உலக அரங்கில் பல்வேறு பெருமைகளை நம் நாடு பெற்றிருப்பதாக மார்தட்டிக் கொள்கிறோம். அதையெல்லாம் தூரத் தள்ளுகிற ஒரு செயல் புரையோடிக் கிடப்பதை கண்டு நாம் வெட்கப்பட்டு தலைகுனிய வேண்டியிருக்கிறது. அத்தகைய நிலைக்கு நமது ஆட்சியாளர்களும், அதிகார மட்டத்தில் இருப்பவர்களுமே காரணம் என்பதுதான்  வருந்தத்தக்கது. அந்த பெரும் கொடுஞ்செயல் ஊழலைத் தவிர வேறில்லை!

bribe1'தனிமனிதர் ஒழுக்கமும் மக்களின் பண்பும்’ என்ற தலைப்பில் நடந்த கருத்தரங்கில் பேசிய நமது துணை குடியரசு தலைவர் தமீம் அன்சாரி, பொதுமக்களின் சேவையில், குடிமைச் சேவைகள், சட்டம் மற்றும் நீதி ஆகிய மூன்று துறைகளில் ஒழுக்கப் பண்பாடு என்பது இன்று மிகவும் மோசமான நிலையில் இருப்பதாகவும், பொது வாழ்வில் ஊழல் என்பது நாட்டின் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலாக இருப்பதாகவும் கவலை தெரிவித்தார். அதோடு நில்லாமல், பொருளாதாரத்தின் பல்வேறு பிரிவுகளிலும் ஊழல் அதிகரித்ததன் விளைவாக கருப்புப் பண உற்பத்தி, கவலை தரும் பொருளாதார குற்றங்கள், மோசடிகள் மற்றும் ஊழல்கள், பயங்கரவாதத்துக்கு நிதியுதவி என்ற வடிவங்களில் சாதாரண பொதுமக்கள் அனுபவிப்பதையும் கவலையுடன் சுட்டிக்காட்டியிருந்தார்.

இந்தக் கவலை குடியரசு துணைத் தலைவருக்கு மட்டும் இருப்பதாக யாரும் கருதிவிட வேண்டாம். நம் நாட்டில் வாழ்கிற கடைக்கோடி குப்பன், சுப்பன் வரை அத்தனை பேருக்குமே அந்தக் கவலை இருந்து வருகிறது. காரணம், நம் நாட்டில் பிறப்பு முதல் இறப்பு வரை பணம் இல்லாமல் எந்தவொரு காரியத்தையும் செய்ய முடியாது என்ற கவலை ஒரு புறம் இருந்தாலும், மறுபுறம் கையூட்டுப் பணம் கொடுப்பவரின் எண்ணிக்கையும், அதை வாங்கும் அதிகார மட்டத்தினர் எண்ணிக்கையும் குறைந்தபாடில்லை.
 
பணம் பாதாளம் வரை பாயும் என்று யாரோ சொல்லிய பழமொழி இன்று நூற்றுக்கு நூறு விழுக்காடு உண்மையாகவே இருந்து வருகிறது. அலுவலகத்தில் ஒரு வேலை ஆகவேண்டி சென்றால், கடை நிலை ஊழியரில் தொடங்கி அத்துறை தலைமை வரை அளந்து கொடுத்தாக வேண்டும். பணம் கொடுக்காவிட்டால், அது இல்லை; இது இல்லை என்று சொல்லி பல நாட்கள் இழுத்தடிக்கப்பட்டு, ஆண்டுகள் உருண்டோடினாலும் அது நம் கைக்கு வந்து சேரவே சேராது. இந்த நிலையை நம் நாட்டில் உள்ள யாரும் மறுப்பதற்கில்லை.

வானம் பார்த்த பூமியே உலகமென எண்ணி வாழ்கிற ஏழை உழைப்பாளியின் மகள் திருமணத்திற்கு உதவியாக இருக்குமென மாநில அரசு, மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவித் திட்டத்தையும், கருவுற்ற பெண்களுக்கு உதவித் தொகை திட்டத்தையும்  செயல்படுத்தி வருகிறது. எந்தவொரு திட்டமும் முழுமையாக சேராத நம் நாட்டில் கிராமப்புற ஏழைப் பெண்களுக்கான இந்த உதவித் தொகை திட்டங்களும் சேருமா என்ன? முழுமையாக கிடைப்பதில்லை. அதிகாரிகள் மத்தியில் பரவியிருக்கிற ஊழல் என்னும் விஷமே இந்த நிலைக்கு காரணம். அதிகாரிகள் கேட்கிற கையூட்டுப் பணத்தை கொடுக்காததால், உதவித் தொகைக்கு விண்ணப்பித்த ஒரு பெண்ணுக்கு குழந்தை பிறந்து அது நடக்கும்போது கூட திருமண உதவித் தொகை கிடைப்பதில்லை என்பது வெட்கக்கேடானது.

இப்படி அரசு துறை அலுவலகங்களில் கையூட்டு புழங்குவதை அரசு அறிந்திருக்காமல் இல்லை. ஊழலை ஒழிக்க நடவடிக்கைகள் எடுக்கும் அரசின் முயற்சி அவ்வப்போது வெளியே தெரியாமலில்லை. ஊழல் ஒழிப்பு துறை அதிகாரிகளால் நாள்தோறும் பல ஊழல் பெருச்சாலிகள் - அதிகாரிகள் கைது செய்யப்படுவதை ஊடகங்கள் வாயிலாக அறியமுடிகிறது. அத்தகைய கைது நடவடிக்கையால் ஏதேனும் பயன் விளைந்ததுண்டா? இல்லைவே இல்லை.

bribe2ரூ.2500 இலஞ்சம்: கள்ளக்குறிச்சி மின்வாரிய வணிக ஆய்வாளர் கைது, ரூ. 2,000 இலஞ்சம்: மின் வாரிய அலுவலர்கள் இருவர் கைது, இலஞ்சம் வாங்கிய வன அதிகாரிகள் 2 பேர் கைது, ரூ. 500 இலஞ்சம் வாங்கிய விழுப்புரம் நர்ஸ் கைது, 17.45 இலட்சம் ரூபாய் கையாடல் கூட்டுறவு வங்கி செயலர் கைது, கர்ப்பிணி உதவித்தொகை வழங்க இலஞ்சம் வாங்கியதாக நர்சு மீது வழக்கு, இலஞ்சம் வாங்கிய ஊராட்சி ஒன்றிய அலுவலக ஊழியர் கைது,  ரூ.50 ஆயிரம் இலஞ்சம் வாங்கிய என்.எல்.சி. பொது மேலாளர் கைது..... இப்படி நாள்தோறும் ஊழல் செய்த - கையூட்டு பெற்ற பல துறைகளை சேர்ந்த அதிகாரிகள் கைது செய்யப்படுகிறார்கள்.

கைது... வீட்டில் சோதனை, ஆவணங்கள் கைப்பற்றல், பணியிடை நீக்கம்... மீண்டும் பணி... இதுதான் ஊழல் செய்யும் அதிகாரிகள் மீதான தற்போதைய நடவடிக்கைகள். இந்த நடவடிக்கைகளால் எந்தவொரு அதிகாரியும் அச்சமடைந்து கையூட்டு வாங்காமல் இருப்பதில்லை. ஊழல் அதிகாரிகளுக்கு பெரிய தண்டனை ஏதும் வழங்கப்படுவதில்லை என்பதால்தான் மற்ற அதிகாரிகள் அச்சப்படாமல் தங்களது ஊழல் பணியை தொடர்கிறார்கள். இப்படி நடப்பதால்தான் உணவில் தொடங்கி உயிரைக் காக்கும் மருந்துகள் வரை காலாவதிகளும் கலப்படங்களும் புகுந்திருக்கின்றன. இந்தக் கொடுஞ்செயலை செய்த கொலையாளிகள் அரசதிகாரிகளின் துணையின்றி துணிந்து செய்திருக்க முடியுமா? ஏராளமான அப்பாவி உயிர்கள் செத்து மாண்டாலும் பரவாயில்லை; பல கோடிகளை சேர்த்து வைத்து சுகமான வாழ்வை அனுபவித்து, மீதியானதை பிள்ளைகளுக்கு விட்டு செல்வது என்ற இலக்கு மட்டுமே ஆட்சியாளர்களுக்கும், அதிகாரிகளுக்கும் இருக்கிறது. 

இதற்கெல்லாம் முடிவு கட்ட யாராலுமே முடியாதா என்ற கேள்விக்கு ஒரே விடை ஆழ தேடி வேரறுப்பது. அதாவது ஒரு விஷச் செடியை அழிக்க வேண்டுமானால் கிளை நுனிகளை முறித்துவிட்டால் மட்டும் போதாது, அதன் வேர் பகுதியை தோண்டி முழுவதுமாக அழிக்க வேண்டும். அது போலவே நம் நாட்டிலும் சமுதாயத்திலும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள ஊழல் என்னும் அரக்கனை அழிக்கவும் வேண்டும். இதற்காக துணிச்சலான அதிரடியான நடவடிக்கைகளை எடுத்தாக வேண்டும். அந்த நடவடிக்கையை கண்டு ஊழல் பெருச்சாளிகள் கொந்தளிக்கக் கூடும். அவர்கள் என்ன செய்தாலும் தீர்க்கமான நடவடிக்கையை எடுத்தாக வேண்டும்.

நடவடிக்கையை யார் எடுப்பது? - அரசும் ஆட்சியாளர்களும் தான்!

ஆனால், பணியிடை நீக்கம் செய்யப்படுகிற ஊழல் செய்யும் அதிகாரிகள்,  ஆட்சியாளர்களின் உதவியை நாடி மீண்டும் பணிக்குத் திரும்பிவிடுகிறார்கள். இந்த நிலையை மாற்ற வேண்டும். ஊழல் செய்யும்போது கையும் களவுமாக பிடிபட்டால், வழக்கு விசாரணை ஏதுமின்றி அந்த இலஞ்சம் வாங்கிய அதிகாரியை மீண்டும் பணியில் எங்கும் சேராதபடி பணி நீக்கம் செய்ய வேண்டும். அதோடு நில்லாமல் அவரின் சொத்துக்கள் அனைத்தையும் கண்டறிந்து அரசுடைமையாக்க வேண்டும். அப்போதுதாவது அதிகாரிகள் திருந்துவார்களா என்பதைப் பார்ப்போம்.

கடை நிலை பதவி - உயர் பதவி, அதிகாரிகள் - ஆட்சியாளர்கள் என வலைப்பின்னலாக இருக்கிற இந்த ஊழலை ஒழிக்க கடுமையான சட்டங்களை ஆட்சியாளர்கள் கொண்டுவருவார்கள் என்று சொன்னால் பொதுமக்கள் சிரிக்கிறார்கள். வேறென்ன சாதாரண மக்களால் செய்ய முடியும்!

- முருக சிவகுமார் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Comments

1 comment

1
puduvaignanakumaran
அதிகாரிகள் ஊழல் பெருகுவதற்குக் காரணம் அவர்கள் மட்டுமல்ல. இப்படிச் சொல்வது அவர்களது ஊழலை நியாயப் படுத்துவதற்காக அல்ல. அவர்கள் ஊழலில் அவர்களைவிட உயர் நிலையில் உள்ள அதிகாரிகள், அரசியல்வாதிகள் ஆகியோருக்கும் பங்கு உண்டு என்பதே உண்மை. அவர்களுக்கும் சேர்த்து இவர்கள் வாங்கி அவ்வப்போதோ, தேர்தல்களின் போதோ அவர்களுக்கு உரிய பங்கை அளித்து விடுகின்றனர். அரசு ஊழியர்களின் ஊழல் பொது மக்களிடம் மட்டுமன்றி மற்ற அரசு ஊழியர்களிடம் கூட அவர்களின் வோய்வூதியம், வைப்பு நிதியில் கடன், விடுப்புக் கால ஊதியம், பணிஇடமாற்றம் ஆகியவற்றுக்காக கொஞ்சம் கூட ஒளிவு மறைவின்றி நீள்கிறது மேலும் ஏழை எளிய மக்களின் முதியோர் , கைம்பென்களுக்கான
சொற்ப உதவித்தொகை, மாணவர் உதவித்தொகைக்கான குடியிருப்பு, வருமானச் சான்றிதழ்கள், திருமண உதவித்தொகை, ரேஷன் கார்ட், போன்றவற்றி ல் எல்லாம் கூட கொஞ்சமும் கருணை இன்றிக் கைகள் நீள்கின்றன. ஊழலோன்றே சமுதாய முன்னேற்றத்திற்கும், சமுதாய நல்லொழுக்கத்திற்கும் மிகப்பெரியத் தடைக்கல்லாக உள்ளது. உயர் அதிகாரிகள் ஊழல் ஒழிப்பில் உறுதியாக இருப்பார்களே யானால் அவர்களுக்கு மேலும், கீழும் ஊழலைத் தடுக்kkamudiyum.

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.