குழந்தையைப் படுக்கையில் வைத்து
தின்று முடித்த பாம்பு மெல்ல நகர்ந்து செல்கிறது
பாம்புகள் காடுகளை நிறைத்துவிட
Eelam Children
காடுகள் மழையை நிறைத்துவிட
மழை இரவை நிறைத்துவிடுகிது.

உன்னைப் பிரிந்த சூரியன் எழும்பியிராத
கறுப்புக் காலையின் நாள்
மீண்டும் வருகிறது
கடைசியாய் அருந்திய தேனீர்
நீ ஊட்டிய கேக்
தீர்ந்து பசியெக்க தொடங்கிய நாள் வருகிறது
நீ என்னைப் பெற்றதும்
நான் உன்னைப் பிரிந்ததுமான நாள்
மெல்ல மெல்ல வந்துவிடுகிறது.

நீ எனது புத்தகங்களை விட்டுச்சென்றிருக்கையில்
நனைந்தழிந்த புகைப்படங்களின் குறையில்
எனது முகம் தேடுகிறாய்.

முதலைகள் ஊர்களுக்குள் புகுந்தன
குளங்கள் வற்றிவிட
ட்ராங்கிகள் நீந்துகின்றன
ஒவ்வொரு ஊரும் நகரும் வீழ்கிற பொழுது
உன்னைப்பிரிந்த வலியெடுக்கிறது.

குளங்களை படைகள்
குடித்து விட்டு எறிகிற எறிகனைகள் விழும்
மரங்களின் கீழே
உன்னை தின்பதற்காய்
அலையும் பாம்புகளை கண்டேன்.

தூக்கமும் கண்களும்
மழையில் தொலைந்து விடுகிறது
குழந்தைகளை பாம்புகள் இழுத்துச்செல்வதாய்
இறுக அணைத்துக்கொள்கையில்
மழை தாய்மாரை இழுத்துச் செல்கிறது.

மரங்களின் வேர்களினிடையே
உன்னோடு பொறுத்துவிடுகிற
எனது புகைப்படங்களில் பாம்புகள் அசைகின்றன
சமையல் பாத்திரங்களில் பசி நிரம்பியிருந்தது.

முதலைகள் மாமரத்தை தின்றுவிட
மழை வீட்டை தின்றுவிடுகிறது
படைகள் கிராமத்தை தின்று விடுகின்றனர்
முழுக் குழந்தைகளையும் தின்பதற்காய்
சருகுகளினிடையே பாம்புகள் காத்திருக்கின்றன.

உன்னைப்பிரிந்து வந்த எனது பிறந்தநாள்
தாங்கமுடியாத
தோல்வியையும் அவலத்தையும் நிறைத்து
மழையில் நனைந்த
அடுப்புக்கற்களினிடையில் கிடக்கிறது.
---------------------------------------------------------------------------

24.10.2008 அம்மாவைப் பிரிந்த எனது பிறந்தநாளை நினைவு கூர்ந்து

- தீபச்செல்வன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It