இந்த வருடமும் கோலாகலமாக நடந்தது
எங்கள் ஊர் கோவில் திருவிழா.

நாக்கில் அலகு குத்தி
ஊர்வலமாக வந்து
நேர்த்திக் கடன் செலுத்தினார்
மாணிக்கம்

திருவிழா பார்க்க அயல்நாட்டு
நண்பரை அழைத்து வந்திருந்தார்
அங்கண்ணன் மகன்

ஓடிப்போயி கல்யாணம் பண்ணிக்கிட்ட
மகேசு மினிக்கிகிட்டு வந்து புள்ளைகளோட
ராட்டினம் சுத்துனத
ஊரே அதிசயமா பாத்துச்சு

கோணம்பட்டி ராசு வீட்ல
நாலு ஆடு அடிச்சு கறி சோறு போட்டாங்க
சின்னையா வாத்தியாரு கூட வந்து
சாப்புட்டுட்டுப் போனாரு

மேலத்தெரு அழகர் தான் ராஜா
கீழத்தெரு மல்லிகா தான் வள்ளி
பழைய பாட்டும் புதுப்பாட்டும் கலந்து
கலக்கிப்புட்டாகல்ல நாடகத்த

எம்பாடு தேவல
ஒரு காலு சூம்பியிருந்தாலும்
கேந்திக் கேந்தியாவது
வருசா வருஷம் திருவிழா பாத்துட்றேன்

ஜனாகி அக்காவ நெனச்சா தான் பாவமாயிருக்கு
சடங்காயிட்டான்னு சாக்குச் சொல்லி..
நிச்சியம் பண்ணியாச்சுனு..
போன வருஷம் வரைக்கும் விடல

தாலியறுத்துட்டாள்னு சொல்லி
இந்த வருசமும் விடல.

- மா-னீ

More articles by மா-னீ

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.