Loversநீ வரைந்த கோலத்தின்
வண்ண மயில்கள் அகவி விடியுமென் காலையில்
பனித்த கூந்தலுடன் தேனீர் கொணர்வாய்
முந்தைய இரவின் மீந்த காதலை இழுத்தணைக்க
மாவிளந்தளிரின் பெயர் சூட்டப்பெறாத
வண்ணத்தினாலான உன் வெட்கம்
காதோரச் சுருள்முடியில் நனைந்து நிற்கும்
பொய்க்கோபம் சிணுங்கி
மார்பில் கைவைத்துத் தள்ளுவதாய் பாவித்தும்
சுற்றிய கரங்களைத் தாண்டாது நிற்குமுனை
மீண்டுமாய்க் குளிக்க வைக்கிற பகற்பொழுதுகள்
சொல்லப்போனால் வெட்கமற்றவையே

முன்னறையில் காய்வெட்டும் அம்மாவின்
தொலைக்காட்சிக் கவனம் அறிந்தவனாகவே
அடுக்களை நுழைவேன் திருட்டுப் பூனையென
வெகு புதிதாய்க் கற்றிருக்கும்
சமையல் கவனத்தில் ஆழ்ந்தவளை
பின்னாலணைக்கப் பதறும் அடுப்பின் நீலச்சுவாலை
செல்லமாய்ச் சலித்து சமையலின் வேகங்குறைத்து
திட்டுவதாய்க் கொஞ்சித் தீர்ப்பாய்; பின்
காய்வெட்டி முடிந்து இங்கிதமாய்
கதைபேசச் சென்றுவிட்ட அம்மாவினை
யாரழைத்து வருவதென குழம்பிச் சிரிப்போம் நாம் 

கோகுலன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

 

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.