ஒரு நாள் ஒளிந்து கொண்டு
என்னைத் தேடச் சொன்னேன்
அன்றிலிருந்து பார்க்கும்
தருணமெல்லாம் நீ காட்டும்
இடத்தில் ஒளிந்து கொள்ளச் செய்து
என்னைக் கண்டுபிடித்தாய்
பிறிதொரு நாளில்
திரைச்சீலையின் பின்னால்
ஒளிந்து கொண்டு உன்னைக்
கண்டுபிடிக்கச் சொன்னாய்
நானுன்னை நெருங்குகையில்
நீயே முன் வந்து 'பே'
என்று என்னை பயமுறுத்தியதாய்
சந்தோசம் கொண்டாய்
மற்றொரு நாளில்
என்னை ஒரு அறையில் ஒளிந்து
கொள்ளச் சொல்லி விட்டு
என்னைத் தேடி மற்றொரு
அறைக்குச் சென்று திரும்பி
"என்னைக் காணோம்" என
என்னிடமே சொன்னாய்
இன்னொரு நாளுக்கான
ஏக்கத்தில் நிரம்பி வழிகிறது என் தாய்மை.

- சோமா

Pin It