பூத்து, காய்த்து,
குலுங்கி நிற்கும்
மாடித் தோட்டத்துக்கு
வந்தது சோதனை

வினோதப் பூச்சிகளின்
எதிர்பாராத் தாக்குதலில்
தோட்டம் சிதைந்தது
காய்கள் கருகின
இலைகள் சுருண்டன

செடிகளை, கொடிகளைக்
காக்கும் வகையறியாக்
கவலையில் ஆழ்ந்தது வீடு

சரி, பூச்சி மருந்து தெளித்து
எரு வைத்து நீருற்றி
தோட்டத்தைக் காக்கும்
முயற்சிக்குக் கைபிசைகையில்..

உடலும் முளையும் பெருத்த
ஊர்ப் பெரியவருக்கு
எப்படியோ செய்தி தெரிந்து
ஆரஅமர அவசரமாய்க் காட்சியளித்தார்

தோட்டத்தைக் காப்பது
உன் கடமை, என் கடமை, நம் கடைமை
என உபதேசம் தொடங்கினார்

அவசரமாய்க்
கொஞ்சம் எருவும் பூச்சி மருந்தும்
கொடுத்து உதவிடும்
கோரிக்கையை
வளைந்தும் நெளிந்தும் தண்டனிட்டும்
விண்ணப்பம் செய்தோம்.

நீட்டிய கரங்களைக்
கண்டும் காணாமல்
மீண்டும் உபதேசம்..
தோட்டத்தைக் காக்கும்
எங்கள் முயற்சிக்கு வாழ்த்துரைத்தார்.

செடிகளும் கொடிகளும் வாடி வதங்கின

விளைந்த காய்கள்
பூத்த பூக்களின்
அருமை பெருமைகளைத்
திக்குகள் எட்டும்
பேசி மகிழுங்கள்
புகழ்ந்து பாடுங்கள்
இடைவிடாது, இடைவிடாது..

ஊர்ப் பெரியவரின் உபதேசம் தொடர்ந்தது
தோட்டம் அழியாது
அழியவும் விடமாட்டேன்
நம்பிக்கை முக்கியம்

வாடி வதங்கும்
மாடித் தோட்டத்தின்
மரண ஓலத்தை
மீறி ஒலித்தன
தோட்டத்தின் புகழ் முழக்கமும்
போற்றி கீதமும்.

- மலையருவி

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.