ஆழ்கடலில் சர்வசாதாரணமாகக் காணப்படும் சுறா குடும்பத்தைச் சேர்ந்த, பல்வேறு சிறப்புப் பண்புகள் உள்ள அபூர்வ உயிரினங்களான திமிங்கலச் சுறாக்கள் (Whale sharks) வாழ்கின்றன. இவை அபூர்வமாகவே கரைக்கு வரும் இயல்புடையவை. கடந்த ஐம்பதாண்டுகளில் 20 முறை மட்டுமே இவை கரையொதுங்கிய சம்பவங்கள் நிகழ்ந்தன. ஆனால் அதற்கு எதிர்மாறாகச் சமீபநாட்களில் கேரளா, தமிழ்நாடு கடற்கரையோரப் பகுதிகளில் இவை அதிக அளவில் கரையொதுங்குவது சர்வசாதாரணமாகி வருகிறது.
இவை உட்கடற்பகுதியில் வாழும், பாதுகாக்கப்பட வேண்டிய பட்டியலில் இடம்பெற்றுள்ள உயிரினங்கள். சாதாரண சுறாக்களுடன் ஒப்பிடும்போது இவை மெதுவாக இடம்பெயரும் இயல்புடையவை. சமீபத்தில் திருவனந்தபுரம் அருகில் தும்பா கடற்கரைப்பகுதியில் ஒதுங்கிய ஒரு திமிங்கலச் சுறாவின் எடை 10 டன்.
உணவுப்பற்றாக்குறை, காலநிலை மாற்றம், மிதமிஞ்சிய மீன்பிடித்தல் தொடங்கி இவை அவசரமாகக் கரையொதுங்க பல்வேறு காரணங்கள் உள்ளன.
பொதுவாக உட்கடலில் வாழும் இந்த உயிரினங்கள், சிறிய மீன்கள் இருக்கும் பகுதிகளைத் தங்கள் பாதையாகத் தேர்ந்தெடுக்கின்றன. கரைக்கு அருகில் இருக்கும் பிரதேசங்களுக்கு இவை வர உணவுப்பற்றாக்குறை ஒரு முக்கியக் காரணம் என்று கேரளா நீர்வாழ் மற்றும் மீன்வளத்துறையின் உயிரியல் பிரிவு (Aquatic Biology & Fisheries) துறைத் தலைவர் டாக்டர் ஏ. பிஜுகுமார் கூறுகிறார்.
ஆழ்கடலில் மீன்களின் எண்ணிக்கை குறைவதால் இவை மீன் வளம் அதிகமாக இருக்கும் பகுதிகளை நம்பி வாழ வேண்டியுள்ளது. இதனால் சிறிய மீன் கூட்டங்களைப் பின்தொடர்ந்து இவை கரைக்குச் சமீபத்தில் உள்ள பிரதேசங்களுக்கு வருகின்றன. சமீபத்தில் தும்பா கடற்பகுதிக்கு அருகில் ஒரு திமிங்கலச் சுறா கரையொதுங்க இதுவே காரணமாக இருக்கலாம் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.
ஆனால் இவை கப்பல்கள் அல்லது பெரிய விசைப்படகுகளின் சுழலி (Propeller) அல்லது வேறு பகுதிகள் மோதுவதால் ஏற்படும் காயங்களினாலும் கரையொதுங்குவது உண்டு. காயம்படும் திமிங்கலச் சுறாக்களுக்கு அதிக தூரம் நீந்த முடிவதில்லை. அப்போது அருகில் இருக்கும் பகுதிகளைத் தஞ்சமடைகின்றன.
நச்சுத்தன்மையுள்ள மிதவை உயிரினங்களை (Toxic planktons) உணவாக உட்கொள்ளும் சுறாக்களுக்குச் சில சமயங்களில் உடல்நலமின்மை உண்டாகிறது. இது அவற்றின் பயணப்பாதையில் மாற்றங்களை ஏற்படுத்துகிறது. இவை கரையொதுங்க இதுவும் ஒரு காரணமாகக் கருதப்படுகிறது.
இவை நல்ல பார்வைத்திறன் உள்ள கடல்வாழ் உயிரினங்கள். இருட்டில் கூட முன்னால் இருக்கும் பொருட்களை இவற்றால் அடையாளம் காண முடியும். ஆனால் மற்ற கடல்வாழ் உயிரினங்களிடம் இருந்து வேறுபட்ட முறையில் அவற்றின் கண்கள் பக்கவாட்டில்/முன்னோக்கி அமைந்துள்ளன. இதனால் பார்வைப்புலத்தின் பரப்பு குறைகிறது. இது காயம்படுவதற்கான வாய்ப்பை அதிகரிக்கிறது.
கடல் மாசுபடுதல் இந்த உயிரினங்களுக்கு மற்றொரு பெரும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளது. காலநிலை மாற்றம் சூழலையும் வனவிலங்குகளையும் பாதிப்பது போல இவற்றையும் பாதிக்கிறது. காலநிலையில் ஏற்படும் மாற்றங்களை உணர உதவும் எலக்ட்ரோரிசெப்டார் (Electroreceptor) அமைப்புகள் எல்லா சுறாக்களிலும் அமைந்துள்ளன. கடல்நீரில் கலந்திருக்கும் ரசாயனப் பொருட்களைக் கண்டுபிடிக்க இந்த உறுப்புகள் இவற்றிற்கு உதவுகின்றன.
என்றாலும் காலநிலையில் உருவாகும் மாறுதல்களை இவை எவ்வாறு கண்டறிகின்றன என்பது இன்னமும் ஆராயப்படாமல் உள்ளது என்று டாக்டர் பிஜுகுமார் கூறுகிறார். காலநிலை மாற்றத்தினால் கடல் சூடாகிறது. இது திமிங்கலச் சுறாக்கள் உணவாக உட்கொள்ளும் விலங்கு மிதவை உயிரினங்களின் எண்ணிக்கையைக் குறைக்கிறது. இதனால் உணவு தேடி இவை கரைக்கு அருகில் இருக்கும் பகுதிகளுக்கு வருகின்றன.
இவை வடிவத்தில் பெரியதாக இருப்பதால் மீன்பிடி வலைகளில் இருந்து நழுவித் தப்பிக்க முடிவதில்லை. கரைக்கு வந்து சேரும் சுறாவிற்குக் காயம் படவில்லை என்றால் கடலிற்கே இவற்றை மீண்டும் அனுப்ப முடியும். ஆனால் காயம் இருந்தால் அதை எதிர்த்துப் போராடி உயிர் பிழைப்பது என்பது கடினம். இவை கரை நோக்கி வர இதுவும் ஒரு காரணமாகிறது.
ஒரு காலத்தில் இவை குஜராத்தில் பெருமளவில் வேட்டையாடப்பட்டன. இவற்றில் பெரும்பாலானவை வலையில் சிக்கியே உயிரிழக்கின்றன. இதனால் குஜராத்தில் கரையொதுங்கும் சுறாக்களைக் கடலிற்குத் திரும்ப அனுப்பிவைத்தால் மாநில வனத்துறை ₹25,000 சன்மானம் வழங்குகிறது.
இன அழிவைச் சந்திக்கும் இவற்றின் படங்களை மீனவர்களுக்குக் காட்டிக் கருத்தரங்குகள் நடத்தப்படுகின்றன. இவை வலையில் சிக்கிக் கொண்டால் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த மத்திய கடல்சார் மீன்வள ஆராய்ச்சி நிறுவனம் (CMFRI) வகுப்புகளை நடத்துகிறது. இத்தகைய வகுப்புகள் ஒரு அளவு வரை பலனளிக்கின்றன என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
ஒரு காலத்தில் இவை நூறாண்டு காலம் வாழ்ந்ததற்கான சான்றுகள் உள்ளன. வலையில் சிக்கிய இவற்றைக்கரைக்கு இழுத்து வருவது சட்டவிரோதமானது. அதனால் அத்தகைய சந்தர்ப்பங்களில் இவற்றை மீண்டும் கடலில் விடுவதே வழக்கம். சர்வதேச இயற்கை வளப் பாதுகாப்புச் சங்கத்தின் (IUCN) அழிந்துவரும் கடல்வாழ் உயிரினங்களின் பட்டியலில் இவை இடம்பெற்றுள்ளன என்று விழிஞம் கடல்சார் மீன்வள ஆராய்ச்சி மைய (CMFRI) விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
வலையில் சிக்கியவுடன் மீண்டும் கடலில் விட முடிந்தால் இவற்றைக் காப்பாற்ற முடியும். சில சமயங்களில் காயம்பட்டு கரைக்கு வரும் சுறாவுடன் சேர்ந்து மற்றவையும் கூட்டமாகக் கரைக்கு வருவதுண்டு. கேரளா, தமிழ்நாடு கரைப்பகுதியில் 20 திமிங்கலச் சுறா இனங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. சுறாக்களின் உலகில் இவை மிகப்பெரிய மீன்கள்.
12 மீட்டர் வரை நீளம் உள்ள இவை கடலில் 2,000 அடி ஆழத்தில் வாழ்கின்றன. சில பெரிய மீன்களை உணவாக உட்கொள்வது உண்டு என்றாலும், இவை பெரும்பாலும் சிறிய மீன்களையே உணவாகக் கொள்கின்றன. இவை வயதிற்கு வருவதற்கு நீண்ட காலம் பிடிக்கிறது. இணை சேருவதற்குரிய பக்குவத்தை மெதுவாகவே அடைகின்றன. குறைவான குட்டிகளையே ஈனுகின்றன.
இதனால் இவற்றின் எண்ணிக்கை உயர வாய்ப்பு குறைவு. இவற்றின் துடுப்புகளுக்கு அதிக கிராக்கி உள்ளது. முன்பு இந்தியாவில் இருந்து இது வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. இதனால் இவை அதிகமாக வேட்டையாடப்பட்டன. இப்போது இது தடை செய்யப்பட்டுள்ளது.
2010-இல் எண்ணிக்கை பெருமளவில் குறைந்ததால் இவை பாதுகாக்கப்பட வேண்டிய வனவிலங்குகளின் பட்டியலில் முதல் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளன. அழியும் கடற்சூழல் மண்டலத்தைக் காக்க உதவும் இந்த உயிரினங்கள் அழியாமல் காப்பாற்றப்பட வேண்டும்.
- சிதம்பரம் இரவிச்சந்திரன்