காந்தியார் அவர்கள் ஒரு சமயம் காலஞ்சென்ற திரு.ஆர்.கே.சண்முகம் செட்டியார் அவர்களுடன் உரையாடிக் கொண்டிருந்தார். இவர்கள் உரையாடலில் கடவுள், மதம், சாஸ்திரங்கள், பார்ப்பனர்-பார்ப்பனர் அல்லாதார் பிரச்சனை முதலியவைகள் முக்கிய இடம் பெற்றிருந்தன.

திரு.ஆர்.கே.சண்முகம் செட்டியார் அவர்களின் அறிவாற்றல் மிக்க வாதத் திறமை கண்டு காந்தியார் அயர்ந்து போனார்.

காந்தியார் அவர்கள் திரு. சண்முகம் செட்டியார் அவர்களைப் பார்த்து "ஆமாம் இவ்வளவு அழகாகவும், திறமையாகவும் விவாதிக்கின்றீர்களே இத்துறையில் தங்களுக்குக் குருவாக வாய்த்தவர் யார்? என்று கேட்டார்.

அதற்குச் செட்டியார் அவர்கள். இத்துறையில் எனக்குக் குரு தங்களின் மாஜி சீடரான நமது நண்பர் ஈரோட்டு இராமசாமி நாயக்கர் அவர்களேதாம்” என்று கூறினார்.

gandhiஇந்தச் செய்தி காந்தியாருக்கு மிக்க ஆச்சரியத்தை அளித்தது. "நமது நாயக்கரா தங்கள் குரு! அவர் இப்படிப்பட்ட கொள்கை உடையவர் என்பது எனக்கு இதுநாள் வரை தெரியாதே. இந்தப் பிரச்சனைகளில் எனக்கும் அவருக்கும் இருக்கின்ற கருத்து மாறுபாடுகளைப் பற்றி நாங்கள் இருவரும் சந்தித்து உரையாடித் தீர்த்துக் கொள்ள வேண்டும். எங்கள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யுங்கள்" என்று கூறினார்.

திரு. சண்முகம் செட்டியார் அவர்களும் அப்படியே ஆகட்டும் என்று கூறி விடைபெற்றுக் கொண்டு வந்து தந்தை பெரியார் அவர்களிடம் நடந்த செய்தியைக் கூறலானார்.

1927ஆம் ஆண்டு காந்தியார் ஓய்வுக்காகப் பெங்களூர் வந்து மகாராஜாவின் விருந்தினராக தங்கி இருந்தார். காலஞ் சென்ற திரு. எஸ்.ராமநாதன் அவர்களை அனுப்பித் தந்தை பெரியாராவர்களை அழைத்து வரும்படி கூறினார். தத்தை பெரியார் அவர்களும் திரு. ராமநாதன் அவர்களுடன் பெங்களூருக்குச் சென்று காத்தியார் அவர்களைச் சந்தித்தார்கள். காந்தியார் தங்கியிருந்த விடுதியின் வாயிலில் சென்று திரு.ராஜாஜி அவர்களும், தேவதாஸ் காந்தி அவர்களும் தந்தை பெரியார் அவர்களை வரவேற்றுக் சென்றனர். காந்தியாரிடம் அழைத்துச் சென்றனர்.

அங்குக் காந்தியாருக்கும் பெரியாருக்கும் நடந்த சொல்லாடலில் ஒரு பகுதி :

பெரியார் : இந்துமதம் ஒழிந்தாக வேண்டும்.

காந்தியார் : ஏன்?

பெரியார் : இந்து மதம் என்பதாக மதம் இல்லை.

காந்தியார் : இருக்கிறதே!

பெரியார் : இருப்பதாகப் பார்ப்பனர் கற்பித்து, அதை மக்கள் உள்ளத்தில் அப்படி நினைக்கும்படி செய்திருக்கிறார்கள்.

காந்தியார் : எல்லா மதங்களும் அப்படித்தானே?

பெரியார் : அப்படி அல்ல. மற்றவர்களுக்குச் சரித்திர சம்பந்தமான ஆதாரங்களும் மதக்காரர்களும் எல்லோராலும் ஒப்புக் கொள்ளக்கூடிய கொள்கைகளும் உண்டு.

காந்தியார் : இந்து மதத்துக்கு அப்படி ஒன்றும் இல்லையா?

பெரியார் : என்ன இருக்கிறது? ஒருவன் பிராமணன். ஒருவன் சூத்திரன், ஒருவன் பஞ்சமன் என்கிற இந்தப் பேத, பிரிவுத் தன்மையல்லாமல் வேறு என்ன பொதுக் கொள்கைகள், பொது ஆதாரங்ககள் இருக்கின்றன? அதுவும் பிராமணன் உயர்த்தவன், சூத்திரன், பஞ்சமன் தாழ்த்தவன் என்கிற தன்மை நடப்புத் தவிர வேறு என்ன இருக்கிறது?

காந்தியார் : சரி, அந்தக் கொள்கை யாவது இருக்கிறதே!

பெரியார் : இருந்தால் நமக்கு லாபமென்ன? அதனால் பார்ப்பனர் பெரிய ஜாதி நீங்களும் நாங்களும் சின்ன ஜாதி என்பதாக அல்லவா இருந்து வருகிறது?

காந்தியார் : நீங்கள் சொல்லுவது தவறு. வருண தர்மத்தில் சின்ன ஜாதி பெரிய ஜாதி என்பது இல்லை.

பெரியார் : இது தாங்கள் வாயால் சொல்லலாம்; காரியத்தில் நடவாது.

காந்தியார் : காரியத்தில் நடத்தலாம்.

பெரியார் : இந்து மதம் உள்ளவரை ஒருவராலும் நடத்த முடியாது.

காந்தியார் : இந்து மதத்தின் மூலம்தான்செய்யலாம்.

பெரியார் : அப்படியானால் பிராமணன், சூத்திரன் என்பதாக உள்ள மத ஆதாரங்கள் என்ன ஆவது?

காந்தியார்: நீங்கள்தாம் இந்து மதத்திற்கு ஆதாரங்கள் இல்லை என்கிறீர்களே?

பெரியார் : நான் மதமும் இல்லை. குறிப்பிட்ட ஆதாரமும் இல்லை. என்கிறேன். மதத்தை ஒப்புக் கொண்டால் ஆதாரங்களையும் ஒப்புக் கொள்ள வேண்டாமா?

காந்தியார்: மதத்தை ஒப்புக் கொண்டு ஆதாரங்களை நாம் ஏற்படுத்தலாமே.

பெரியார் : அதுதான் முடியாது. மதத்தை ஒப்புக் கொண்டால் அப்புறம் நாம் ஒன்றும் மாற்ற முடியாது.

காந்தியார்: நீங்கள் சொல்லுவது மற்ற மதங்களுக்குச் சரி. இந்து மதத்திற்கு அது பொருந்தாது. மதத்தை ஒப்புக் கொண்டு, மதத்தின் பேரால் நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். உங்களை ஆட்சேபிக்க எவனாலும் முடியாது.

பெரியார் : அதென்ன அப்படிச் சொல்லுகிறீர்கள்? அப்படி

என்றால் யார் சம்மதிப்பார்கள். அதற்கு என்ன ஆதாரம் என்று சொல்ல வேண்டாமா?

காந்தியார்: நீங்கள் சொல்லுவது எல்லாம் சரி. அதாவது இந்து மதம் என்பதாக ஒரு மதம் இல்லை. உண்மைதான். நான் ஒப்புக் கொள்கிறேன். அதற்குக் குறிப்பிட்ட கொள்கை இல்லை என்பதையும் நான் ஒப்புக் கொள்கிறேன்.ஆதலால்தான் நாம் ஒரு இந்து மதஸ்தன் என்பதை ஒப்புக்கொண்டு நம் இஷ்டம்போல் அதற்குக் கொள்கை ஏற்படுத்திக் கொள்ளலாம். இன்று இந்த நாட்டில், ஏன், உலகத்திலேயே சொல்லுகிறேன் மக்களை நாம் கருதுகிறபடி நல்வழிக்குக் கொண்டுவர வேண்டுமானால் இந்து மதம் ஒன்றினால்தான் முடியும். மற்ற மதங்களால்! முடியாது. ஏனென்றால் மற்ற மதங்களுக்குச் சரித்திர ஆதாரம், கொள்கை ஆதாரம் உண்டு. அவற்றில் கை வைத்தால் கையை வெட்டி விடுவார்கள். கிறிஸ்துநாதர் என்ன சொன்னாரோ அவர் சொன்னதாகச் சொல்லும் பைபிள் என்ன சொல்லுகிறதோ அந்தப்படிதான் கிறிஸ்தவர்கள் என்பவர்கள் நடத்தாக வேண்டும்.

முகம்மது நபி அவர்கள் என்ன சொன்னாரோ, குரான் என்ன சொல்லுகிறதோ அப்படித்தான் முஸ்லீம்கள் என்பவர்கள் நடத்தாக வேண்டும். மாறுபட்டு ஏதாவது ஒரு திருத்தம் சொன்னால், அது மத விரோதமாகி விடும். சொல்லுகிறவர் மதத்திற்கு வெளியில் வந்துதான் சொல்ல வேண்டும். உள்ளே இருந்து சொன்னால் ஒழித்து விடுவார்கள். இதுதான் உண்மையான மதங்கள் என்பவைகளில் தன்மை.

ஆனால் இந்து மதம் என்பது இல்லாத மதம் ஆனதால் அந்த மதத்தின் பேரால் யாரும் மகான்களாகி எதையும் சொல்லலாம். அப்படியே இந்து மதத்தில் ஏற்பட்ட பல பெரியோர்கள், மகான்கள் பலவற்றைச் சொல்லி இருக்கிறார்கள். ஆதலால், நாமும் அந்த மதத்தை வைத்துக்கொண்டே அநேக சீர்திருத்தங்களை இந்தக்கால மனித வர்க்கத் தேவைக்கு ஏற்றபடி செய்யலாம்.

பெரியார் : மன்னிக்க வேண்டும். அதுதான் முடியாது.

காந்தியார் : ஏன்?

பெரியார் : இந்து மதத்தில் உள்ள சுயநலக் கும்பல் அதற்குச் சற்றும் இடம் கொடுக்காது.

காந்தியார்: ஏன் அப்படிச் சொல்லுகிறீர்கள்? "இந்து மதத்தில் தீண்டாமை இல்லை" என்று சொல்லுவதை இந்து மதத்தினர் யாவரும் ஒப்புக் கொள்ளவில்லையா?

பெரியார் : ஒப்புக்கொள்வது என்பது ஒன்று. ஒப்புக்கொண்டபடி நடப்பது என்பது வேறு. ஆகையால், இது காரியத்தில் நடக்காது..

காந்தியார் : நான் காரியத்தில் செய்கிறேன். இந்த 4, 5 வருஷங்களில் எவ்வளவு மாறுதல் ஏற்பட்டிருக்கிறது என்பதை நீங்கள் உணரவில்லையா?

பெரியார் : உணருகிறேன். அடிப்படையில் மாறவில்லை. தங்களுக்கு உள்ள செல்வாக்கைக் கண்டும் தாங்கள் அவர்களுக்கு வேண்டி இருக்கிறது என்ற சுயநலத்துக்காகவும் ஒப்புக் கொண்டதாக நடிக்கிறார்கள். அதை தாங்கள் நம்புகிறீர்கள்.

காந்தியார் : (சிரித்துக் கொண்டே) யார் அப்படி நடிக்கிறார்கள்?

பெரியார் : பார்ப்னர்கள் யாவரும்தாம்.

காந்தியார் : எல்லாப் பார்ப்பனருமா?

பெரியார் : ஆம். ஏன்? தங்கள் கூட இருக்கும் பார்ப்பனர்கள் எல்லோரும்தாம்.

காந்தியார் : அப்படியானால் உங்களுக்கு ஒரு பார்ப்பனரிடம் கூட நம்பிக்கை இல்லையா?

பெரியார் : நம்பிக்கை ஏற்பட மாட்டேன் என்கிறது.

காந்தியார்: ராஜகோபாலாச்சாரியாரிடம் கூட உங்களுக்கு நம்பிக்கையில்லையா?

பெரியார் : அவர் நல்லவர். உண்மையானவர். தியாகி சுயநலமில்லாதவர். ஆனால், அவர்களது வகுப்பு நலனுக்கு அவர் உண்மையான தொண்டர். நல்ல தியாகி. அத்தொண்டில் சுயநலமில்லாதவர். ஆனால், என் வகுப்பு நலத்தை அவரிடம் ஒப்படைத்துவிடச் சுலபத்தில் எனக்கு மனம் வராது.

காந்தியார்: இது எனக்கு ஆச்சரியமாயிருக்கிறது. அப்படியானால் உலகத்தில் ஒரு பிராமணன் கூட யோக்கியதை இல்லை என்பது உங்கள் கருத்தா?

பெரியார் : இருக்கலாமோ என்னமோ? எனக்குத் தென்படவில்லை.

காந்தியார் : அப்படிச் சொல்லாதீர்கள். நான் ஒரு பிராமணரைப் பார்த்திருக்கிறேன். சந்தேகமற நான் இன்னும் அவரை நல்ல பிராமணன் என்றே கருதுகிறேன். அவர் யார் தெரியுமா? அவரீதாம் கோபால கிருஷ்ண கோகலே.

பெரியார் : அப்பாடா! தங்கள் போன்ற மகாத்மாவினுடைய கண்ணுக்கே இப்பெரிய உலகில் ஒரே ஒரு பிராமணன் தென்பட்டு இருந்தால் எங்களைப் போன்ற சாதாரணப் பாவிகள் கண்களுக்கு எப்படி உண்மைப் பிராமணன் தென்பட்டிருக்க முடியும்?

காந்தியார்: (சிரித்துக் கொண்டே) உலகம்! எப்போதும் இண்டெலிஜென்ஷியா (படித்த கூட்டத்தார்) ஆதிக்கத்தில் இருக்கும். பிராமணர்கள் படித்தவர்கள். அவர்கள் எந்தக் காலத்திலும் ஆதிக்கமுள்ளவர்களாசுத்தாம் இருப்பார்கள். ஆதலால், அவர்களைக் குற்றம் சொல்லுவதில் பயனில்லை. மற்றவர்களும் அந்த நிலைக்கு வர வேண்டும்.

பெரியார் : மற்ற மதங்களில் அப்படி. இல்லை. இந்து மதத்தில் மாத்திரம்தான் பார்ப்பனரே யாவரும் இஸ்டலிஜென்சியாவாக படித்தவர்களாக இருக்கிறார்கள். மற்றவர்கள் அநேகமாக 100-க்கு 90-க்கு மேற்பட்ட மக்கள் படியாதவர்களாக ஏமாளிகளாக இருக்கிறார்கள். ஆகவே, ஒரு சமுதாயத்தில் ஒரு ஜாதி மாத்திரமே இண்டலிஜன்ஷியாவாக (படித்தவர்களாக) ஆதிக்கக்காரர்களாக இருக்க முடியும் என்றால், அந்த மதம், அந்த ஜாதி தவிர்த்த மற்ற ஜாதியாருக்குக் கேடானதல்லவா? ஆதலால்தான் நான் அந்த மதம் பொய் மதம் என்பதோடு அந்த மதம் மற்றவர்களுக்குக் கேடானது ஆகலாம் ஒழிய வேண்டும் என்கிறேன்.

காந்தியார்: உங்கள் கருத்து என்ன இந்து மதம் ஒழிய வேண்டும். பிராமணர்கள் ஒழிய வேண்டும் என்பதாக தான் கருதலாமா?

பெரியார் : இந்து மதம் அதாவது இல்லாத - பொய்யாக - இந்த மதம் ஒழிந்தால் பிராமணன் இருக்க மாட்டான். இந்து மதம் இருப்பதால் பிராமணன் இருக்கிறான். நானும் தாங்களும் குத்திரர்களாக இருக்கிறோம். எல்லாவித ஆதிக்கமும் பிராமணர்கள் கையில் இருக்கிறது என்கிறேன்.

காந்தியார்: அப்படி அல்ல நான் இப்போது சொல்லுவதைப் பிராமணர்கள் கேட்கவில்லையா? இந்தச் சமயத்திலேயே யாவர்களும் சேர்ந்து நீங்கள் கருதுகிற குறைபாடுகளை இந்து மதத்தின் பேராலேயே நீக்கி விடலாமல்லவா?

பெரியார் : தங்களால் அது முடியாது என்பது எனது தாழ்மையான கருத்து. முடிந்தாலும் கூடத் தங்களுக்குப் பிறகு மற்றொரு மகான் தோன்றி முன்பு இருந்து வருவதை இப்போது தாங்கள் மாற்றுவது போல், இன்று தாங்கள் செய்ததை அந்த இன்னொரு மகான் மாற்றிவிடுவார்.

காந்தியார்: எப்படி மாற்றக்கூடும்?

பெரியார் : தாங்கள்தாம் இந்து மதத்தின் பேரால் எதையும் சொல்லி மக்களை நடக்கச் செய்யலாம் என்று சொன்னீர்களே! அதேபோல் நாளைக்கு வரப்போகும் மகானும் இந்து மதத்தின் பேரால் எதையும் செய்யலாமல்லவா?

காந்தியார்: இனி வரும் காலத்தில் அந்தப்படி மாற்ற எவராலும் சுலபத்தில் முடியாது.

பெரியார் : நான் சொல்லுகிறேன்; தாங்கள் மன்னிக்க வேண்டும். இந்து மதத்தை வைத்துக் கொண்டு இன்று தங்களாலேயே நிரந்தரமாக ஒன்றும் செய்துவிட முடியாது பிராமணர்கள் அவ்வளவு தூரம் விட்டுக் கொண்டிருக்க மாட்டார்கள். தங்கள் கருத்து அவர்களுக்கு விரோதமாகச் சற்றுப் பலிதமாகிறது என்று கண்டால் உடனே எதிர்க்க ஆரம்பித்து விடுவார்கள்.

இதுவரை ஒரு பெரியாராலும் இந்தத் துறையில் எந்தவிதமான மாறுதலும் ஏற்பட்டதில்லை என்பதோடு அப்படிப்பட்ட ஒருவரையும் பிராமணர்கள் விட்டுவைத்துக் கொண்டும் இருக்க மாட்டார்கள்.

காந்தியார்: உங்கள் மனத்தில் பிராமணர் மீது ஒரு தவறான எண்ணம் ஏற்பட்டு விட்டது. அதுவே உங்களுக்கு முன்னிலையில் இருக்கிறது. இது விஷயமாய் இவ்வளவு நேரம் நாமிருவரும் பேசியதில் இதுவரை நாம் எவ்வித ஒற்றுமை முடிவுக்கும் வரவில்லை என்பதாக நான் நினைக்கிறேன். ஆனாலும் இனியும் 2, 3 தடவை சந்திப்போம். பிறகு நாம் என்ன செய்யலாம் என்பதைப் பற்றிச் சிந்திக்கலாம் என்று சொல்லிக் கொண்டு படுக்கையில் இருந்தபடியே ஒரு கையால் தம் தலையை உருட்டித் தடவினார்.

பெரியாரும், இராமநாதன் அவர்களும் விடை பெற்றுக் கொண்டு கீழே இறங்கி வந்தார்கள். ஆச்சாரியார் அவர்கள் “என்ன முடிவுக்கு வந்தீர்கள்" என்று கேட்டார். பெரியார் இவ்வளவையும் ஒப்பித்தார். உடனே ஆச்சாரியார் உங்கள் சம்பாஷணை காந்தியாரின் ஒருமாத ஓய்வின் பலனை ஒழித்து இருக்கும்' என்று சொல்லிக் கொண்டே சிரித்தார். தேவதாஸ் காந்தி அவர்கள், “இன்னமும் இரண்டு நாளைக்கு இங்கேயே இருந்து மறுபடியும் ஒரு தடவை சந்தியுங்கள்'' என்றார். பெரியார் வெளியில் போய் வருவதாகச் சொல்லி விடைபெற்று வந்து, இராமநாதன் அவர்களிடம் தாம் அவசரமாய் ஊருக்குப் போக வேண்டி இருப்பதாக ஒரு மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்து அவரை அங்கேயே விட்டுவிட்டு வந்துவிட்டார்.

('குடி அரசு' 1927, 'உண்மை' 14-9-1970)

தொகுப்பு : பேரா. எ.பாவலன்

Pin It