பெற்றெடுத்த பிள்ளை பிறப்பளித்த அன்னையென
சுற்றிநிற்கும் சுற்றத்தார் யாவர்க்கும் - மற்றிவ்
வுலகினில் வாழும் உயிர்களனைத் திற்கும்
நலனே நினைப்பதாம் அன்பு

பொன்னாலே ஆலயமொன் றமைத்தாலும்
பூவாலே பூஜைகள் செய்தாலும்
எந்நாளும் இறையோனை நினைப்பதுவாய்
பன்னாட்கள் விரதம்மேற் கொண்டாலும்
பெண்மீதும் மண்மீதும் பொன்மீதும்
கொண்டஆசை அத்தனையும் கொன்றாலும்
அன்புள்ளம் இல்லாத பேரானால்
இறையோனைச் சரண்புகுதல் இயலாதே

மண்ணோடு புரளும்புழு வானாலும்
விடங்கொண்டு தீண்டும்பாம் பானாலும்
எண்ணிடையே எல்லாம்ஓர் உயிரென்னும்
உண்மையினை உள்நிறுத்தி யார்மாட்டும்
அன்புடையார் எல்லோரும் மேலோர்இங்(கு)
அஃதில்லா தார்யாருங் கீழோர்மெய்
அன்புடையார்க் கேஇறைவன் அருளுண்டாம்
அன்பில்லா தார்க்கென்றும் வேதனையே

சொல்லாலே விளங்காதே அன்பிங்கே
சொற்களினால் விளக்குதலும் இயலாதே
பல்லோரும் வணங்குகின்ற இறையோனைச்
சில்லோரே தாரணியில் உணர்வதுபோல்
நல்லோராய் வாழ்வாரே யானாலும்
சில்லோரே அன்புதனை உனர்ந்திடுவார்
எல்லாமாய் விளங்குகின்ற இறையோனை
உணர்விக்கும் நெறியென்றால் அன்பொன்றே

இன்பத்தின் பொருளறியார் அன்பிலாதார்
எஞ்ஞான்றும் பிறர்மகிழ அன்பளித்தே
இன்புறுவார் நெஞ்சத்தால் அன்புடையார்
தாரணியின் அன்பொன்றே சிவமென்றார்
முன்னோரும் சொன்னதுவே இன்னார்க்கும்
அன்புடையா ரானவர்கட்(கு) உண்டெனினும்
துன்பெல்லாம் துரும்பாகும் அன்புடையார்
மன்னுலகும் கண்டவராம் மண்ணகத்தே 

இராஜகுரு இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.