அந்த...
பாழடைந்த கதவுகளுக்குள்
இன்றுவரை...
அடைபட்டு தேங்கிக்கிடந்த
எங்கள் இலட்சியங்கள்
உடைத்துக்கொண்டு வெளியேறியது...!

ஒவ்வொரு...
கணப்பொழுதின் இடையிலும்
நாளை
விடிகாலை வருமென்ற எதிர்பார்பில்
ஏங்கிக்கிடந்த
அந்த...
விடுதலைசுமந்த
மாவீரம் ஓய்வெடுக்கும்
துயிலும் ஆலயங்கள்
இப்போது...
நின்மதி பெருமூச்சுவிட்டு
நெஞ்சுநிமிர்த்தி
இறுமாப்புக் கொண்டிருக்கும்...!

இதயத்தில் கனத்து
அடிக்கடி உரசி வலித்து
உறைந்துகிடந்த
பொறுமை என்ற மௌனம்...
ஊதிவெடித்து
ஏதோ ஒரு உணர்வுவந்து
அந்த இடத்தை
நிரப்புகிறது எங்களுக்கு...!

வெள்ளைக்காரனின்...
இனப்புரியாத பாதைவழியே
மணித்தேர் வேசத்தில் வந்த
சவஊர்தியில்...
ஊர் ஊராய் கொண்டுலாத்திய
அவர்களின்...
சமாதானப் பிசாசு
இப்போது...
தொடங்கப்பட்ட புள்ளியில் வந்து
செத்துக்கிடக்கிறது....!

செஞ்சோலைக் குஞ்சுகளின்
பிஞ்சுரத்தம் கண்டும்கூட
இளகாத மனநிலையில்தான்
இன்றும் உலகம்...!

நிம்மதியிழந்து...
சொல்லாமல் கலங்கும் மூச்சுக்காற்றும்
கண்மணிகடந்து...
கன்னத்தில்விழுந்த கண்ணீர்துளியுமாய்
நேற்றுவரை...
மரித்துப்போன
உணர்வுகளின் எண்ணக்கனவுகளை
அள்ளியணைத்து
உயிர்கொடுத்த
முதல்வன் மதியுரைக்க....
சிலுவைகள் சுமந்தபின்பு
பயணம்தொடர்கிறது....
புதிய வாழ்வொன்றின்
சுவடுகளைத்தேடி...!

த.சரீஷ், பாரீஸ் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.