Loversவெட்கத்தையுமுன் மிகைத்திருக்கும் அழகையும்
ஒன்றாய்ப் பிசைந்து மௌனத்தால் தட்டி
என் பார்வையிலடித்துக் காய்த்து
எல்லாமொன்றாய் அடுக்கி மூட்டி
என்னிலேயே விறகென எரித்தாய்
நன்றாயெரியட்டுமென விட்டுப்பின்
அனுதினமும் அருகிலேயே நடமாடியென்
உயிரின் பதம் பார்த்தாய்
தெளிந்த நீரும் கறையற்ற நிலவுமென
என்னிதயம் கண்டதில்
கெட்டித்தனமாயுள் நுழைந்து
இறுக்கமாகப் பூட்டிக்கொண்டாய்

யாரும் தேடித் திறந்திடக் கூடாதென்ற
உறுதியான வேண்டுதலோடு நம்
காதல் நிரம்பிய தலை சுற்றிச் சாவியை
கால நெருப்புக்குள்
எறிந்திட்டாய் எரித்திட்டாய்
இனி எப்பொழுதும்
என் மனக்கதவு வழி எவளும் வராதபடி
அது பூட்டியே கிடக்கட்டும்
நானெங்கும் அசையா வண்ணம்
காதலுக்கும் காவலுக்கும்
உள்ளேயே உன்னை வைத்திரு 

எம்.ரிஷான் ஷெரீப், மாவனல்லை, இலங்கை. இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

 

Pin It