கவனிப்பாரற்றுக் கிடக்கும் மரப்பாவையைப் போல்
தனித்து விடப்பட்டிருக்கிறேன்
நீளும் இரவொன்றில்
நீயற்ற தனிமை
நீரின்றி துடிக்கும் மீன்களென மாற்றுகிறதெனை
நீ கொடுத்த கோடி முத்தங்களும் அதன் சத்தங்களும்
தீண்டலின் ஞாபகங்களாய்
நெஞ்சம் முழுக்க படர்ந்தலைகிறது
நான் மட்டும் என்கிற
ஏக்கப் பெருமூச்சு
குத்தீட்டியைப் போல்
ஆழ்மனதிலிறங்கி
சலனப்படுத்துகையில் அனைத்தையும்
அறிந்துவைத்தாற் போல்
முண்டியடித்து வந்து நிற்கிறது உன்னுடனான
பழைய இரவின் நினைவுகள்
இருப்பினும் பதிலுரைத்துப் போ
நீயில்லாத இரவுகள்
உதிரும் இரவுகளாய்
உணர்த்தியியம்புகையில்
என்னை
எதைக் கொண்டு ஆற்றுப்படுத்த
வேறு எதுவும் சொல்வதற்கில்லை இனியும்
என்னைவிட்டு பிரியாதிரு
என்னோடு இரு

- நீதிமலர்

Pin It