நினைவுப் புத்தகத்தின்
ஒவ்வாரு பக்கத்தையும்
புரட்டிப் பார்த்துவிட்டேன்

கடைசியாக எழுதிய
அந்தக் கவிதையை
எங்கே தொலைத்தேன்!

மகளின்
நோட்டுப் புத்தகத்தில்
கிழித்த
அந்த ஒற்றைத் தாளில்
அவசரமாய் எழுதி…
எங்கே வீசினேன்?

வழக்கமாய்
துண்டுக் காகிதங்களைப்
பத்திரப் படுத்தும்
படுக்கையின் கீழே
அது இல்லை

பழைய காகிதங்களைப்
பொறுமையின்றிக்
கிழித்துப் போட்ட
அவசரத்தில்
அந்தக் கவிதையும்
குப்பைக்குப் போனதோ?

குழந்தைகள்
கிழித்து வீசினவோ?
மனைவி
சுருட்டிக் காது குடைந்து
கசக்கிப் போட்டாளோ?

கவிதை.. கவிதை..
அந்தக் கவிதையை
மீண்டும் எழுதிவிடலாம் தானே!

கவிதையின்
சொல்லையும் பொருளையும்
கொஞ்சம் அசைபோட்டால்
மீட்டு விடலாம்

ஆனால்
அந்தக் கவிதையை…
அந்தக் கவிதையை…
எங்கிருந்து மீட்பேன்?

- மலையருவி

Pin It