boy
நாம் எப்பொழுதெல்லாம்
நிர்வாணமாய் இருந்திருக்கிறோம்?

உலகின்பால் பிறத்தலிலும்
உடலின்பால் இறத்தலிலும்
சுத்தத்தின்பால் குளித்தலிலும்
சுகத்தின்பால் கூடலிலும்
நாம் நிர்வாணம் தரித்திரிக்கிறோம்.

சரி,
நாம் எப்பொழுதெல்லாம்
நிர்வாணமாய் உணர்ந்திக்கிறோம்?

மனைவியின் தோழி ஒருத்தி
'முகம் பார்த்து பேசுங்கள்'
என்ற பொழுது என்
மேலாடைகள் களையப்பட்டன...

கர்ப்பினியை கண்டுகொள்ளாத
பேருந்து பயணங்களில் என்
கீழாடைகள் கிழிக்கப்பட்டன

சிறுவன் பரிமாற
சிரித்துண்ட சிற்றுண்டி நிமிடங்களில்

அடிபட்டுகிடந்தவனைவிட
அலுவலக கடிகாரம்
பெரிதாய்த் தெரிந்த நொடிகளில்

கருப்பான குழந்தையென
கொஞ்சாத தருணங்களில்

இப்படி அன்றாட வாழ்வின்
கொடூர நேரங்களில்
நானே திரௌபதியாய்
என் தவறுகளே துச்சாததனாய்
மேலாடைகள் களையப்பட்டும்
கீழாடைகள் கிழிக்கப்பட்டும்
உள்ளாடைகள் கூட
ஒவ்வொன்றாய் உருவப்பட்டும்,
அங்காடிதெருவில் அலைகின்ற
நிர்வாண நாய்போல
நிற்பதுவாய் என் நெஞ்சம்
நிற்காமல் சொல்கிறது

உங்களுக்கு எப்படியென
எனக்குத் தெரியவில்லை...
அன்பாய்ச் சொல்லுகிறேன்
'ஆடைகள் பத்திரம்'....!

த.ஜெகன், கரூர்...

த.ஜெகன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

 

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.