கொள்ளலாம். அதிக ஆற்றல் என்பது படை, அதிகார ஆற்றலைக் குறிப்பதால் இது படை சார்ந்தவர் பொருட்டு நட்ட வீரக்கல்லே என்பது உறுதியாகிறது.
ஈரெட்டி மலை கல்வெட்டு:
சான்று: ஈரெட்டிமலை கல்வெட்டு – இணையதளம்.
தாமரைக்கரை கல்வெட்டு எழுத்துகள்: கருமதச் சாத்தன் கல்
சான்று: தமிழிணையம் – தமிழர் தகவலாற்றுப்படை
https://www.tagavalaatruppadai.in/inscriptions-detail?id=jZY9lup2kZl6TuXGlZQdjZt6kJty
புலிமான் கோம்பை தாமரைக்கரை கல்வெட்டுகள்
இப்படத்தில் மேலே இருப்பது புலிமான் கோம்பை கல்வெட்டு. கீழே இருப்பது தாமரைக்கரை கல்வெட்டு.
ஈரெட்டிமலை, தாமரைக்கரை கல்வெட்டுகளை புலிமான் கோம்பை நடுகற்களுடன் ஒப்பிட்டு அவைகளிடையே உள்ள மூன்று ஒற்றுமைகளைக் குறிப்பிடலாம். அவை
1. ஈமப்புறங்காடு உள்ள பகுதியில் கிடைத்துள்ளன.
2. சமசீரற்ற செவ்வக வடிவ, சதுரமும் வட்டமுமற்ற நிலையில் சிறு கற்களில் எழுதப்பட்டுள்ளன
3. கற்களின் ஒரு முனையில் இரண்டு அல்லது மூன்று சிறு வரிகளில் எழுதப்பட்டுள்ளன
இந்த ஒற்றுமைகளைக் கொண்டு பார்க்கும்பொழுது, ஈரெட்டி மலையிலும் தாமரைக்கரையிலும் கிடைத்திருக்கின்ற கல்வெட்டுகள், துறவியாக இருந்து உயிர் நீத்தவருக்கு எடுத்த கல் என்றோ, அல்லது அவருக்கான ஒரு நினைவுக்கல் என்றோ கருத முடியாது.. அவ்விரு கல்வெட்டுகளும் புலிமான் கோம்பையில் கிடைத்த கல்வெட்டுகளைப் போன்றே இருக்கின்றன. ஆகவே தாமரைக்கரை, ஈரெட்டி மலை ஆகியவற்றில் கிடைத்த இரு கல்வெட்டுகளும் வீரர்களுக்கு எடுக்கப்பட்ட நடுகல் கல்வெட்டுகள் எனக் கொள்வது தான் பொருத்தமானது. இவ்விரண்டும் சங்க மரபைத் தொடர்ந்து வீரர்களுக்கு எடுக்கப்பட்ட நடுகற்கள் எனலாம் (7).
இந்த கல்வெட்டுகள் தமிழி எழுத்து வட்டெழுத்தாக மாறும் நிலையை உணர்த்தும் கல்வெட்டுகளாக உள்ளன. மேலும் இக்கல்வெட்டுகளில் உள்ள மெய்யெழுத்துகள் அனைத்தும் புள்ளியைக் கொண்டுள்ளன. புள்ளிகள் இருப்பதாலும் சங்ககால நடுகற்களைப் போல் இருப்பதாலும் இக்கல்வெட்டுகளின் காலத்தை சங்கம் மருவிய காலமான கி.பி. 2ஆம் நூற்றாண்டு எனக் கருதலாம்.
குன்னக்குடி கல்வெட்டுகள் - கி.பி. 1 ஆம் நூற்றாண்டு:
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர்-காரைக்குடி நெடுஞ்சாலையில் குன்னக்குடி உள்ளது. இந்த ஊர்க் குன்றின் மேல் அமைந்துள்ள முருகன் கோயிலுக்கு மேல்புறத்தில் ஞானியார் மடம் உள்ளது. அங்குள்ள இயற்கையான குகைத்தளத்தில் நீர்வடி விளிம்புப்பகுதியில் இரு தமிழி கல்வெட்டுகள் உள்ளன. இந்தக் குன்னக்குடி (குன்றக்குடி) யைச் சுற்றிலும் பல கற்படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த இரு தமிழிக் கல்வெட்டில் ஒன்று தலைகீழாகப் பொறிக்கப்பட்டுள்ளது.
முதல் கல்வெட்டு (நேரான வடிவம்)
இயற்கையான தலைகீழ் வடிவம்:
இரண்டாம் கல்வெட்டு:
சான்று: தமிழிணையம் – தமிழர் தகவலாற்றுப்படை
https://www.tagavalaatruppadai.in/inscriptions-detail?id=jZY9lup2kZl6TuXGlZQdjZQ3
முதல் கல்வெட்டில் ‘காபி ஊர் ஆதன் சாத்தன்’ என பொறிக்கப்பட்டுள்ளது. அதாவது காபி எனும் ஊரைச் சேர்ந்த ஆதன் சாத்தான் என்பதை இக்கல்வெட்டு கூறுகிறது. முதல் கல்வெட்டுக்கு அடுத்து சற்று இடைவெளி விட்டு இரண்டாவது கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது. இதில் ‘ஊறுது….’ என்ற சொல் உள்ளது. மீதி உள்ள எழுத்துகள் மண்டபத்தின் கட்டுமானத்தில் மறைந்துள்ளன. இதற்கு நீர் ஊற்று அமைத்தார் எனப் பொருள் கொள்ளப்படுகிறது. இவற்றில் மெய் எழுத்துகள் புள்ளி பெற்றுள்ளன (8). ஆகவே முன்பு கணிக்கப்பட்ட கி.பி. 3ஆம் நூற்றாண்டு என்பதற்குப்பதில், இவற்றின் காலம் கி.பி. 1ஆம் நூற்றாண்டு எனக் கணிக்கப்பட்டது.
அம்மன்கோவில்பட்டி கல்வெட்டு - கி.பி. 2ஆம் நூற்றாண்டு:
சேலம் மாவட்டம் ஓமலூர்-தாரமங்கலம் சாலையில் இருக்கும் பெரியேரிப் பட்டியின் அருகில் உள்ள சிற்றூர்தான் அம்மன்கோவில்பட்டி. இவ்வூரின் உப்பாற்றின் வடகரையில் பெருமாள்கோவில் பாறை உள்ளது. இங்கு ஒரு சில படுக்கை அமைப்புகள் உள்ளன. இங்கு இருக்கும் தேப்பாலி சுனைக்கு அருகில் உள்ள தமிழ்க் கல்வெட்டு தான் அம்மன்கோவில் கல்வெட்டு. முன்பு குகைத்தள அமைப்புடன் இருந்த இப்பகுதி கல்குவாரிப் பணியால் இப்போது பாறையாக மட்டுமே உள்ளது. கல்குவாரி பணி தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. இங்கு 30க்கும் மேற்பட்ட துறவிகளுக்கான உறைவிடம் இருந்துள்ளது. இங்குள்ள கல்வெட்டு நீர்ச்சுனை குறித்துப் பொறிக்கப் பட்டுள்ளது. அதில் ‘பரம்பன் கோகூர் கிழார் மகன் வியக்கன், கோபன் கணதேவன் தொட சுனை’ என பொறிக்கப்பட்டுள்ளது. பரம்பன் கோகூர் கிழார் என்பவரின் மகன் வியக்கன் கோபன் கணதேவன் இந்த சுனையை வெட்டினான் என்ற செய்தியை இக்கல்வெட்டு கூறுகிறது. நீர் இல்லாத காலத்தில் மக்களின் தேவைக்காக இச்சுனை அமைக்கப்பட்டுள்ளது. கல்வெட்டுக்கு கிழக்கே உள்ள சுனை குறித்தே இக்கல்வெட்டு பேசுகிறது.
அம்மன்கோவில்பட்டி கல்வெட்டுக்காலம்: இதன் எழுத்தமைப்பைக் கொண்டு இதன் காலம் கி.பி. 4ஆம் நூற்றாண்டு எனக் கணிக்கப்பட்டுள்ளது. (9). பல கல்வெட்டுகள் 3 முதல் 4 நூற்றாண்டுகள் வரை பிற்காலத்ததாகக் கணிக்கப்பட்டுள்ளன என்பதாலும், இக்கல்வெட்டு மக்களுக்கான நீர்ச்சுனையை உருவாக்குவதற்கான கல்வெட்டு என்பதாலும், இக்கல்வெட்டை இரு நூற்றாண்டுகள் பின்னோக்கிக் கணித்து இதன் காலம் கி.பி. 2ஆம் நூற்றாண்டு என முடிவு செய்யப்பட்டது. கி.பி. 250 க்குப்பிறகு களப்பிரர் படையெடுப்பால் நடந்த பேரழிவாலும் அதன்பின் நடந்த தொடக்ககாலக் களப்பிரரின் கொடுங்கோல் ஆட்சியாலும் அதன் தொடக்க காலத்தில், அதாவது கி.பி. 250 முதல் கி.பி. 350 வரை நீர்ச்சுனைகள் எதுவும் வெட்டப்பட்டிருக்காது என்பதால் இக்கல்வெட்டு அவர்களுக்கு முன் அதாவது கி.பி. 250 க்குள், வெட்டப்பட்டிருக்கும். ஆகவே மேலே கூறப்பட்ட பல்வேறு காரணங்களால், இக்கல்வெட்டின் காலம் என்பது கி.பி. 2ஆம், 3ஆம் நூற்றாண்டு என முடிவு செய்யப்பட்டது.
அம்மன்கோவில்பட்டி கல்வெட்டு:
சான்று: http://www.varalaaru.com/design/article.aspx?ArticleID=421
மலைக்கோட்டை கல்வெட்டுகள் - கி.பி. 2-3ஆம் நூற்றாண்டு:
முதல் கல்வெட்டு: இங்குள்ள தமிழி கல்வெட்டுகளில் இரு கல்வெட்டுகள் மட்டுமே சங்கம் மருவியகாலக் கல்வெட்டுகள் எனலாம். அதில் முதல் கல்வெட்டு சிதைந்த நிலையில் காணப்படுகிறது. இக்கல்வெட்டு எழுத்துக்களை ‘சென் காயி பங்கே’ எனப்படித்துள்ளனர். இதனைச் செங்காயபன் எனப்பொருள்கொள்ள முடிகிறது. செங்காயபன், வெண்காசிபன், நல்வெள்ளையார் போன்ற பெயர்கள் ஆசிவகர்களுக்கான பெயர்கள். ஆசிவகர்கள் தங்கள் துறவிகளை அவர்களின் பண்பு, குணநலம், ஆளுமை போன்றனவற்றைக் கொண்டு கருப்பு முதல் வெண்மை வரையான நிறங்களைக்கொண்டு பெயரிட்டனர். ஆகவே செங்காயபன் என்பது ஒரு ஆசிவகத்துறவியின் பெயர் என்பதால் இக்கல்வெட்டு ஆசிவகத்துறவி குறித்த கல்வெட்டாகும். இதன் காலம் கி.பி. 2ஆம் நூற்றாண்டாகும்.
இக்கல்வெட்டு ‘சென் காயி பங்கே’ என படிக்கப்படவேண்டும்.
https://www.tagavalaatruppadai.in/inscriptions-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZQ2
ஆனைமலைக் கல்வெட்டு கி.பி. முதல் நூற்றாண்டு:
மதுரை-மேலூர் செல்லும் நெடுஞ்சாலையில், 5 கி.மீ. தொலைவில் ஒத்தக்கடை-நரசிங்கம் ஊருக்கு அருகில் உள்ள மலைதான் ஆனைமலை. யானை போன்று இயற்கையாக அமைந்த இதன் குகைத்தள உச்சியின் உள்புறத்தில் கற்படுக்கைகள் உள்ளன. குகையில் நீர்வடி விளிம்பிற்குக் கீழாக இந்தக் கல்வெட்டு இரு வரியில் உள்ளது.
சான்று: http://www.tnarch.gov.in/ta/தமிழ்-பிராமிக்-கல்வெட்டு-ஆனைமலை
ஆனைமலைக் கல்வெட்டு எழுத்துகள்:
இக்கல்வெட்டை ‘இவ(ன்) குன்றத்து உறையுளில் பாதந்தான் ஏறி ஆர் இதன் அத்துவாய் அரட்ட காய்குபவன்’ என்று படித்துள்ளனர். இவன் குன்றத்து உறையுளில் யாரும் ஏறி அடி வைத்தால் துறவிகள் சினம் அடைவர் எனப அதற்குப் பொருள் தர்ப்படுகிறது. ஏரி ஆரிதன் அத்துவாயி, அரட்ட காயிபன் ஆகிய இரு துறவியர் தங்குவதற்கான கற்படுக்கை எனவும் பொருள் கொள்ளப்படுகிறது. இதில் இரண்டாவது பொருளே பொருத்தமாகப்படுகிறது. அரட்ட காயிபன் என்பது ஆசிவகத்துறவியைக் குறிக்கிறது எனலாம். இதன் காலம் கி.பி. 2ஆம் 3ஆம் நூற்றாண்டு என்கின்றனர் (11). இதன் காலம் பிற்காலத்ததாகக் கணிக்கப்பட்டுள்ளது எனக்கொண்டு, இதன் காலம் கி.பி. முதல் நூற்றாண்டு எனக் கணிக்கப்பட்டது.
பொற்பனைக்கோட்டை நடுகல் கல்வெட்டு:
காலம்: கி.பி. முதல் நூற்றாண்டு
பொற்பனைக்கோட்டை புதுக்கோட்டைக்கு கிழக்கே சுமார் 6 கி.மீ தொலைவில் உள்ள பழமையான முற்றிலும் சிதிலமடைந்த செங்கல் கோட்டையாகும். பொன் பரப்பினான்பட்டி என்ற பண்டையப் பெயர் பொற்பனைக் கோட்டை என மாறி வழங்கப்படுவதாகக் கூறப்படுகிறது.
தமிழகத்திலேயே தற்போது ஓரளவு முழுமையான நிலையில் இருக்கும் ஒரே சங்ககாலக் கோட்டை பொற்பனைக் கோட்டை. சங்ககாலப் பாடல்களில் கூறப்பட்ட அனைத்து அவயங்களும் கொண்ட ஒரே கோட்டையாக பொற்பனைக்கோட்டை இருப்பது குறிப்பிடத்தக்கது.
2012 ஆம் ஆண்டு இந்த கோட்டையில் உள்ள குளக்கரையில் முக்கோண வடிவிலான பழந்தமிழ் கல்வெட்டுகளுடன் கூடிய நடுகல் கண்டுபிடிக்கப் பட்டது. இந்நடுகல் தற்போது தஞ்சைத் தமிழ்ப் பல்கலைகழகத்தில் தொல்லியல் மற்றும் கல்வெட்டியல் துறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இக்கல் 2 அடி நீளமும் 2 அடி உயரமும் 10 செமீ பருமனும் கொண்டுள்ளது. இதன் கல்வெட்டு எழுத்துகள்.
1.கோவென்கட்டிற் நெதிர
2.ணாறு பொன்கொங்கர் விண்ண கோன்
3.ஆஎறிஇத்து ஏவ அதவ்வனாரு
4) அங்கபடை தாணைத் தணயன் கணங்
5) குமாரன் கல்
கோவெண்கட்டி என்ற அரசனுக்குப் பின்வந்த பொன்கொங்கர் விண்ணக்கொன் என்ற அரசனின் பசுக்கூட்டத்தை எதிரிப்படையினர் கவர்ந்து செல்ல, அதவ்வன் என்பவருடைய மெய்க்காவல் படைத் தலைவனும் கோட்டையின் காவலனுமாகிய “அங்கப்படை தாணையன் கணங்குமரன்” பசுக் கூட்டத்தை மீட்கும் முயற்சியில் நடந்த போரில் இறந்து பட்டமைக்காக இந்த நடுகல் நடப்பட்டுள்ளது. சங்கம் மருவியகால இலக்கியங்களில் வரலாற்றுக் குறிப்புகள் சொல்லப்படவில்லை என்பதால் இம்மன்னர்கள் பற்றிய குறிப்புகள் எதுவும் இல்லையெனினும், இங்கு மிகப் பெரிய கோட்டை இருந்ததற்கான எச்சம் இப்பகுதியில் இன்றும் உள்ளது. இவ்வூருக்கு அருகில் "கொங்க திரையன் பட்டி" எனும் ஊர் இருப்பது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆகோள் கல்வெட்டு "பொன் கொங்கர் விண்ணக்கோன்" என்ற சங்கம் மருவிய கால அரசனின் ஆட்சியின் கீழ் நடந்த ஆகோளின் போது இறந்து போன கணங்குமரன் என்ற அடவனாற்றுப் படை வீரனுக்காக எழுப்பப்பட்டது. இதன் எழுத்தமைதியை கொண்டு இது கிபி. இரண்டாம் நூற்றாண்டினது என்று தமிழக தொல்லியல் துறையினர் கணித்துள்ளனர். ஆனால் இதன் காலத்தை கி.பி. முதல் நூற்றாண்டு எனக் கணிக்கலாம். இந்த விண்ணக்கோன் என்ற அரசன் கோ வெண்கட்டி என்ற அரசனுக்குப் பின் ஆண்டவன். அதனால் இந்த இரண்டு அரசர்களின் காலத்தை கணிப்பதற்கும் இக்கல்வெட்டு உதவியாய் அமைகிறது. இது கி.பி. முதல் நூற்றாண்டு தமிழி எழுத்துக்களால் எழுதப்பட்டுள்ளது. இக்கல்வெட்டு உள்ள பகுதியில் 40 ஏக்கர் பரப்பளவில் ஒரு கோட்டை இருந்திருக்கலாம் என ஆய்வாளர் கருதுகின்றனர். அதற்கான எச்சம் இப்பகுதியில் இருக்கிறது.
https://ta.wikipedia.org/wiki/கலசக்காடு_ஆ_மீட்டான்_கல்வெட்டு
http://www.thehindu.com/news/states/tamil-nadu/article3662994.ece
இச்செய்திகள் புதுக்கோட்டைப் பகுதியில் சோழர்களின் கீழ் இந்தப் பொற்பனைக் கோட்டையின் மன்னர்களான கோ வெண்கட்டி, விண்ணக்கோன் ஆகியோர் கி.பி. முதல் நூற்றாண்டு வாக்கில் ஆண்டு வந்துள்ளனர் என அறிய முடிகிறது. இவர்கள் பெரும்பாலும் கி.பி. முதல் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆண்டு வந்தவர்களாக இருக்கலாம். அதன்பின் இப்பகுதி சோழப்பேரரசில் இணைக்கப்பட்டிருக்கும் எனக் கருதலாம். அக்காலகட்டத்தில் பேரரசுக்கொள்கையின் காரணமாக சிறு அரசுகள் சுதந்திரமாக ஆட்சி செய்துவரும் சூழ்நிலை இருக்கவில்லை. அன்று பசுக்கூட்டத்தை கவருவதும் அதனைக் கோட்டையின் காவலர்கள் மீட்டுக்கொண்டு வருவதும் நடந்து வந்துள்ளது என்பதை இச்செய்திகள் தெரிவிக்கின்றன. அப்பகுதியில் வேளாண்மையோடு கால்நடைவளர்ப்பு என்பது ஒரு மிக முக்கியத்தொழிலாக இருந்திருக்கவேண்டும் எனலாம்.
கேரளம், வயநாடு எடக்கல் கல்வெட்டுகள்:
கேரளம் மாநிலம் வயநாடு மாவட்டத்தில் கணபதி வட்டம் சுல்தான் பத்தேரிக்கு தென்மேற்கில் ஆறு கி.மீ. தொலைவில் எடக்கல் என்ற இடத்தில் எடக்கல் மலை உள்ளது. இம்மலை தமிழ்நாடு, கேரளம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களின் சாலைகள் இணையும் இடத்தில் அமைந்துள்ளது. இந்த மலையில் இரு இயற்கையான குகைத்தளங்கள் உள்ளன. இதில் மேல்குகை, மண்டபம் போல் இயற்கையாக அமைந்துள்ளது. இம்மேல் குகையில் நான்கு தமிழி கல்வெட்டுகள் உள்ளன. அதன் காலம் பொதுவாக கி.பி. 3ஆம் நூற்றாண்டு எனக் கணிக்கப்பட்டுள்ளது. இங்கு 10க்கும் மேற்பட்ட துறவிகளின் உறைவிடம் இருந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
முதல் கல்வெட்டு: குகைத்தளத்துக்கு வடக்கில் உள்ள பாறையில் ஒரு கல்வெட்டு உள்ளது. இதனை ஐராவதம் மகாதேவன் கண்டறிந்தார். இந்த கல்வெட்டு எழுத்துகள், ‘ஒப்பனப்ப வீரன்’ எனப் படிக்கப்பட்டு, அழகானவன் ஒப்பனப்ப வீரன் எனப் பொருள் கொள்ளப்பட்டுள்ளதாக சொல்லப்பட்டுள்ளது. ஆனால் ‘அழகான வீரன்’ என்ற பொருளே பொருத்தமானது.
இரண்டாம் கல்வெட்டு: முதல் கல்வெட்டு உள்ள பாறையில் இக்கல்வெட்டு உள்ளது. இக்கல்வெட்டின் நடுவில் ஒரு குறுக்குக்கோடும், முடிவில் குறியீடு அல்லது பனைமரம் போன்ற உருவமும் உள்ளது. இக்கல்வெட்டில் ‘கடும்மி புத சேர’ என உள்ளது. புத என்பது புதல்வன் அல்லது மகன் என்ற பொருளைக் குறிக்கிறது. கடும்மி என்பதை கடும்மான் எனக் கொண்டால் கடும்மான் மகன் சேரன் எனப் பொருள் கொள்ளலாம். இவன் சேரர்களின் கிளைக் குலத்தைச் சேர்ந்த ஒருவனாக இருக்கலாம்.
மூன்றாம் கல்வெட்டு: இரண்டாம் கல்வெட்டு உள்ள பாறையில் இக்கல்வெட்டு உள்ளது. இக்கல்வெட்டில் ‘கோபூதிவீர’ என பொறிக்கப்பட்டுள்ளது. கோபுதி வீரன் எனப் பொருள்கொண்டு இதனை ஒரு அரசன் அல்லது ஒரு படைத்தலைவனின் பெயராகக் கொள்ளலாம்.
நான்காம் கல்வெட்டு: மூன்றாம் கல்வெட்டு உள்ள பாறையில் இக்கல்வெட்டு உள்ளது. இது மிகவும் சிதைந்து போயுள்ளது. இதில், ‘கோ (வ) (“) தான்’ என எழுதப்பட்டுள்ளது. இக்கல்வெட்டும் ஒரு அரசன் அல்லது ஒரு தலைவனின் பெயராக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது (12).
இந்த நான்கு கல்வெட்டுகளும் ஒரே இடத்தில் ஒரே சமயத்தில் பொறிக்கப்பட்ட கல்வெட்டுகளாகவும், ஏதாவது ஒரு தலைவன் அல்லது அரசன் பெயரைக் கொண்டதாகவும் உள்ளன. இரண்டாவது கல்வெட்டு சேர குல அரசன் அல்லது சேர குலத்தலைவன் ஒருவனின் பெயராக இருக்கிறது. இந்த நால்வரும் சேர்ந்து அங்கு இருந்த துறவிகளுக்கு உறைவிடங்களுக்கான இருக்கைகளை அதாவது படுக்கைகளை வெட்டிக் கொடுத்திருக்கலாம் எனக் கருதலாம். இந்த நான்கு கல்வெட்டுகளும் கி.பி. 3ஆம் நூற்றாண்டு எனக் கணிக்கப்பட்டுள்ளது. பொதுவாக இவை முன்னோக்கிக் கணிக்கப்பட்டிருக்கலாம் எனக் கொண்டு இவைகளின் காலத்தை கி.பி. 1ஆம் அல்லது 2ஆம் நூற்றாண்டு எனக் கணிக்கலாம். சங்கம் மருவிய காலம் வரை அதாவது கி.பி. 250 வரை தமிழ் மொழி தான் கேரள மக்களின் மொழியாக இருந்து வந்தது என்பதற்கும், இன்றைய கேரளம் என்பது பண்டைய தமிழகத்தின் சேரநாடுதான் என்பதற்கும், அங்கு சேரர்களும் அவர்களைச் சார்ந்தவர்களும்தான் ஆட்சியாளர்களாக இருந்து வந்தனர் என்பதற்கும் இந்த நான்கு கல்வெட்டுகளும் சான்றுகளாகின்றன.
சங்கம் மருவியகாலக் கல்வெட்டுகள் தரும் தரவுகள்:
சங்க காலத்திலிருந்தே தமிழ்ச் சமூகம் இசைக்கலையில் மிகவும் வளர்ந்த சமூகமாக இருந்தது. இசை சாகித்தியங்கள் எனப்படும் இசை இலக்கியங்களும், இசை இலக்கணமும் மிகவும் வளர்ச்சியடைந்து அவற்றில் நிறைய நூல்களும் உருவாகியிருந்தன. சங்கம் மருவிய காலத்தில் இசையானது உச்சகட்ட வளர்ச்சியைப் பெற்றிருந்தது என்பதை சிலப்பதிகாரம் எடுத்துரைக்கிறது. அதனை அரச்சலூர் இசைக்கல்வெட்டும் உறுதி செய்கிறது. இசையில் மட்டுமல்ல ஓவியம், சிற்பம், கட்டடக்கலை போன்ற பலவற்றிலும் சங்கம் மருவிய காலச்சமூகம் மிகவும் வளர்ச்சி பெற்ற சமூகமாக இருந்தது. சங்ககாலம் போன்றே சங்கம் மருவிய காலத்திலும் வீரர்களுக்கும் மிகச்சிறந்த சான்றோர்களுக்கும் நடுகல் எடுத்தலும் அதனை வழிபட்டு வருதலும் இருந்துவந்தன என அறிய முடிகிறது. ஆகோள் பூசலில் இறந்த போர்ப்படை வீரர்களுக்கும் நடுகற்கள் எடுக்கப்பட்டன என அறிய முடிகிறது.
இக்கல்வெட்டுகள் மூலம் சங்கம்மருவிய காலத்தில் இருந்த கற்படுக்கைகள் சமணர்களுக்கானதல்ல என்பதும் அவை பெரும்பாலும் ஆசிவகர்களுக்கு அல்லது தமிழ் அறிவர்களுக்கானவை என்பதும் உறுதியாகிறது. சங்க காலம் போன்றே சங்கம் மருவிய காலத்திலும் தமிழ் அறிவர்களும் ஆசிவகர்களும் ஆசைகளில் இருந்து விடுபடுவதற்கும் பொதுமக்களுக்குச் சேவை செய்வதற்கும் துறவிகள் ஆயினர் எனவும், அவர்கள் வீடுபெறு பெறுவதற்கு துறவு மேற்கொள்ளவில்லை எனவும் அறிய முடிகிறது. அதன் மூலம் சங்கம் மருவியகாலத் தமிழ்ச்சமூகம் என்பது பொருள்முதல்வாத மெய்யியலை அடிப்படையாகக்கொண்ட சமூகமாகவே இருந்தது எனவும் அன்று முழுமுதற்கடவுள், வீடுபேறு போன்ற கருத்தியல்கள் மக்களிடத்தில் இருக்கவில்லை எனவும் உறுதியாகிறது. மேலும் இந்தத் துறவிகள் வானியலை, மருத்துவத்தை, கணிதத்தை, இன்னபிற இயற்கை சார்ந்த அறிவிலை வளர்த்தெடுத்தனர் எனவும் மக்களின் தேவைகளை அறிந்து அவர்களுக்கு பலவகையிலும் உதவிவந்தனர் எனவும் அறிய முடிகிறது.
அதுபோன்றே அன்று மக்களுக்கான நீர்ச் சுனைகள் அல்லது குளங்கள் போன்றவை வெட்டப்பட்டன என்பதையும் அறிய முடிகிறது. சங்ககாலம் முதலே நீர்ப்பாசனத்தில் தமிழர்கள் உலகின் முன்னோடிகளாக இருந்து வந்துள்ளனர். கரிகாலனின் கல்லணை அதற்கு ஒரு முக்கியச் சான்றாக இருக்கிறது. சங்க இலக்கியங்கள் இவை குறித்து நிறையப்பேசுகின்றன. நீர்நிலைகளை உருவாக்குவது அரசனின் முக்கியக் கடமை எனப் பெரும்பாலான சங்ககாலப் புலவர்கள் வலியுறுத்தி வந்தனர். அதன் காரணமாக அன்று நிறைய நீர்நிலைகள் உருவாக்கப்பட்டன. அந்நிலை தொடர்ந்து சங்கம் மருவிய காலத்திலும் இருந்து வந்துள்ளது என்பதை இங்குள்ள கல்வெட்டுப் பொறிப்புகள் உறுதி செய்கின்றன. சங்க கால கல்வெட்டுகள் கூட நீர்ச்சுனைகள் குறித்துப் பேசவில்லை. சங்கம் மருவிய காலக் கல்வேட்டுகள் நீர்ச்சுனைகள் குறித்துப் பேசுவதால் இக்கால கட்டத்தில் நீர்நிலைகளை உருவாக்குவது என்பது பிற்காலச் சோழப்பேரரசு காலத்தில் பெருமளவு நடந்தது போல சங்கம் மருவிய காலத்திலும் நாடு முழுவதும் பெருமளவில் நடைபெற்றன எனலாம்.
பொற்பனைக்கோட்டை கல்வெட்டு ஆகோள் பூசல் குறித்துப் பேசுவதோடு சங்கம் மருவிய காலத்திலும் கி.பி. முதல் நூற்றாண்டுவரை சிறுகுறு அரசுகள் சில இருந்தன என்பதை இக்கல்வெட்டும் அங்கிருந்த கோட்டை இருந்ததற்கான தடயங்களும் உறுதி செய்கின்றன. கேரளக் கல்வெட்டுகள் சங்கம் மருவியகாலம் வரை, கேரளம் பழந்தமிழ்நாட்டின் ஒரு பகுதியாக இருந்த, சேர நாடாகவே இருந்து வந்தது என்பதை உறுதி செய்கின்றன. அங்குள்ள கல்வெட்டுகள் தமிழ் அறிவர்கள் அல்லது ஆசிவகர்களுக்கான கற்படுக்கைகள் அமைத்தது குறித்த கல்வெட்டுகள் என்பதால் பண்டைய சேர நாட்டில் சங்கம் மருவிய காலம் வரை பொருள்முதல்வாத மெய்யியல்தான் பண்டைய சேரநாட்டுச் சமூகத்தின் அடிப்படையாக இருந்து வந்தது என்பதும் உறுதி செய்யப்படுகிறது. கி.பி. 250 வாக்கில் நடந்த களப்பிரர் படையெடுப்பாலும் அதன்பின் அங்கு நடந்த அளவற்ற பிராமணக் குடியேற்றங்களாலும்தான சேர நாட்டுச்சமூகம் இன்றைய கேரளச்சமூகமாக மாறிப்போனது என்பதும் உறுதி செய்யப்படுகிறது. இவை குறித்து ஆசிரியரின் ‘கேரளவரலாறு’ என்ற நூல் விரிவாகப் பேசியுள்ளது.
கல்வெட்டு வரி வடிவங்கள்: தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள் கி.மு. 5ஆம் நூற்றாண்டு முதல் கிடைத்து வருகின்றன. நடுகற்களில் மிகப்பழமையான புலிமான் கோம்பை தமிழி கல்வெட்டு துய தமிழ் எழுத்துகளால் எழுதப் பட்டுள்ளது. ஆனால் கற்படுக்கைகள் குறித்து வெட்டப்பட்ட கல்வெட்டுகளில் பிராகிருத பெயர்ச் சொற்களும், எழுத்துகளும் பயன்படுத்தப்பட்டுள்ளன. கி.மு. 6ஆம் நூற்றாண்டு கொடுமணல் பானை ஓடுகளிலும் இந்த பிராகிருத சொற்களும் எழுத்துகளும் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் அன்று பிராகிருத மொழிக்கு எழுத்து உருவாகி இருக்கவில்லை. கி.பி. 250 வாக்கில்தான் பிராகிருத மொழிக்கு அசோகன் பிராமி என்ற எழுத்து முறை தமிழி எழுத்தில் இருந்து உருவாகிறது.
கி.மு. 6ஆம் நூற்றாண்டுக்கு முன்பிருந்தே வடநாட்டிலிருந்து தமிழ்நாட்டுக்கு வந்த வணிகர்களின் பிராகிருதப் பெயர்களைத் தமிழில் எழுதும் சூழல் தமிழ்நாட்டில் உருவாகி இருந்ததால் அன்று தமிழர்கள் அதற்கான சில சிறப்பு எழுத்துகளை உருவாக்கி இருந்தனர். ‘ஸ’ போன்ற எழுத்துகள் அவ்வாறு உருவாக்கப்பட்ட சிறப்பு எழுத்துகள் ஆகும். நாளடைவில் தமிழர்கள் அதனைத் தாங்கள் உருவாக்கியதால், அதனைத் தங்கள் எழுத்தாகக் கொண்டு கல்வெட்டுகளில் அதிக அளவில் பயன்படுத்தினர். அதனால் தான் தொல்காப்பியர் வட சொற்களைப் பயன்படுத்தும்பொழுது அதன் சிறப்பெழுத்துகளை நீக்கி அதனைத் தமிழ்ப்படுத்தி தமிழ் எழுத்துகளைக் கொண்டே எழுத வேண்டும் என்று அன்றே இலக்கணம் வகுத்தார். ஆனால் நடைமுறையில் அதனைப் பின்பற்றாததன் விளைவே பிராகிருதச் சிறப்பு எழுத்துகள் கல்வெட்டுகளில் இருப்பதற்கான காரணங்கள் ஆகும். ஆகவே அந்த சிறப்புப் பிராகிருத எழுத்துகள் அனைத்தும் தமிழர் உருவாக்கிய எழுத்துகள்தான். பின் இந்த சிறப்பு எழுத்துகளையும் தமிழி எழுத்துக்களையும் பயன்படுத்தித்தான் அசோகன் பிராமியும், சமற்கிருத மொழிக்கான கிரந்த எழுத்து முறையும் உருவானது (13) (89, 90, 195, 196)
தொடக்கத்தில் கல்வெட்டு எழுத்துகளுக்கு புள்ளியிடுதல் இருக்கவில்லை. ஆனால் அதன்பின் கல்வெட்டு எழுத்துகளுக்கு புள்ளியிடுதல் என்பது உருவானது. கி.மு. 3ஆம் நூற்றாண்டு, சம்பை கல்வெட்டு எழுத்துகளிலேயே இது தொடங்கி விடுகிறது. சங்கம் மருவிய காலத்திலும் அதன் பின்னரும் புள்ளி இடுதல் என்பது தொடர்ந்து இருந்து வந்துள்ளது. அதேசமயம் சங்க காலத்தின் இறுதியிலேயே (கி.மு. 50க்கு முன்பே) ஓலையில் எழுதப்படும் தமிழி எழுத்து வட்டேழுத்தாக மாறத் தொடங்கி விடுகிறது. நாளடைவில் சங்கம் மருவிய காலத்தில் ஓலையில் எழுதப்படும் எழுத்துகள் முழுமையாக வட்டெழுத்தாக ஆகி விடுகிறது. ஆகவே வட்டெழுத்து என்பது சங்கம் மருவிய காலத்தில் ஓலையில் எழுதக் கண்டுபிடிக்கப்பட்ட முறையாகும். பின்னர் இம்முறையைப் பின்பற்றி கல்வெட்டிலும் வட்டெழுத்துகள் எழுதப்பட்டன. கி.பி. முதல் நூற்றாண்டைச் சேர்ந்த அரச்சலூர் கல்வெட்டுக் காலம் முதல் வட்டேழுத்து முறை கல்வெட்டுகளிலும் பின்பற்றப்பட்டது. வேறுசில சங்கம் மருவிய காலக் கல்வெட்டுகளில் வட்டெழுத்து முறை பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் களப்பிரர், பல்லவர் காலத்திலும் அதன் பின்னரும் தான் இம்முறை முழுமையாகக் கல்வெட்டுகளில் பயன்படுத்தப்பட்டன. இத்தரவுகளின் மூலம் சங்கம் மருவிய காலக் கல்வெட்டுகளில் தமிழி எழுத்தும், வடமொழி சிறப்பு எழுத்தும், புள்ளியிடுதலும், வட்டெழுத்தும் என பல்வேறு முறைகளும் பயன்படுத்தப்பட்டன எனலாம்.
பார்வை:
1. பழந்தமிழ்ச் சமுதாயமும் வரலாறும், கணியன் பாலன், NCBH வெளியீடு, 2023, புத்தகம் – 1, பக்: 103, 104.
2. மூலச்சிறப்புள்ள தமிழ்ச் சிந்தனை மரபு, கணியன் பாலன், தமிழினி பதிப்பகம், 2018, பக்: 104, 106.
3. பழந்தமிழ்ச் சமுதாயமும் வரலாறும், கணியன் பாலன், NCBH வெளியீடு, 2023, புத்தகம் – 1, பக்: 493-505.
4. தமிழ் நாட்டில் சமணம், அனந்தபுரம் கோ.கிருட்டினமூர்த்தி, செம்மொழித்தமிழாய்வு மத்திய நிறுவனம், 2023, பக்: 296, 297
5. பக்: 88-94.
6. பக்: 98-103. & பழந்தமிழ்ச் சமுதாயமும் வரலாறும், கணியன் பாலன், NCBH வெளியீடு, 2023, புத்தகம் – 2, பக்: 465, 466.
7. தமிழ் நாட்டில் சமணம், அனந்தபுரம் கோ.கிருட்டினமூர்த்தி, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், 2023, பக்: 104. & புதிய நோக்கில் களப்பிரர் கால வரலாறு, ஆ.பத்மாவதி, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், சென்னை, 2021, பக்: 143-150 & https://groups.google.com/g/mintamil/c/oeZgL9Bp7u8
8. தமிழ் நாட்டில் சமணம், அனந்தபுரம் கோ.கிருட்டினமூர்த்தி, செம்மொழித்தமிழாய்வு மத்திய நிறுவனம், 2023, பக்: 137-139.
9. பக்: 142-145
10. பக்: 162-165
11. பக்: 229-231
12. பக்: 320-324.
- கணியன் பாலன்