1.
உன்னை நினைவுபடுத்தும்
எல்லாவற்றிலிருந்தும்
விலகி நின்று பார்க்கிறேன்.
ஆனால் என்னிலிருந்து
என்னால் ஒருபோதும்
விலக முடியவில்லை
---
2.
பெரிய கதவுகள்—
பெரும்பாலும்
மூடியே இருப்பவைதான்.
---
3.
நீ என்னை விரும்புகிறாய்
என்று நினைத்துக்கொள்கிறேன்;
குறைந்தபட்சம்
என் நினைவுகளையாவது
சமாதானப்படுத்திக் கொள்ள.
---
4.
நிராகரிப்புகள்
வருத்தமளிக்கின்றன;
ஆனால்
அச்சுறுத்துவதில்லை.
நிபந்தனையற்ற அன்பு
சந்தோஷப்படுத்துகிறது;
ஆனால்
பயமுறுத்துகிறது.
---
5.
புலம்பலுக்கும் கவிதைக்கும்
சின்ன வித்தியாசம் தான் —
உனக்குப் பிடித்தால் கவிதை,
பிடிக்காவிட்டால்…
புலம்பல்.
---
6.
நிராகரிப்புகளை
நேசிக்கிறேன் நான்.
என்னை நேசிக்காதவர்களையே
நேசிக்கும் போது,
என்னை நேசிப்பவர்களை
நேசிக்காமல்
எப்படி இருக்க முடியும்?
ஆகையால்
நிராகரிப்புகளையே
நேசிக்கிறேன் நான்.
---
7.
உன் அன்பிற்கு ஈடாகவும்
அதிகமாயும் வைக்க
ஆயிரம் மடங்கு அன்பு
என்னுள் உண்டு.
ஆனால்
உன் நிராகரிப்பிற்கு ஈடாக
வைக்க —
இந்தக் கவிதையைத் தவிர
வேறொன்றில்லை.
என்னை விடவும் அதிகம்
நிராகரிக்கப்பட்டதும்,
என் கவிதையை விடவும்
வேறொன்றில்லை.
கவிதையோடு தான்,
கவிதைக்குள் தான்,
கவிதையால் தான்,
இந்தக் கவிதையாகத்தான்
வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.
- அ.சீனிவாசன்