அன்று காணாமல் போன
அந்த சொல்லை மட்டும்
இன்று கண்டுபிடிக்க நேர்ந்தால்
நாம் இப்பொழுது
ஓர் அந்தியை சிருஷ்டிக்க இயலும்
சுவரில் பதுங்கிப் பதுங்கிப் போகும்
சங்குப் பூனையையும்
அதன் நிழலையும்
சேர்த்தே படைக்க முடியும்
வெண்கொத்து நாரைகளை
சரியான பாதையில்
திசை திருப்பி விட முடியும்
மனதில் ஒடிக்கொண்டேயிருக்கும்
அந்த நதியை
சுதந்திரமாகவே விடுவித்து விடலாம்
மீண்டும் நீ ஆழமான
புன்னகை சிந்தும் போது
நான் சொல்வேன்
"கண்ணே என்னையும்
ஒரு சொல்லாக மாற்றி
காலத்தை முன்னும் பின்னுமாக
நகர்த்திக் கொண்டேயிரு" என்று
- தங்கேஸ்