முதன் முதலாக
பெண்ணை வருணிக்கத்
தேர்ந்தெடுத்த வார்த்தை எது?

ஆதாமின் முத்தம்
ஏவாளின்
எந்த பாகத்திற்கு
முதலில் கிடைத்திருக்கும்?

பெண்ணின் கூந்தலுக்கு
முதன் முதலில்
சூட்டப்பட்ட பூ எது?

பெண் முதன் முதலில்
எதற்காக
ஆடைக்குள் தன்னை
மறைத்துக்கொண்டாள்?

பெண்ணின் கண்ணீர்
முதன் முதலில்
எதன் பொருட்டு
சிந்தப்பட்டிருக்கும்?

வரதட்சிணையால்
வதைக்கப்பட்ட
முதல் முதிர்கன்னி
மாத விலக்கும் நின்றுபோனதை
யாரிடம் சொல்லியிருப்பாள்?

தாய்ப்பாலுக்குப் பதில்
கள்ளிப் பால் ஊட்டப்பட்ட
முதல் பெண் சிசு எது?

ஆண்களின் தேசத்தில்
கேள்விகளுக்குள் சிக்கிய
பெண்ணை மீட்க
எந்தப் பெண்
முதன் முதலில்
போராளியானாள்?

அவளின்
கடைசி வாரிசிடம் கொடுத்து
கிழித்தெறியச் சொல்லுங்கள்
இந்தக் கவிதையை

Pin It