‘எக்காளக்ஸ மருந்திருக்கு, என்னக் கவலை?’

‘எடுத்துக் குடிச்சிடலாம் மனக் கவலை’

முதல் வரியை ஒருவர் பாட, பின் வரியை எல்லோரும் சேர்ந்திசைக்க வண்டல் மண்ணின் வாசனையுடன் ஒலித்த அந்த நடவுப்பாட்டு இப்போதும் எனக்குள் ஒலித்துக் கொண்டிருக்கிறது. ‘செவ்வரளித் தோட்டத்துல உன்னை நினைச்சேன்’ பாடலை எப்போதுக் கேட்க நேர்ந்தாலும் மனம் ஒரு மண்புழுவைப் போல சேற்றுக்குள் தன்னை அமிழ்த்திக் கொள்கிறது. சேறு அப்பிக் கிடக்கும் உடம்போடு கைகளில் நாற்று முடிச்சுகளை சுமந்து நடவு வயலில் கால் புதைய நடந்த அந்த நாட்கள் ஒரு பசுங்கனவென விரிகிறது.

நாங்கள் விவசாயக் குடிகள். திண்ணைகளில் தானிய மூட்டைகளும், கொல்லைப்புறத்தில் வைக்கோல் போருமான வாழ்வொன்று எங்களிடம் இருந்தது. நடவும், அறுப்புமே எமது ஆயுள். நடவு வயலில் நடமாடும் ஆண்களைச் சுற்றிவளைத்து பயிரை நட்டுவிட்டு சில்லறை காசு கேட்கும் பெண்களின் உழைப்பு சார்ந்த பொழுதுபோக்கும், திடீர் மழை வந்தால் நாத்து விட்டிருக்கும் பக்கத்து வயலுக்கும் சேர்த்து தண்ணீர் பாய்ச்சும் உழைக்கும் மக்களின் இயல்பான அக்கறையும், கதிர் அடித்ததும் அந்த வீட்டு சின்னப் பிள்ளைகளுக்கு ‘வாங்கித் திண்பதற்காய்’ தரும் ஓரிரு மரக்கால் நெல்லும் - வெள்ளாமை வாழ்வின் நினைவுத் தடங்கள். இப்போதும் தேநீர் கடைகளில் வெற்றிலைச் சாற்றைத் துப்பியபடி மேட்டூர் அணை நீர்மட்டம் பார்க்கிறவர்கள் எம் மக்கள். ஆனால் இன்றைய விவசாய கிராமங்கள் புதியதொரு சிக்கலை சந்தித்துக் கொண்டிருக்கின்றன.

சேறு அடிப்பது தொடங்கி நாற்றுவிடுதல், நடவு நடுதல், அறுப்பு வரைக்கும் விவசாயத்தின் எல்லாக் கூறு வேலைகளிலும் மனித உழைப்பே பிரதானம். ஆனால் டெல்டா மாவட்டங்களில் விவசாயக் கூலித் தொழிலாளர்களுக்கு கடந்த சில ஆண்டுகளாக மிகக் கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. எந்த வேலையைச் செய்யவும் ஆள் கிடைப்பதில்லை. டிராக்டர் எடுத்துக்கொண்டு ஒவ்வொரு ஊராக கூலித் தொழிலாளர்களைத் தேடிப் போகின்றனர். அப்படியும் போதுமான ஆள் கிடைப்பதில்லை. நாற்றுவிட்டு 30 நாட்களில் நட வேண்டியப் பயிர் 40 நாட்கள், 50 நாட்கள் ஆன பின்னரும் அப்படியே கிடக்கிறது. ஆள் இல்லாமல் பயிருக்கு இணையாக களை மண்டி விடுகிறது. முன்பு 30, 40 ஆட்கள் இரண்டு நாட்களில் செய்த வேலையை இன்று 10, 15 ஆட்கள் ஒரு வாரமாக செய்ய வேண்டிய நிலைமை. உறவினர்கள் எல்லோரும் ஒன்றுசேர்ந்து, ‘உன் வேலைக்கு நான், என் வேலைக்கு நீ’ என்று புதியவகையான உறவுக்கூட்டில் உழைக்கிறார்கள்.

விவசாயத்தில் பல வேலைகள் இயந்திரமயமாக்கப்பட்டுள்ளன என்பது உண்மைதான். இப்போது யாரும் ‘பணத்தேர்’ ஓட்டுவதில்லை. ஏர் ஓட்டுவது என்பதே கிட்டத்தட்ட அருகிவிட்டது. முழுக்கமுழுக்க இயந்திரங்கள்தான் உழவு வேலைகளைச் செய்கின்றன. வயலில் இருந்து தலைச்சுமையாக நெற்கட்டுகளை களத்துக்கு சுமந்து வந்து, அவற்றை அடித்து வீடு சேர்க்கும் காலமும் இப்போதில்லை. கதிர் அடிக்க இயந்திரங்கள் வந்துவிட்டன. ஆனால் எல்லா வேலைகளையும் இயந்திரங்களால் செய்ய முடியாது. நடவு இயந்திரம் நடைமுறை ரீதியாக உகந்ததாக இல்லை. அதை பயன்படுத்த விவசாயிகளிடத்தில் பெரிய மனத் தயக்கம் இருக்கிறது. நாற்று அரிக்கவும், களை எடுக்கவும் எக்காலத்திலும் இயந்திரங்கள் வர முடியாது என்றேப் படுகிறது.

உழுவது, அறுவடை போன்ற இயந்திரப் பணிகளைக்கூட எல்லா நிலங்களிலும் செய்துவிட முடிவதில்லை. சாலையின் ஓரப்பகுதியில் இருக்கும் நிலங்களுக்கு மட்டுமே இயந்திரங்கள் தோதானவை. உள்பகுதிகளில் வயல் வைத்திருப்பவர்கள் சாலையோர நிலங்களை அனுசரித்து விவசாயம் செய்ய வேண்டும் அல்லது மனித உழைப்பை நம்பியிருக்க வேண்டும். இதெல்லாம் இந்தத் தொழிலின் யதார்த்த நிலைமைகள். அதேநேரம் நெல் அல்லாத காய்கறி, பூ போன்ற விவசாயத்தைப் பொருத்தவரை, அதில் இயந்திரங்களைக் கொண்டு வர சாத்தியமே இல்லை. எந்த இயந்திரம் பூ பறிக்கும்? எந்த இயந்திரம் வெண்டைக்காயை செடியிலிருந்து பறிக்கும்? நெல் விவசாயிகளுடன் சேர்த்து முழுக்கமுழுக்க மனிதர்களே செய்ய வேண்டிய இந்த வேலைகளுக்கும் தொழிலாளர்கள் கிடைக்காமல் பலர் அல்லாடுகிறார்கள். காவிரிப் பகுதியில் ஒரு போகம் நெல் விவசாயம் முடிந்து அடுத்தப் பட்டத்தில் உளுந்து, எள், கடலை, பாசிப்பயறு போன்ற பயறு வகைகளை பயிரிடுவதுண்டு. ஓட்டுவது, விதைப்பது, களை எடுப்பது, அறுவடை செய்வது என்ற நான்கே நிலையிலான இந்த வெள்ளாமையில் ஓரளவுக்கு லாபமும் உண்டு. ஆனால் நெல்லுக்கே ஆள் கிடைப்பதில்லை என்பதால் பல பேர் இந்த பயறு விவசாயத்தை செய்வதே இல்லை. தரிசாகவே விட்டுவிடுகின்றனர்.

ஆனால் இதன் எதிர்நிலையாக கடந்த பத்தாண்டுகளில் விவசாயப் பகுதிகளில் எக்கச்சக்கமாக ஆழ்துளைக் கிணறுகள் பெருகியிருக்கின்றன. ஆற்றில் தண்ணீர் வந்தாலும், வராவிட்டாலும் வருடம் முச்சூடும் இந்த போர்வெல் நிலங்களிலும், சுற்றியுள்ளப் பகுதிகளிலும் விவசாயம் நடந்துகொண்டே இருக்கிறது. ஒரு பக்கம் வேலையின் அளவும், அடர்த்தியும் அதிகரித்துச் செல்ல, மறுபக்கம் தொழிலாளர்களின் எண்ணிக்கையும் குறைந்துகொண்டேப் போகிறது. ஆனால் இது ஏதோ திடீரென நடந்த மாற்றம் இல்லை.

விவசாயக் கூலித் தொழிலாளர்கள் என்பவர்கள் யார்? 95 விழுக்காடு தலித்துகள்தான். காலங்காலமாக நிலமற்றவர்களாக இருக்கும் தலித்துகள் நிலத்தை வைத்திருக்கும் ஆதிக்கச் சாதியினரை அண்டி பிழைக்க வேண்டிய நிலைமை. இதன் பொருட்டு தலித்துகள் சந்திக்கும் சாதி ரீதியிலான வன்கொடுமைகள் ஏராளம். இதை வெறுமனே பொருளாதாரக் காரணியுடன் மட்டும் சுருக்கி புரிந்துகொள்ள முடியாது. சமூக கௌரவம்தான் இதன் மையம். ஒரு தொழிலைத் தொடர்ந்து தன் அடுத்தத் தலைமுறையும் செய்ய வேண்டும் என்று நினைப்பதற்கு அந்தத் தொழில் குறித்த பெருமிதங்கள் வேண்டும். ஒரு தலித், தான் விவசாயக் கூலித் தொழிலாளராய் இருப்பதுக் குறித்து பெருமிதம் அடைய என்ன இருக்கிறது? குறைந்தபட்சம் தன் அடுத்தத் தலைமுறையையாவது அங்கிருந்து நகர்த்திச் செல்ல வேண்டும் என்பதே ஒருவரது அடிமன விருப்பமும், செயல்பாடுமாக இருக்கிறது.

இவ்விதம் நகரத்துக்கு இடம்பெயரும் ஒரு தலித் விவசாயக் கூலித் தொழிலாளி, முதலில் மனதளவில் சமூக விடுதலை அடைகிறார். பெரிய நிம்மதியும், ஆசுவாசமும் கிடைக்கிறது. பதற்றம் தரும் கிராமத்தின் அன்றாட வாழ்விலிருந்து சுதந்திரம் கிடைக்கிறது. உள்ளூர் கிராமத்தில் கோயிலுக்குள் நுழைய முடியாத அவரால், தஞ்சாவூர் பெரிய கோயிலுக்குள் கம்பீரமாக போய் வர முடிகிறது. எதிரில் வருவது யாராக இருந்தால் என்ன என்று நினைத்து இயல்புடன் நடக்க முடிகிறது. இவற்றால்தான் இன்று கிராமங்களில் இருந்து நகரங்களுக்கு இடம்பெயருபவர்களில் அதிகபட்சமானவர்கள் தலித்துகளாக இருக்கின்றனர். ஒவ்வொரு வருடமும் 2% விவசாயக் கூலிகள் கட்டடத் தொழிலாளர்களாகவும், சாயப்பட்டறைத் தொழிலாளர்களாகவும் இடம்பெயர்கின்றனர் என்கிறது ஓர் ஆய்வறிக்கை.

கிராமங்களில் நிலம் வைத்திருக்கும் நிறையபேர் இப்போது கொத்தனார் வேலையின் மீது நிறைய கடுப்பில் இருப்பதை கவனிக்க முடிகிறது. காரணம் விவசாயக் கூலி வேலையை விட்டு நகரங்களுக்குப் போகும் தொழிலாளர்களில் அதிகப்பட்சமானோர் கொத்தனார் வேலைதான் பார்க்கின்றனர். விவசாயத்தைவிட கூடுதல் கூலி, நிர்ணயிக்கப்பட்ட வேலைநேரம் என்பதெல்லாம் போக, அவர்கள் கொத்தனார் வேலையைத் தேர்ந்தெடுப்பதற்கான காரணம், இந்த வேலை அவர்களை அடிமைப்படுத்துவதில்லை என்பதுதான். ‘கொத்தனார், கார்பென்டர், பிளம்பர்’ என அவர்கள் பார்க்கும் வேலையின் பெயரால்தான் அழைக்கப்படுவார்கள். ஆனால் கிராமத்தில் நாலு தலைமுறையாக வயலில் வேலை பார்த்தாலும் ஒரு தலித்தால் ‘விவசாயி’யாக, குடியானவனாக ஆக முடியாது. அவர் என்றென்றைக்கும் தலித்தான். சுயமரியாதையுள்ள சமூக வாழ்வை உத்தரவாதப்படுத்தும் இந்தத் தன்மைதான் கொத்தனார் வேலையைத் தேர்ந்தெடுப்பதற்கான காரணமாக அமைகிறது. ஆகவே கூலியாள் பற்றாக்குறை என்பதை ஒரு விரிந்த கோணத்தில் இருந்து அணுக வேண்டும். வெறுமனே நிலவுடைமை மனநிலையில் இருந்து அணுகுவது சிக்கலுக்கு எவ்வகையிலும் தீர்வை அளிக்காது.

இந்த கூலித் தொழிலாளர் பிரச்சினைக்கு இன்னொரு முக்கியக் காரணம், அரசின் 100 நாள் வேலை உறுதித் திட்டம். வருடத்தின் நூறு நாட்களுக்கு தொழிலாளர்களுக்கு வேலையை உத்தரவாதப்படுத்துவதுதான் நோக்கம் என்றாலும், நடைமுறையில் காண்ட்ராக்டர்கள் துட்டு அடிக்கவும், தொழிலாளர்களை மொண்ணையாக்கவுமே பயன்படுகிறது. சும்மா கிடக்கும் கம்மாயைத் தூர் வாருவதாகச் சொல்லி மண்வெட்டியுடன் தொழிலாளர்கள் இறக்கிவிடப்படுகின்றனர். அந்த வேலை அப்போது அவசியமா, இல்லையா என்பதெல்லாம் கணக்கிலே எடுத்துக்கொள்ளப்படுவது கிடையாது. கிட்டத்தட்ட அது வெட்டிவேலைதான். இந்தத் திட்டத்தில் 80 ரூபாய் கூலி கொடுக்க வேண்டும். ஆனால் நடப்பில் 60 ரூபாய்தான் வழங்கப்படுகிறது. இரு தரப்பின் தவறுகளும், இரு முனையிலும் அனுமதித்து அங்கீகரிக்கப்படுகின்றன. தமிழகத்தின் பல கிராமங்களில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் இந்த 100 நாள் வேலைத் திட்டத்தால் முடக்கப்பட்டிருக்கின்றனர். அதிகமும் பெண்களே இந்தத் திட்டத்தில் வேலைக்குப் போகின்றனர். விவசாய வேலையில் பெண் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் குறைந்த கூலி அவர்களை இங்கு திருப்பிவிட்டிருக்கிறது. ஆனால் இதுபோன்ற அரசின் திட்டங்களை வெறுமனே ‘ஊழல்’ என்று வகைபிரிக்க முடியுமா?

அண்மையில் ‘கடற்கரை ஒழுங்குமுறை, மீன்பிடி மேலாண்மை சட்டம்’ என்ற பெயரில் மீனவர்களை கடலோரத்தில் இருந்து அப்புறப்படுத்தும் நோக்கத்துடன் மத்திய அரசு ஒரு மசோதா கொண்டு வந்தது. அதேபோல, விவசாயிகளை விவசாயத்தில் இருந்து துரத்தியடித்து அந்த நிலங்களை பன்னாட்டு நிறுவனங்களுக்கு கூறுபோட்டுக் கொடுக்கத் துடிக்கிறது மத்திய அரசு. ‘சிறப்பு வேளாண் மண்டலம்’ அமைக்க வேண்டுமென எம்.எஸ்.சுவாமிநாதன் தொடர்ந்து பேசி வருவதைக் கவனிக்க வேண்டும். அரசும் இதற்கு முயற்சிக்கிறது. இருக்கும் விவசாயத்தை ஒழித்துவிட்டு யாரை வைத்து மண்டலம் அமைக்கப்போகிறார்கள்? அதுதான் பன்னாட்டு நிறுவனங்கள் இருக்கின்றனவே. எப்படி அமெரிக்காவின் கெண்டகி (கே.எஃப்.சி.) சிக்கனை தமிழக மக்களுக்குத் தின்னத் தருகிறார்களோ, அதுபோல தமிழக விவசாய நிலங்களை நாளை அந்நிய நிறுவனங்களுக்குத் தாரை வார்ப்பார்கள். பாரம்பரிய விவசாயிகளை அவர்களிடம் கூலிகளாக சேர்த்துவிட்டு ‘வேலைவாய்ப்பு’ என்பார்கள். வேளாண் மண்டலங்கள் முழு வீச்சில் நடந்தால் எதிர்காலத்தில் இதுதான் நடக்கும்.

கடந்த 2009 ஆகஸ்ட் மாதம் ஆசிய நாடுகளின் திறந்தநிலை வர்த்தக ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டு கையெழுத்திட்டது இந்தியா. இதன்படி 2010 ஜனவரியில் இருந்து 2016 வரைக்கும் விவசாய விளைப்பொருட்களை ஆசிய நாடுகள் இந்தியாவில் வியாபாரம் செய்யலாம். இப்படி இறக்குமதி செய்யப்படும் 3,200 பொருட்களுக்கு வரி கிடையாது என்பது மட்டுமல்ல, அந்தப் பொருளின் அளவையும் இந்தியா கட்டுப்படுத்தாது. இது அமலுக்கு வந்தால் தைவான், மலேசியா, கம்போடியா போன்ற நாடுகளில் இருந்து சமையல் எண்ணெய் உள்ளிட்ட பல பொருட்கள் இந்திய சந்தைக்குள் வரும். சீன பொருட்களால் இந்திய சிறு வியாபாரிகள் நலிவடைந்ததைப்போல, இந்த அந்நிய விவசாயப் பொருட்களால் உள்ளூர் வியாபாரம் கெடும்.

உள்நாட்டு விவசாயத்தை நலிவடையச் செய்வதும், அந்த இடத்தை வெளிநாட்டு நிறுவனங்களைக் கொண்டு நிரப்புவதுமே இன்றைய அரசின் விவசாயக் கொள்கையாகவும், வேலைத் திட்டமாகவும் இருக்கிறது. எப்படி தனியார் பேருந்துகளை அரதப் பழசாக ஓடவிட்டு, ‘இதுக்கு பிரைவேட் பஸ்ஸே தேவலாம்’ என்று மக்கள் வாயாலேயே சொல்ல வைத்து, தனியார் போக்குவரத்து ஊக்குவிக்கப்படுகிறதோ, அதுபோல விவசாயத்தை தாங்களாகவே கைவிடும்படியான சூழ்நிலை விவசாயிகளுக்கு உருவாக்கப்படுகிறது. எனவே, இந்த அரசு கூலித் தொழிலாளர் பிரச்னைக்கு தீர்வைத் தேடும் என்று நம்புவதற்கில்லை. அப்படியே தீர்வை தந்தாலும் ‘அது நிலத்தை ரிலையன்ஸ§க்குக் குத்தகைக்கு விடு. காசு கிடைக்கும்’ என்பது மாதிரிதான் இருக்கும்.

அதேநேரம் இந்தக் கூலித் தொழிலாளர் பிரச்சினையை பன்முகத் தன்மையுடன் அணுகும் போக்கும் தேவை. நடவு, களை எடுப்பது உள்ளிட்ட விவசாயத்தின் பல பகுதி வேலைகள் அசுரத்தனமான உழைப்பைக் கோருபவை. கால் புதையும் சேற்றில் 6 மணி நேரத்துக்கும் அதிகமாக குனிந்துகொண்டே இடுப்பொடிய நடவு நடுவதற்கு உச்சக்கட்ட உழைப்பு தேவை. ஒரு விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவன் என்ற அடிப்படையிலும் விவசாய வேலைகளின் உழைப்பு எத்தன்மையானது என்பதை அனுபவத்தில் அறிந்தவன் என்ற முறையிலுமே இதைச் சொல்கிறேன். காலங்காலமாக நமது உழைக்கும் வர்க்க மக்களின் உடல்கள் மீது இந்த வகை வேலைகள் பெரும் சுமையை செலுத்திக்கொண்டே இருக்கின்றன. மேலும்மேலும் உழைக்கச் சொல்லி ‘உழைப்பே உயர்வு’ போதனைகள் தொழிலாளர்களை நோக்கி வீசப்படுகின்றன.

இத்தகைய போதனைகளை நிகழ்த்தும் எந்த மத, பொருளாதார மேதைகளும் உடல் உழைப்பை செய்வதில்லை. ஆனால் தன் உடலை வருத்தி தொழிலாளி மேற்கொள்ளும் உழைப்பின் பலனை அனுபவிப்பவர்கள் அவர்கள்தான். எளிய மக்களின் உடலானது முதலாளிகளுக்கு லாபம் சம்பாதித்துக் கொடுக்கும் இயந்திரமாக மாற்றப்பட்டிருக்கிறது. இதன்பொருட்டே உழைப்பின் மேன்மை பற்றிய அறிவுரைகள் வழங்கப்படுகின்றன. இந்த நிலையை மாற்ற விவசாயத்தின் பல வேலைகள் இயந்திரமயமாக்கப்பட வேண்டும். அதற்கான நிதி மூலதனம், துறைகள் உருவாக்கப்பட்டு பரவலான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அப்போதுதான் உழைக்கும் மிருகமாக மாற்றப்பட்டிருக்கும் எளிய மக்களை அதிலிருந்து கொஞ்சமேனும் விடுதலை செய்ய முடியும். மனிதன் என்பவன் உழைக்க மட்டுமே பிறந்த பிராணி அல்ல. ‘தேவைக்கேற்ற உற்பத்தி’ போலவே தேவைக்கேற்ற உழைப்புதான் மனித வாழ்வின் யதார்த்தமானதாக இருக்க முடியும்.
Pin It