ஜன்னலைத் திறந்தால்
கடல் தெரியும் வீடு

Beach Houseகாற்று சுழன்றுபோன பாதையில்
குறுக்காக விழுந்துகிடக்கும் மரத்தில்
சிதைந்த கூட்டில் இரண்டொரு குஞ்சுகள்
இரை பொறுக்கப்போன தாய்
மாலை திரும்பிவந்து மரத்தைத் தேடும்

ஜன்னலைத் திறந்தால்
கடல் தெரியும் வீடு

கணினியைத் திறக்கிறேன்
இன்று வந்திருக்கும் மின்னஞ்சல்களை வாசிக்கிறேன்
கவித்துவமான ஒரு வரி
மற்ற எல்லாவற்றையும் மறக்கடித்து விடுகிறது
தெய்வம் போலத் திடீரென மழை கொட்டுகிறது

ஜன்னலைத் திறந்தால்
கடல் தெரியும் வீடு

பேருந்தின் ஜன்னல் வழியே
மலை கடந்துகொண்டிருக்கிறது
பாறை விளிம்பில் நின்று தாவி
கொழுந்தைத் தின்ற அந்த ஆடு
யார்யாருக்கோ உணவாகியிருக்கும்

ஜன்னலைத் திறந்தால்
கடல் தெரியும் வீடு

யாரோ யாரையோ திட்டிக்கொண்டிருக்கிறார்
வாகனங்கள் விரைந்து நிறுத்தப்பட்டு
மோதிக் கொள்ளும் சப்தமானது
தேனீர்க் கடையின் திரைப்படப் பாடலிலிருந்து
கவனத்தை மாற்றுகிறது

ஜன்னலைத் திறந்தால்
கடல் தெரியும் வீடு

திருப்தியான சம்போகம் கொண்ட
உடல்களிலிருந்து பரவும் வாசனை
பக்கத்து வீட்டில் கொதிக்கும்
மீன் குழம்பின் மணம்
யார் வீட்டுத் தொலைபேசியோ
ஒலித்துக்கொண்டிருக்கிறது

ஜன்னலைத் திறந்தால்
கடல் தெரியும் வீட்டில்
கண்ணாடித் தொட்டிக்குள்
நீயும் நானும் மீன்கள்


மாலதி மைத்ரி இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.