எதிர்பாராத நேரத்தில்
ஒரு விண்மீன் உதிர்ந்து விழுகிறது
பறந்து கொண்டிருக்கும்
ஒரு செம்போத்து
தரையில் தலை மோதி சிதைகிறது
மிகப் பலவீனமானதொரு தெரு நாய்
தன்னை நிழலைப் பார்த்து
ஒரே ஒர் குரைப்பு மட்டும் குரைத்து விட்டு
நிறுத்திக் கொள்கிறது
நாற்புறமும் சுழலும்
அதன் களங்கமற்ற கண்களை
எப்படி எதிர்கொள்வதென்று தெரியவில்லை
நடுநிசி ஆன பின்பும்
குழந்தையின் அழுகையை
நிறுத்த முடியவில்லை
ஒரு வீட்டில்
அமரர் ஊர்தியும் ஆம்புலன்சும்
மாறி மாறி ஒலி எழுப்பியபடியே
இந்த தெருவின் தூக்கத்தை
சிதைத்துப் போகின்றன
எல்லாவற்றையும் பார்த்த பின்பும்
சிறிய மாற்றமும் இன்றி
வானமெல்லாம் நிரம்பிக் கிடக்கும் வெறுமை
பூமியை வெறித்த வண்ணமே
இருக்கின்றது இரவு முழுவதும்
புல்லாங்குழலின்
துளைகளின் வழியே கசியும் இசை
கடைசி புகலிடம் கேட்பது
நமது இதயத்தை தானே ?
- தங்கேஸ்